Monday, 03 December 2007
★ தமிழ்ப் பதிவுகள் எப்படி இருக்கின்றன?
தமிழ்மணத்தில் பட்டியலிடப் பட்டுள்ள பதிவுகள் விவரப் படி 2404 பதிவுகள் தமிழ்மணத்தில் இணைக்கப் பட்டுள்ளன. தமிழ்மணத்தில் இணைக்கப் படாத பதிவுகளும் உண்டு...ஆகவே கிட்டத் தட்ட 3000 தமிழ்ப்பதிவுகள் எனக் கொள்ளலாம்... அவற்றில் தொடர்ந்து இயங்கும் பதிவுகள் மூலம் சராசரியாக தினமும் எழுதப் படும் இடுகைகள் சுமார் 200 இருக்கலாம்.( தமிழ்மணத்தில் 146)
தமிழ் வெகுசனப் பத்திரிகை உலகமும் தமிழ் வலைப்பதிவுகளை கவனிக்கவும் அங்கீகரிக்கவும் ஆரம்பித்துள்ளன. விகடன், குமுதம், குங்குமம், கல்கி, தினமலர், தினமணி போன்ற இதழ்களில் எல்லாம் தமிழ்ப்பதிவுகளின் உள்ளடக்கங்கள் வெளியிடப் பட்டு வருகின்றன.
வலைப்பதிவுலகின் "எல்லையில்லா இணையம்" என்ற கருத்தாக்கத்தின் விளைவாக பலரும் தொடத் தயங்கும் பல கருத்துக்களை வலைப்பதிவுகளில் காண முடிகிறது. இவற்றில் நச்சுக் கருத்துக்களும் இருக்கலாம்...அது சமூக ரீதியான காரணங்களால் நிகழ்வது...ஆனால் இணையத்தின் வீச்சு இன்று அவசியமானது.
தமிழ்வலைப்பதிவுகளை எடுத்துக் கொண்டால் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் தங்கள் தமிழார்வத்துக்கு வடிகாலாகவே தமிழ்ப்பதிவுகளை எழுதத் தொடங்கி இருந்தாலும் இன்று பரவலாக தமிழ்நாட்டிலும் தமிழ் வலைப்பதிவர்கள் கணிசமாக வலைப்பதிகிறார்கள்.
இது தவிர இங்கே காண முடிந்த ஒரு சுவாரசியமான விஷயம்... செல்பேசிகளில் எஸ்எம்எஸ் பழக்கம் இன்றைய இளைய தலைமுறையிடம் மிக அதிகமாக இருக்கிறது. செல்பேசி சிரிப்புகள், கடிகள், பொன்மொழிகள் என்று தனி அகராதியே போடுமளவுக்கு மக்கள் பரப்புரை செய்கிறார்கள்...இவர்கள் தமிங்கில மொழியை அனாயாசமாக பயன்படுத்துகிறார்கள்...இது தமிழ்வலைப்பதிவில் பெரும்பான்மையோரால் பயன்படுத்தப்படும் ரோமன் தட்டச்சு முறைக்கு ஒத்ததாக இருப்பதால் அதே தமிங்கில தட்டச்சில் தமிழையே வெளியீடாக கிடைப்பதில் தமிழ் வலைப்பதிவுலகிற்கும் இவர்களில் பலர் இன்று எளிதாக காலடி எடுத்து வைக்க காரணமாக இருக்கிறது...
ஆரம்பத்தில் இவர்கள் பெரிதாக படைப்பாக்கம் என்று செய்யாவிட்டாலும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்...நேரடி உரையாடல் முறையில் இவர்களின் வலைப்பதிவுகள் ரசிக்கவும் வைக்கின்றன. ஆனால் இவர்களில் பலர் நல்ல படைப்பாக்க முயற்சிகளையும் வலைப்பதிவுகளில் செய்ய முனைகிறார்கள்....சுவையான இளமைக் கவிஞர்கள் பலர் இவர்களில் இருந்து உருவாகி வருகிறார்கள்...
குரல் பதிவுகளான ஆடியோ பதிவுகளை சில ஈழத் தமிழ்ப்பதிவர்கள் முன்னெடுத்த போதிலும் இப்போது சற்று தொய்வு தென்படுகிறது....திரைப்படப் பாடல்கள் அடங்கிய ஆடியோ பதிவுகள் மட்டுமே இப்போது அதிகமாக வருகின்றன.
தாங்கள் ரசித்த வீடியோ, புகைப்படங்களையும் பலர் பதிவாக இடுகின்றனர். எனினும் பதிவுக்காகவே உருவான வீடியோ பதிவுகள் இதுவரை காணக்கிடைக்கவில்லை... வெப் கேமரா மூலம் பதிவு செய்யப் பட்ட வீடியோ பதிவு ஒன்றை (ஆங்கில வலைப்பதிவு) ஒன்றை காணமுடிந்தது..அது போன்ற முயற்சிகள் தமிழிலும் செய்யப் படலாம்...
நேற்று ஒரு புதிய முயற்சியாக இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு ஒன்று ஒளிபரப்ப ஆரம்பமாகி இருப்பதை காணமுடிந்தது...அதுவும் தமிழில் புதிய சாத்தியங்களுக்கான ஒரு ஆரம்பம் எனக் கொள்ளலாம்...வலைப்பதிவுகளிலும் இதுபோன்ற நிகழ்வுகள் வருவதன்மூலம் இணையத்தின் பல்லூடகத் தன்மையை வலைப்பதிவுகள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள இயலும்.
04:35 Posted in star, வலைப்பதிவு, விமர்சனம் | Permalink | Comments (3) | Email this
| Tags: blogs, tamil blogs, தமிழ்ப்பதிவுகள் |
del.icio.us
|
|
Digg
Sunday, 19 August 2007
❒ வலைப்பதிவு அறிமுகம் பெறுவது எப்படி?
இப்போதெலாம் கூகுள் தேடுதலில் தமிழில் தேடினால் இணையப் பக்கங்கள் மட்டுமல்ல வலைப்பதிவுகளும் வந்து விடுகின்றன. எனவே வலைப்பதிவு அறிமுகம் கிடைப்பது இன்று இணையப் பரிச்சயம் உள்ளவர்களுக்கு மிக எளிதாகவே இருக்கிறது.
இன்னும் கணினியில் தமிழில் எழுதும் பரிச்சயம் வராதவர்கள் கூட திரட்டிகள் வாயிலாக முதலில் வலைப்பதிவுகளை படிக்கலாம்.
தமிழின் பிரதான வலைப்பதிவுத் திரட்டிகள்.
தமிழ்மணம் (http://www.thamizmanam.com)
தேன்கூடு (http://www.thenkoodu.com)
தமிழ்ப்பதிவுகள் (http://www.tamilblogs.com)
தமிழ்வெளி (http://www.tamilveli.com)
இவற்றில் தாங்களாக இணைந்து கொள்ளும் பதிவர்களின் பதிவுகள் திரட்டப் படுகின்றன.
சில நண்பர்களால் நல்ல வலைப்பதிவுகள் அடையாளம் காட்டப்பட்டு தொகுக்கப்படும் தமிழ் வலைப்பதிவுத் திரட்டி மாற்று (http://www.maatru.net).
இதே போன்று கில்லி (http://gilli.in) என்ற தளமும் தமிழ், ஆங்கிலப் பதிவுகளை தேர்ந்தெடுத்துத் தொகுக்கிறது.
வாரம் ஒரு ஆசிரியர் தன்னைக் கவர்ந்த வலைப்பதிவுப் பக்கங்களை அறிமுகம் செய்து தொகுப்பது வலைச்சரம் (http://blogintamil.blogspot.com)
தனியொருவராக தினந்தோறும் தான் படிக்கும் பதிவுகளில் தேவையற்றதை விலக்கி மற்றதைத் தொகுத்துத் தருகிறார் ஸ்னாப்ஜட்ஜ் (http://snapjudge.blogspot.com)
இவை போன்ற திரட்டிகள், திரட்டுகள் வாயிலாக சில நாட்கள் தமிழ் வலைப்பதிவுகளை வாசித்து வந்தாலே வலைப்பதிவுகள் என்பது என்ன? அதன் வீச்சு என்ன? அதன் சாதக பாதகங்கள் போன்றவை ஓரளவு புரிந்து விடும்.
இப்போது நீங்கள் வலைப்பதிவு வாசகராகி விட்டீர்கள். சில கருத்துக்களைப் படிக்கும் போது நீங்களும் பதில் சொல்ல விரும்பு கிறீர்கள். ஆனால் தமிழில் எழுதுவது எப்படி என்று உங்களுக்குத் தெரியவில்லை... என்ன செய்யலாம்?
நமது கணினிகளின் இயல்பான தட்டச்சு முறையாக ஆங்கிலம் தான் இருக்கிறது. எனவே கணினியைத் தமிழ் தட்டச்சுக்கு தயார் படுத்த தட்டச்சு இயக்கி தேவை. அவற்றை இணையத்திலிருந்து பதிவிறக்கி நிறுவிக் கொள்ள வேண்டும். அல்லது தமிழ்ச் செயலிகளில் உள்ள தமிழ் தட்டச்சு இயக்கிகளைப் பயன்படுத்த வேண்டும். முரசு, அழகி, குறள் போன்ற பல தமிழ்ச் செயலிகளில் தமிழ் தட்டச்சு செய்ய ரோமன், தமிழ்99, பாமினி போன்ற தமிழ் தட்டச்சு முறைகள் இருக்கின்றன. அவற்றில் நமக்குத் தேவையான முறையை தேர்ந்தெடுத்து தட்டச்சு செய்யலாம்
ஏற்கனவே தமிழ்தட்டச்சுப் பயிற்சி மேற்கொண்டவர்கள் கணினியிலும் பாமினி போன்ற யளனகப தட்டச்சு முறையில் தட்டச்சு செய்யலாம். இதுவரை தமிழ் தட்டச்சோ, கணினி எழுதுமுறையோ அறியாதவர்கள் அந்த முறையில் தட்டச்சு செய்வது மிகவும் சிரமம்
தமிழின் ஆரம்பகாலப் பதிவர்கள் செய்தது போல ரோமன் முறையில் தமிழில் எழுதும் முறை சட்டென்று புரிந்து விடும். உதாரணமாக ஆங்கிலத்தில் ammaa என்று எழுதினால் தமிழில் அம்மா என்று வரும். ஆங்கிலத்தில் எழுதினால் தமிழில் வரும் transliteration முறையில் ரோமன் தட்டச்சு முறை இருக்கிறது. இதை தமிங்கிலீஷ் தட்டச்சு என்று (கேலியாக) சொல்கிறோம். அஞ்சல் முறை என்பது பொதுப் பெயர்.
ஆரம்பப் புரிதல் எளிதாக இருந்தாலும் வழக்கப் படுத்திக் கொள்ளும் போது இதில் சில சிக்கல்கள் உள்ளன. முதலாவதாக இம்முறையில் தட்டச்சு செய்து பழகும்போது நம் மனம் தமிழை ஆங்கில எழுத்து வழியாகவே நினைக்கப் பழகுகிறது. கூ என்ற எழுத்தை தமிங்கில அஞ்சல் முறையில் எழுத kuu என்று (k-u-u மனதில் எழுத்துக் கூட்டி) எழுத வேண்டும்.
கூ என்பது க'கர மெய்யுடன் ஊ'காரம் இணைந்து வருவது. எனவே க+ஊ என்று தட்டச்சு செய்தாலே கூ என்று தட்டெழுதக் கூடிய எளிய தட்டச்சு முறையான தமிழ்99 முறையை ஆரம்பத்திலேயே பழகிக் கொள்வதால் குறைந்த விசையழுத்தங்களில் விஞ்ஞானப் பூர்வமாக தட்டெழுதப் பயிலலாம். இது 1999 ம் ஆண்டு நடைபெற்ற தமிழ் இணைய மாநாட்டில் அறிமுகம் செய்யப்பட்டு தமிழக அரசால் தரப்படுத்தப் பட்ட விசைப்பலகை முறையாக அங்கீகரிக்கப் பட்டது. இலங்கை, மலேசிய அரசாங்கங்களும் இந்த முறையை அங்கீகரித்துள்ளன.
எனவே தமிழுக்கான இந்த தட்டச்சு முறையில் தமிழ் எழுதக் கற்பது எளியதும் பயனுள்ளதுமாக இருக்கும். ஏற்கனவே தமிங்கில தட்டச்சு முறையில் வலைப்பதிவுப் பயிற்சி பழகிய மூத்த வலைப்பதிவர்கள் பலரும் கூட இன்று தமிழ்99 முறையின் சிறப்பையும் அவசியத்தையும் உணர்ந்து இப்போது இந்த முறையில் தட்டச்சு செய்கிறார்கள். இன்னும் சிலருக்கு இதில் ஆர்வம் இருந்தாலும் ஏற்கனவே பழகிய முறையை பழக்கம் காரணமாக கைவிட இயலாமல் இருக்கிறார்கள். எனவே ஆரம்பத்திலேயே தமிழ்99 முறையில் தமிழ் தட்டச்சு செய்ய பழகிக் கொள்வது நல்லது.
தமிழ் வலைப்பதிவுகளின் ஆரம்பக் காலத்தில் தமிழ் எழுது கருவிகளை தயாரித்து வழங்கிய சுரதா யாழ்வாணனும் தற்போது தனது புதுவை யூனிகோட் எழுதியில் (http://www.suratha.com/unicode.htm) தமிழ்99 தட்டச்சு (tam) முறையையும் இணைத்துள்ளார். இது இண்டர்நெட் எக்ஸ்புளோரரில் இயங்கும்.
பயர்பாக்ஸ் இணைய உலாவியைப் பயன்படுத்துபவர்கள் எழுதுவதற்கு தமிழா தமிழ்கீ ஆன்லைன் (http://developer.thamizha.com/tamilkey.html) பயன்படுத்தலாம். (தமிழ்க்கீ பயர்பாக்ஸ் எக்ஸ்டென்சனாகவும் வருகிறது. அதை நிறுவிக் கொண்டால் பயர்பாக்ஸ் மூலமாக இணையப் பயன்பாடுகளுக்கு பயன்படுத்தலாம்.)
தமிழ்99 முறையில் திரைவிசைப்பலகையுடன் கூடிய ஆன்லைன் எழுதுகருவி w3 தமிழ் இணைய விசைப்பலகை (http://wk.w3tamil.com)
இது போன்ற இணைய எழுதுகருவிகளே ஆரம்ப மறுமொழி இடுதலுக்கு போதுமானவை. இந்த கருவிகளின் திரையில் தமிழில் எழுத வேண்டியதை தட்டச்சு செய்து பின் அவற்றை தேர்வு செய்து வெட்டி தேவையான மறுமொழிப் பெட்டியில் ஒட்ட வேண்டும். (cut & paste). இவை இணையத்தில் இருப்பதால் எந்தக் கணினியில் இருந்தும் எங்கிருந்தும் இவற்றைப் பயன்படுத்தி எழுத முடியும்...
உங்களிடம் சொந்தமாக கணினி இருந்தால் அல்லது உங்கள் கட்டுப் பாட்டில் அலுவலகக் கணினி இருந்தால் தமிழா.காம் (http://thamizha.com) தளத்தில் இருந்து எகலப்பை - தமிழ்99 (http://thamizha.com/modules/mydownloads/singlefile.php?cid=3&lid=5) என்ற விசைப்பலகை இயக்கியை பதிவிறக்கி நிறுவிக் கொள்வது நல்லது.
இதன்மூலம் இணையத்தில் தமிழ் எழுத மட்டுமல்லாமல் நேரடியாகவே நோட்பேடு, வேர்ட்பேடு போன்ற விண்டோஸ் செயலிகளிலும் விண்டோசில் இயங்கும் எம் எஸ் ஆபீஸ் போட்டோஷாப் உள்ளிட்ட பிற செயலிகளிலும் கூட எப்போதும் நேரடியாக தமிழில் எழுத முடியும். மேலும் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் தந்துள்ள தமிழ்99 சிறப்பு வசதிகள், விதிகள் (http://www.tamilvu.org/Tamilnet99/keystand.htm) போன்றவற்றை இதில் தான் முழுமையாக பயன்படுத்த முடியும்.
-oOo-
இப்போது நீங்கள் வலைப்பதிவுகள் படிக்கவும் மறுமொழி விமர்சனங்கள் எழுதவும் ஆரம்பித்து விட்டீர்கள். அடுத்தது என்ன?
நீங்களும் ஒரு வலைப்பதிவை ஆரம்பித்து விட வேண்டியது தானே?
வலைப்பதிவு தொடங்குவது எப்படி?
அதற்கு முன்னால் ஒரு விஷயம்...
தமிழில் எழுதலாம் வாருங்கள், வலையில் பரப்பலாம் வாருங்கள் (http://kasilingam.com/wiki/doku.php?id=e-sangamam_1) என்று தமிழ்மணம் நிறுவனர் காசி மிகச்சிறந்த ஒரு தொடரை ஏற்கனவே எழுதியிருக்கிறார். அதில் அவர் பழைய பிளாக்கரில் வலைப்பதிய ஆரம்பிப்பது வரை சிறப்பான விளக்கமும் தந்திருக்கிறார்.
அதை நீங்கள் அவசியம் வாசிக்க வேண்டும்.
அடுத்து புதிய பிளாக்கர், வேர்ட்பிரஸ் உள்ளிட்ட சேவைகளில் பதிவு தொடங்குவது பற்றிய விளக்கங்களுடன் நான் தொடர்கிறேன்.
09:10 Posted in internet, இணையம், வலைப்பதிவு | Permalink | Comments (5) | Email this
| Tags: internet, blogs, வலைப்பதிவு, இணையம் |
del.icio.us
|
|
Digg
Friday, 17 August 2007
❒ வலைப்பதிவு என்றால் என்ன?
கணினி மற்றும் இணையத்தில் ஆங்கிலம் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில் கணினியில் தமிழ் எழுத முடியும்; அதை இணையத்தில் ஏற்ற முடியும் என்று அறிந்த உடன் பலவேறு எழுத்துருக்களால் அமைந்த இணையதளங்கள் தமிழிலும் உருவாக்கப் பட்டன. பொதுவாக தமிழ் ஆர்வலர் குழுக்கள், செய்தி நிறுவனங்கள் போன்றவையே அத்தகைய தளங்களை உருவாக்கி இருந்தனர். இந்நிலையில் யாகூ நிறுவனத்தின் geocities சேவையும் அது போன்ற சில சேவைகளும் இலவசமாகவே தளங்களை உருவாக்க வாய்ப்பு அளித்தன. எனவே ஏராளமான தனிநபர்களும் தங்களுக்கான இணைய தளங்களை உருவாக்கி தங்களைப் பற்றிய தகவல்களைப் பதிந்து வைத்தனர்.
தொடர்ந்து blogs எனப்படும் இணைய டைரிக் குறிப்புகள் புழக்கத்துக்கு வந்தன. ஆரம்பத்தில் blogdrive, livejournal போன்ற சேவைகள் பிரபலமாக இருந்தன. ஆங்கிலத்தில் blog எழுதிக் கொண்டிருந்த தமிழர்களில் சிலர் 2002 ஆண்டு வாக்கில் தமிழிலும் எழுத முற்பட்டனர். தொடர்ந்து தமிழில் நிறைய பிளாக்குகள் உருவாக தொடங்கின. blogger.com நிறுவன சேவை எளிமையாக கையாளக் கூடியதாகவும் இருந்ததால் பெரும்பாலானாவர்கள் அதையே விரும்பி செயல்படுத்தினர்.
அந்த காலகட்டத்தில் தமிழ் ஆர்வலர்களிடையே பிரபலமாக இருந்த யாகூ குழுமங்களில் திஸ்கி எழுத்துருவே பயன்படுத்தப் பட்டிருந்தது. ஆனால் நேரடியாக ஆங்கிலத்தில் இருந்து தமிழில் எழுத வந்ததாலோ என்னவோ பிளாக்கர்கள் யூனிகோடு குறிமுறையை பயன்படுத்தினர்.
ஆரம்ப பதிவர்கள் பிளாக்குகளை தமிழில் வலைப்பூ என்றும் வலைப்பதிவு என்றும் கூற ஆரம்பித்தனர். பின்னர் பெரும்பாலானவர்கள் வலைப்பதிவு என்ற பெயரையே பயன்படுத்தியதால் இன்று பிளாக் என்பது வலைப்பதிவு என்ற பெயராலேயே அறியப் படுகிறது.
பாமினி முதலான தட்டச்சு முறைகளைப் பயன்படுத்திய குழும மடல்களைப் போலன்றி இங்கே (அதே ஆங்கிலத்தில் இருந்து வந்த காரணமாக இருக்கலாம்) ரோமன் தட்டச்சு முறையே பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப் பட்டது.
சுரதா யாழ்வாணன் நேரடியாக தமிழை ரோமன் முறையில் எழுத ஆன்லைன் எழுதிகளை உருவாக்கினார். கூடவே
வலைப்பதிவு உருவாக்கும்போதே மறுமொழி எழுத அந்த நிரலிலேயே தமிழ் எழுதுகருவியை இணைத்துக் கொள்ளும் விதத்திலான அமைப்பையும் உருவாக்கி அளித்தார்.
இப்படியாக வலைப்பதிவு மூலம் தமிழ் எழுவது எளிமையாக இருப்பதை வாசகர்களாக வந்தவர்கள் உணர்ந்து தாங்களும் எளிதாக வலைப்பதிவுகளை ஆரம்பித்துக் கொண்டனர்.
பிளாக்கர் சேவையைத் தொடர்ந்து வேர்ட்பிரஸ் செயலியில் இயங்கும் weblogs.us என்னும் தளம் வலைப்பதிவு சேவையை அளிப்பது அறிந்து சிலர் அந்த சேவையைப் பயன்படுத்தி வலைப்பதிய ஆரம்பித்தனர். பின்னர் wordpress நிறுவனமே இலவச வலைப்பதிவு சேவையை ஆரம்பித்தது. பலரால் அந்த சேவையும் பயன்படுத்தப் படுகிறது. இவை தவிர yarl.net, yahoo 360, blogsome, blogneo, adada உட்பட இன்னும் நிறைய வலைப்பதிவுச் சேவைகள் இருக்கின்றன. அவற்றையும் பலர் பயன்படுத்துகின்றனர்.
movable type, neucleus, blog cms போன்று பலவித வலைப்பதிவு செயலிகள் பயன்படுத்தப் படுகின்றன. இப்போதைய பல வலைப்பதிவு சேவைகளும் wordpress கொண்டு இயங்குபவையாக உள்ளன. சொந்த தளத்தில் வலைப்பதிவு செய்பவர்களும் இப்போது பெரும்பாலும் வேர்ட்பிரஸ் வலைப்பதிவாகவே அவற்றை இயக்குகின்றனர்.
வலைப்பதிவில் என்ன எழுதப் படுகிறது?
பணிநிமித்தம் அயல் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் தங்கள் தமிழ் ஆர்வத்திற்கு ஒரு வடிகாலாகவே வலைப்பதிவுகளை பயன்படுத்த ஆரம்பித்தனர் என்று சொல்லலாம். இது தவிர வலைப்பதிவு என்பது ஒரு மாற்று ஊடகமாகவும் வளர்ந்து வருவதன் காரணமாக தமிழர்களிடையே வலைப்பதிவு ஆர்வமும் வளர ஆரம்பித்தது.
வலைப்பதிவு என்பது தனி இணையதளத்தைப் போலன்றி நேரடியாக வாசகரையும் எழுதுபவரையும் உடனுக்குடன் தொடர்புறுத்தும் ஒரு ஊடகம். வலைப்பதிவில் டைரிக்குறிப்பு போல அன்றாட அனுபவங்களையும் எழுதலாம். கதை, கவிதை,கட்டுரை என படைப்பாக்கமும் செய்யலாம். நிகழ்வுச் செய்திகளை பகிரலாம். திரைப்பட விமர்சனங்கள் செய்யலாம். எழுத்தில் எழுதக் கூடிய எதையும் வலைப்பதிவுகளிலும் எழுதலாம்.
அச்சு ஊடகம் போலன்றி வலைப்பதிவில் என்ன எழுதுகிறோமோ அதை வாசிப்பவர் அந்த நொடியிலேயே படைப்புக்கான விமர்சனத்தை மறுமொழியாகத் தந்து விட முடியும். எனவே வாசகரும் வலைப்பதிவரும் நேரடித் தொடர்பில் இருப்பவர்களாக இருக்கின்றனர். விரைவிலேயே வாசகரும் வலைப்பதிவராக மாறிவிடுவார். இவ்வாறு வலைப்பதிவர்களே வாசகர்களாகவும் வாசகர்களே வலைப்பதிவர்களாகவும் இருக்கும் நிலையே பெரும்பாலும் இருக்கிறது. வலைப்பதிவு பற்றி அறிந்து புதிதாக வாசகராகும் ஆர்வலர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இதன்மூலம் தமிழில் எழுதும் ஆர்வமும் திறமையும் வளர்கிறது. இது தவிர web.2.0 போன்ற இணைய வளர்ச்சியால் வலைப்பதிவுகளில் ஒலி, ஒளிக் காட்சிகளையும் காட்சிப் படுத்த முடிகிறது. இது வலைப்பதிவையும் ஒரு முழுமையான பல்லூடகமாக மாற வகை செய்தது.
இதனால் எழுத்துப் படைப்புகள் தவிர புகைப்படப் பதிவுகள், குரல் பதிவுகள், திரைப்பதிவுகள் என வலைப்பதிவுகளில் பன்முகத் திறமைகளுக்கு வாய்ப்பு இருக்கிறது.
தமிழில் வலைப்பதிவு தொடங்க என்ன செய்ய வேண்டும்?
1. முதலில் இணைய வசதியுடன் ஒரு கணினி சொந்தமாக இருப்பது நல்லது.
அல்லது
அலுவலகத்தில் உங்கள் பொறுப்பில் ஒரு கணினி இருந்தாலும் போதும். ;)
அதுவும் இல்லையா?
பரவாயில்லை...! கணினி மையம் ஒன்றில் சிறிது நேரம் செலவிட முடிந்தால் அதுவே போதுமானது.
(தொடரும் பகுதிகளில் நுட்பம் சார்ந்த தகவல்களும் செயல்முறை விளக்கங்களும் வரவிருக்கின்றன.)
06:55 Posted in internet, இணையம், வலைப்பதிவு | Permalink | Comments (11) | Email this
| Tags: blogs, பதிவுகள், தமிழ் |
del.icio.us
|
|
Digg

