Monday, 19 March 2007

❒ வருமானவரியிலிருந்து தப்பிக்க வழி

வருமான வரி கட்டாம இருக்க ஏதாவது செய்யணுமே!
மண்டை காய்கிறதா உங்களுக்கு; ரெடி...ஒன்...டூ...த்ரீ!


முன்பெல்லாம் வருமான வரி வரம்புக்குள் வருவோரை விட, இப்போது பல மடங்கு பெருகி விட்டதால், பிப்ரவரி மாதம் பிறந்துவிட்டால் போதும், பலருக்கும் ஆடிட்டர் நினைவு வந்துவிடும். எப்படியாவது வரியை குறைக்க ஏதாவது, செய்தாக வேண்டுமே, அவரிடம் ஐடியா கேட்க வேண்டுமே என்ற பரபரப்பு கூடிவிடுமே.

வருமான வரி கட்டுவது, அதற்குரிய "பான்' கார்டு எண் வைத்திருப்பது என்பதெல்லாம், நாம் இந்த நாட்டு குடிமகன், நாமும் நம் மக்கள் நல திட்டங்களில் பங்கேற்கிறோம் என்பதற்கான அடையாளம் தான். நாமும் வளர்ந்து, நம் நாடும் வளரத்தான் இதெல்லாம் என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

வருமான வரி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது தெரியுமா? ஒவ்வொரு நிதி ஆண்டிலும், ஏப்ரல் முதல் மார்ச் முடிய உங்கள் வருமானத்தை கணக்கிடப்படுகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதியில் வரும் 31ம் தேதி வரை கணக்கில் எடுத்து வரி கணக்கிடப்படும்.

நீங்கள் சம்பளதாரராக இருந்தால், ஆண்டு சம்பளம், வீடு, முதலீடு போன்றவை மீதான வருவாய் எல்லாம் சேர்க்கப்பட்டு மொத்தம் கணக்கிடப் படும். அப்படி கணக்கிடப்படும் தொகை, வருமான வரி விதிப்பு விலக்கு தொகையை மிஞ்சி இருந்தால், அதற்கு குறிப்பிட்ட சதவீதம் வரி போடப்படும்.

சம்பளதாரர் என்றால் அவர்களுக்கு மாத வருமானத்திலேயே, குறிப்பிட்ட தொகை "டாக்ஸ் டிடக்ஷன் அட் சோர்ஸ் என்ற "டி.டி.எஸ்.,' தொகை பிடிக்கப்படும். அதாவது, ஆண்டு இறுதியில் வருமானம் மீது வருமானவரி கட்டும் போது சிரமப்படக் கூடாது என்று தான் மாத வருவாயிலேயே பிடித்தம் செய்யப்படுகிறது.

சுயதொழில், வியாபாரம் செய்வோர் எல்லாம் ஆண்டு வருவாயை ஆடிட்டர் கொண்டு கணக்கிட்டு, அதற்கு வரி கட்ட வேண்டும்.

தப்ப முடியுமா?: ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய் வரை உள்ள வருமானத்துக்கு வரி கட்டாமல் தப்பலாம். அதுவரை விலக்கு அளிக்கப்படுகிறது. ஆனால், அதற்கு மேல், ஒரு லட்சத்து 50 ஆயிரம் வரை பத்து சதவீதம், ஒன்றரை லட்சத்தில் இருந்து இரண்டரை லட்சம் வரை உள்ள வருமானத்துக்கு 20 சதவீதம் என்று வருமானவரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில் பெண்களுக்கு ஒரு லட்சத்து 35 ஆயிரம் வரை, வருமான வரி கிடையாது. அதுபோல, 65 வயதுக்கு மேற்பட்ட, மூத்த குடிமகன்களுக்கு ஒரு லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் வரை வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

இந்தாண்டு போடப்பட்ட பட்ஜெட்டில் ஒரு லட்சம் வரை வரி விலக்கு என்பது ஒரு பத்தாயிரம் ரூபாய் ஏற்றி, ஒரு லட்சத்து 10 ஆயிரம் வரை வரி கிடையாது என்று சலுகை அளித்துள்ளார் நிதி அமைச்சர்.

நீங்க எவ்ளோ கட்டணும்?: உங்கள் ஆண்டு வருமானம் இரண்டு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் என்று வருகிறது என்று வைத்துக் கொள்வோம்.

* இதில் முதல் லட்சம் ரூபாய்க்கு வருமான வரி கிடையாது.

* ஒரு லட்சத்து 50 ஆயிரம் வரை 10 சதவீதம் வரி என்பதால், உங்களின் அடுத்த 50 ஆயிரத்துக்கு 10 சதவீதம் வரி பிடித்தம் கணக்கிடப்படும்.

* மீதியுள்ள வருமானம் 70 ஆயிரம் ரூபாய். அதற்கு 20 சதவீதம் அளவில் வரி கணக்கிடப்படும்.

இப்படி கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

வீடு வாங்கி விட்டால்: ஒரு லட்சம் ரூபாய் வருமானத்துக்கு வரி சலுகை கிடைத்தபின்னர், மீதி உள்ள வருமானத்துக்கு எப்படியாவது, வழி கண்டுபிடித்து, வரி கட்டாமல், செய்ய முடியுமா? ஏன் முடியாது, அதற்கு தான் அரசே, வழி சொல்கிறதே. அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தரும் பல சேமிப்பு திட்டங்கள், காப்பீட்டு திட்டங்கள், சுகாதார திட்டங் களுக்கு வருமானவரிச்சலுகை தருகிறது.

மற்ற எந்த சேமிப்பையும் காட்டிலும், வீடு வாங்க, வீட்டுலோன் வாங்கி இருந்தால் போதும், உங்களுக்கு போதுமான அளவில் வரிச்சுமை குறையும். மொத்தம் ஒரு லட்சம் ரூபாய் வரை, வருமானவரி சட்டத்தின் 80 சி பிரிவின் படி, வரிச்சலுகை பெறலாம்.

என்னென்ன?: கீழ்கண்ட வகையில் நீங்கள் சேமிப்போ, பாலிசியோ, வீட்டுக்கடனோ வாங்கியிருந்தால் மொத்தமாக சேர்த்து ஒரு லட்சம் ரூபாய் வரை கழித்துவிடலாம். அப்போது உங்கள் வருமானவரிக்குரிய வருவாய் மொத்த தொகை குறைந்துவிடுமே.

இதோ அந்த ஒரு லட்சம் ரூபாய் வரை கழிப்பதற்கு அனுமதிக்கப்பட்ட திட்டங்கள்:

* ஆயுள் காப்பீட்டு பாலிசி எடுப்பது.

* ஊழியர் சேம நல நிதியில் பணம் போடுவது.

* பொது சேம நல நிதியில் அதிகபட்சம் 70 ஆயிரம் ரூபாய் வரை சேமிக்கலாம்.

* தேசிய சேமிப்பு பத்திரம்.

* யுனிட் அடிப்படையிலான இன்சூரன்ஸ் திட்ட பாலிசி.

* வீட்டுலோன் மீதான மாத தவணை கட்டிய தொகை.

* மியூச்சுவல் பண்டில் இ.எல்.எஸ்.எஸ்., திட்ட சேமிப்பு.

* குடும்பத்தில் அதிகபட்சமாக இரண்டு குழந்தைகளின் கல்வி கட்டணம்

* ஐ.டி.பி.ஐ., ஐ.சி.ஐ.சி.ஐ., போன்ற கடன் பத்திரங்கள்.

* பென்ஷன் திட்ட பாலிசி.

இவை தவிர நன்கொடையையும் கழிக்கலாம். என்ன ஒரு ஐடியா கிடைத்ததா? இனி ஆடிட்டரை பாருங்கள்.

கட்டலேன்னா பிடிப்பாங்க: ஒரு லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் வாங்குபவர் என்றால், வருமான வரி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டாம். அதற்கு மேல் வருமானம் உள்ளவர் என்றால், மார்ச் 31 ம் தேதிக்குள் எல்லா சேமிப்புகளையும் கணக்கில் காட்டி, அறிக்கையை ஜூலை 31 ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

சம்பளதாரர் அல்லாத தொழில், வர்த்தக பிரிவினர் என்றால், அவர்களுக்கு அக்டோபர் 31 ம் தேதி வரை அவகாசம் உண்டு.

வருமான வரி அறிக்கையை சமர்ப்பிக்காமல் நழுவினால், கண்டுபிடித்து, அபராதம் 5 ஆயிரம் விதிக்கப்படும்.

சுகாதாரத்துக்கு சலுகை: வருமானத்தில் முதல் ஒரு லட்சம் வரை வரி இல்லை. மீதி ஒன்றரை லட்சம் பணத்துக்கு வரி கட்ட வேண்டும். அதில் ஒரு லட்சம் வரை வருமானவரி 80 சி யின் கீழ் சேமிப்புகளை காட்டி தப்பிவிட்டீர்கள்.

ஆனாலும், ஒரு 50 ஆயிரம் "இடிக்கிறதே' என்று புலம்புவீர்களானால், அதற்கும் வழி இல்லாமல் இல்லை. மெடிக்ளெய்ம் உட்பட சுகாதார இன்சூரன்ஸ் திட்டங்களில் அதுவும், வருமான வரி சட்டம் 80 டி க்கு உட்பட்ட திட்டங்களில் அதிகபட்சம் 10 ஆயிரம் வரை சேமிக்கலாம். அந்த 10 ஆயிரத்தை கழிக்கலாம். மீதம் 40 ஆயிரம் தான் நீங்கள் வரி கட்ட வேண்டிய வருமானம். அதிலும், குறைக்க வேண்டுமானால், அதற்கு நன்கொடை தந்தால், அதை கணக்கில் காட்டி கழிக்கலாம்.

செய்தி கட்டுரை நன்றி: தினமலர்