Monday, 03 December 2007

★ தமிழ்ப் பதிவுகள் எப்படி இருக்கின்றன?

தமிழ்மணத்தில் பட்டியலிடப் பட்டுள்ள பதிவுகள் விவரப் படி 2404 பதிவுகள் தமிழ்மணத்தில் இணைக்கப் பட்டுள்ளன. தமிழ்மணத்தில் இணைக்கப் படாத பதிவுகளும் உண்டு...ஆகவே கிட்டத் தட்ட 3000 தமிழ்ப்பதிவுகள் எனக் கொள்ளலாம்... அவற்றில் தொடர்ந்து இயங்கும் பதிவுகள் மூலம் சராசரியாக தினமும் எழுதப் படும் இடுகைகள் சுமார் 200 இருக்கலாம்.( தமிழ்மணத்தில் 146)

தமிழ் வெகுசனப் பத்திரிகை உலகமும் தமிழ் வலைப்பதிவுகளை கவனிக்கவும் அங்கீகரிக்கவும் ஆரம்பித்துள்ளன. விகடன், குமுதம், குங்குமம், கல்கி, தினமலர், தினமணி போன்ற இதழ்களில் எல்லாம் தமிழ்ப்பதிவுகளின் உள்ளடக்கங்கள் வெளியிடப் பட்டு வருகின்றன.

வலைப்பதிவுலகின் "எல்லையில்லா இணையம்" என்ற கருத்தாக்கத்தின் விளைவாக பலரும் தொடத் தயங்கும் பல கருத்துக்களை வலைப்பதிவுகளில் காண முடிகிறது. இவற்றில் நச்சுக் கருத்துக்களும் இருக்கலாம்...அது சமூக ரீதியான காரணங்களால் நிகழ்வது...ஆனால் இணையத்தின் வீச்சு இன்று அவசியமானது.

தமிழ்வலைப்பதிவுகளை எடுத்துக் கொண்டால் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் தங்கள் தமிழார்வத்துக்கு வடிகாலாகவே தமிழ்ப்பதிவுகளை எழுதத் தொடங்கி இருந்தாலும் இன்று பரவலாக தமிழ்நாட்டிலும் தமிழ் வலைப்பதிவர்கள் கணிசமாக வலைப்பதிகிறார்கள்.

இது தவிர இங்கே காண முடிந்த ஒரு சுவாரசியமான விஷயம்... செல்பேசிகளில் எஸ்எம்எஸ் பழக்கம் இன்றைய இளைய தலைமுறையிடம் மிக அதிகமாக இருக்கிறது. செல்பேசி சிரிப்புகள், கடிகள், பொன்மொழிகள் என்று தனி அகராதியே போடுமளவுக்கு மக்கள் பரப்புரை செய்கிறார்கள்...இவர்கள் தமிங்கில மொழியை அனாயாசமாக பயன்படுத்துகிறார்கள்...இது தமிழ்வலைப்பதிவில் பெரும்பான்மையோரால் பயன்படுத்தப்படும் ரோமன் தட்டச்சு முறைக்கு ஒத்ததாக இருப்பதால் அதே தமிங்கில தட்டச்சில் தமிழையே வெளியீடாக கிடைப்பதில் தமிழ் வலைப்பதிவுலகிற்கும் இவர்களில் பலர் இன்று எளிதாக காலடி எடுத்து வைக்க காரணமாக இருக்கிறது...

ஆரம்பத்தில் இவர்கள் பெரிதாக படைப்பாக்கம் என்று செய்யாவிட்டாலும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்...நேரடி உரையாடல் முறையில் இவர்களின் வலைப்பதிவுகள் ரசிக்கவும் வைக்கின்றன. ஆனால் இவர்களில் பலர் நல்ல படைப்பாக்க முயற்சிகளையும் வலைப்பதிவுகளில் செய்ய முனைகிறார்கள்....சுவையான இளமைக் கவிஞர்கள் பலர் இவர்களில் இருந்து உருவாகி வருகிறார்கள்...

குரல் பதிவுகளான ஆடியோ பதிவுகளை சில ஈழத் தமிழ்ப்பதிவர்கள் முன்னெடுத்த போதிலும் இப்போது சற்று தொய்வு தென்படுகிறது....திரைப்படப் பாடல்கள் அடங்கிய ஆடியோ பதிவுகள் மட்டுமே இப்போது அதிகமாக வருகின்றன.

தாங்கள் ரசித்த வீடியோ, புகைப்படங்களையும் பலர் பதிவாக இடுகின்றனர். எனினும் பதிவுக்காகவே உருவான வீடியோ பதிவுகள் இதுவரை காணக்கிடைக்கவில்லை... வெப் கேமரா மூலம் பதிவு செய்யப் பட்ட வீடியோ பதிவு ஒன்றை (ஆங்கில வலைப்பதிவு) ஒன்றை காணமுடிந்தது..அது போன்ற முயற்சிகள் தமிழிலும் செய்யப் படலாம்...

நேற்று ஒரு புதிய முயற்சியாக இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு ஒன்று ஒளிபரப்ப ஆரம்பமாகி இருப்பதை காணமுடிந்தது...அதுவும் தமிழில் புதிய சாத்தியங்களுக்கான ஒரு ஆரம்பம் எனக் கொள்ளலாம்...வலைப்பதிவுகளிலும் இதுபோன்ற நிகழ்வுகள் வருவதன்மூலம் இணையத்தின் பல்லூடகத் தன்மையை வலைப்பதிவுகள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள இயலும்.