Thursday, 19 June 2008

❒ ரஜினியின் 20 அவதாரங்கள்

கமல் தசாவாதாரம் எடுத்தால் சும்மா விடுவார்களா ரஜினி பட இயக்குநர்கள்? குசேலன் படத்தில் நடிகராகவே நடிக்கும் ரஜினியை 20 விதமான வேடங்களில் ஒரே பாடல் காட்சியில் நடிக்க வைத்துள்ளாராம் பி.வாசு.

இந்தப் படத்தில் அஜித், விஜய், விக்ரம் கூட சில காட்சிகளில் நடிக்கப் போகிறார்களாம்.

மலையாளத்தில் மம்முட்டி-சீனிவாசன் இணைந்து நடித்த கதபறயும்போள் என்ற திரைப்படத்தின் ரீமேக்காக உருவாகும் இந்த திரைப்படம் தமிழில் ரஜினி-பசுபதி நடிக்க 'குசேலன்' ஆகவும், தெலுங்கில் ரஜினி-ஜெகபதிபாபு நடிக்க 'கதாநாயகடு'வாகவும் வெளிவருகிறது.

மலையாளத்தில் சீனிவாசன் ஜோடியாக நடித்த மீனா தமிழில் பசுபதிக்கு ஜோடி சேருகிறார். நயன்தாரா, சினேகா உடபட பல நாயகிகள் ரஜினியுடன் நடித்திருக்கிறார்கள்

ஜூலை இறுதியில் குசேலன் வெளிவர இருக்கிறது.

Image and video hosting by TinyPic

Wednesday, 28 November 2007

★ ரஜினி, விஜய் மற்றும் பாமக

பதினாறு வயதினிலே திரைப்படத்தில் பரட்டையாக வந்தார் ரஜினி. நடிகர் விஜய் எல்லாப் படங்களிலும் பரட்டைத் தலையுடன் நடித்து வருகிறார். இதுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்?

எதுவுமே இல்லை. ஆனால் இருவருக்கும் இருந்த பொருத்தம், இருவரின் படங்களிலும் புகைபிடிக்கும் காட்சிகள் சரளமாக அமைந்திருக்கும். அதுவே அவர்களின் நாயகத் தன்மைக்கான ஸ்டைலாகவும் திரைப்படங்களில் கட்டமைக்கப் பட்டிருக்கும்.

பாபாவில் ரஜினியின் புகைப் பிடிக்கும் போஸ்தான் போஸ்டர்களில் பிரதானமாக இடம்பெற்றிருந்தது. பாமக ரஜினிக்கு எதிரான தனது போராட்டங்களை இது போன்ற காட்சிகளுக்கு எதிரானதாக காட்டி மக்களின் ஆதரவையும் திரட்டியிருந்தது.

விளைவு, ரஜினியின் அடுத்த படங்களில் புகைக்கும் காட்சி எதுவும் இல்லை. இப்போது ரஜனியின் அந்தப் பழக்கத்தை மேற்கொள்பவர் நடிகர் விஜய்...

மத்திய சுகாதார அமைச்சர். அன்புமணி இம்முறை விஜய்க்கு புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிக்க வேண்டாம் என்று அறிவுரை கூறியிருந்தார். உடனடியாக விஜயும் இனி அம்மாதிரி காட்சிகள் தன்படங்களில் இடம்பெறாமல் பார்த்துக் கொள்வதாக அறிவித்து விட்டார்.

பாமகவின் கலாச்சாரக் காவலர் அவதாரம் பல நேரங்களில் அத்துமீறிப் போய்விடுவதாக தோன்றியதுண்டு. ஆனால் இதுபோன்ற செயல்பாடுகள் நிச்சயம் அவசியமானவை தான்.

நடிகர்களையே இன்றைய இளைய தலைமுறை தங்கள் ஆதர்ச புருசர்களாக நினைத்து வளர்கின்ற சூழலை நமது பல்லூடகங்கள் ஏற்படுத்தி வருகின்றன. திரையரங்கில் படம் பார்த்து தீவிர ரசிகர்களாக மாறுபவர்களை விட பலமடங்கு அதிக பாதிப்பை இன்று சின்னத்திரை வழியாக பெரிய திரைக் காட்சிகள் அளித்து வருகின்றன.

நன்றி: பாலபாரதி, மலைநாடான்.
இந்தப் படத்துக்கும் பதிவுக்கும் இருக்கும் தொடர்பு ;) புகை!!!!!!

பக்கத்து வீட்டு பிளஸ்டூ மாணவி நோட்டுப் புத்தகம் வாங்கிவர தன் தம்பியை கடைக்கு அனுப்பினாள். சூர்யா படம்போட்டது தான் வேண்டும் என்றாள். தம்பி கடைக்குப் போய் சூர்யா படம் இல்லை என்று விஜய் படம் போட்ட நோட்டுப் புத்தகத்தை வாங்கி வந்து தந்தான். உடனே தம்பியை விரட்டி மீண்டும்அதைத் திருப்பிக் கொடுத்து வேறு கடையில் சூர்யா படம்போட்ட புத்தகம் வாங்கித் தரும்வரை அவள் விடவில்லை...அதைவிட நோட்டுப் புத்தகம் கைக்கு வந்ததும் அவள் செய்த செயல் என்ன தெரியுமா?.... உயிருக்குயிரான காதலனை முத்தமிடுவது போல அவள் அந்தப் புத்தகத்தில் இருந்த சூர்யா படத்தை முத்தமிட்டாள். பருவ வயதின் ஆர்வக்கோளாறு தான் என்றாலும் ஒரு குறிப்பிட்ட நடிகரின் மேல் இத்தனை கிரேஸ் வர காரணமாக இருந்தவை தொலைக்காட்சி சானல்கள் தான். இத்தனைக்கும் அந்தப் பெண் திரையரங்கில் சினிமா பார்த்ததே இல்லை.

Thursday, 12 July 2007

❒ அரசியலில் ரஜினி!

சிவாஜி திரைப்பட வெளியீட்டுக்குப் பிறகு மீண்டும் ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றிய கிசுகிசுக்களை பத்திரிகைகள் எழுப்பத் தொடங்கியுள்ளன. மூன்றாம் அணி அமைப்பாளர்களில் ஒருவரான சந்திரபாபு நாயுடு ரஜினியை அரசியலுக்கு கொண்டுவர தீவிரமாக முயற்சி மேற்கொண்டிருப்பதாக தெரிகிறது. சமீபத்தில் அரசியலுக்கு வந்து குறிப்பிடத்தக்க வெற்றிகளையும் வளர்ச்சியையும் சந்தித்துக் கொண்டிருக்கும் விஜயகாந்தைப் பார்த்து அரசியல் சபலம் ரஜனிக்கு மீண்டும் வரலாம்.

விஜயகாந்தின் அரசியல் பிரவேசம் தந்த நம்பிக்கையால் நடிக்ர் சங்கத்தலைவர் சரத்குமாரும் அரசியல் பிரவேசத்துக்கு நாள் குறித்துக் கொண்டிருக்கிறார். அவர் சாதிப் பின்னணி பலத்துடன் தனது அரசியல் கனவுக்கு வளம் சேர்க்கத் துடிக்கிறார்.

இவர்களின் அரசியல் பிரவேசங்கள் எந்த அளவுக்கு வெற்றி பெறும்? காமராசர் ஆட்சி என்ற கோசங்களுடன் கனவு காணும் சரத்குமாரும், தேசியம், நதிநீர் இணைப்பு என மேம்போக்கான அரசியல் கனவைக் கொண்டுள்ள ரஜனியும் எந்த அளவுக்கு அரசியலில் வெற்றி பெறுவார்கள்?

விஜயகாந்தின் அரசியல் வெற்றிக்குப் பின்னால் இருப்பது என்ன என்று சிந்தித்தால் அவர் சாதாரண மனிதனின் உணர்ச்சியை தட்டி எழுப்பி தனக்கு சாதகமாக சிந்திக்க வைத்தார். "இன்றைய அரசியல்வாதிகள் எல்லோரும் ஊழல்பேர்வழிகள், அவர்கள் ஓட்டுப் போடத் தரும் காசு உங்கள் காசு. அதை வாங்கத் தயங்காதீர்கள். உங்கள் காசை நீங்கள் வாங்கிக் கொண்டு எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள்" என்றார். இதன் பின்னுள்ள நியாய அநியாயங்களைவிட இதிலுள்ள தர்க்கம் பாமரனைச் செருக்கு கொள்ளச் செய்தது. பொதுநிலை வாக்காளன் இந்த தர்க்கநிலையில் மயங்கியதில் ஆச்சரியமே இல்லை.

இதுவே தமிழகம் முழுவதும் ஓட்டு வங்கிகளையும் கட்சித் தொண்டர்களையும் கொண்டுள்ள கட்சிகளை பல மீறிக்கொண்டு விஜயகாந்தால் பெருமளவு வாக்குகளைப்பெற முடிந்த ரகசியம். ஆட்சியைப் பிடிக்குமளவு இல்லாவிட்டாலும் ஆட்சியை நிர்ணயிக்கும் சக்தியாக விஜயகாந்த் வளர்ந்து வருவதை மற்ற கட்சிகள் அசூயையோடு பார்த்து வரும் நிலையில் செல்வாக்குள்ள சக நடிகர்களுக்கும் ஆசை கிளர்வதில் ஆச்சரியமில்லை.

எனவே இதுவரை வருவேன்-வரமாட்டேன் என்ற சொற்களால் சிலம்பாட்டம் நடத்திக் கொண்டிருந்த ரஜினியை அரசியலுக்கு கொண்டு வர அவரது ஆரசியல்வாதி நண்பர்களும் மீண்டும் தீவிரமாக முயற்சி மேற்கொண்டுள்ளனர். பூனைக்குட்டி வெளியில் வருமா?

அப்படி வந்தாலும் விஜயகாந்தின் தந்திரமோ அரசியல் நெளிவு சுழிவுகளோ ரஜனிக்கு இருக்கிறதா என்பது சந்தேகமே. தேசியம், நதிநீர் போன்ற எதிர்காலக் கனவுகள் காண்பதற்கு நமது அன்றாடங்காய்ச்சி வாக்காளனுக்கு நேரம் இருக்கிறதா?

திரைப்படங்கள் ஓடுவது பற்றி கூறும்போது A சென்டரில் ஓடியது B சென்டரில் ஓடியது C சென்டரில் ஓடியது என்பார்கள். B,C யில் நன்றாகப் போனால் தான் படம் வெற்றி பெற முடியும். A யில் நன்றாக ஓடினால் நல்ல படம் என்ற பெயர் தான் கிடைக்கும்.

சினிமாவில் C சென்டர் ரசிகனால் சூப்பர் ஸ்டாராக்கப் பட்டவர் ரஜினி. அரசியலில் ரஜினி, சரத் தரும் முன்னோட்டங்கள் A சென்டருக்கு ருசிக்கலாம். விஜயகாந்த் போல C யைக் கவரும் அம்சங்கள் எதுவும் அவர்களிடம் இல்லை.

விஜயகாந்தைப் பொறுத்தவரை தீர்மானமான இலட்சியங்கள் எதுவும் அவரிடமும் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் சினிமா போலவே அரசியலிலும் நடிப்பும், திட்டமிட்ட இமேஜ் கட்டமைப்பும் மேற்கொண்டு தன்னை நிலைநிறுத்த முடிந்திருக்கிறது.

ரஜினிக்கு அது சாத்தியமா?

Monday, 11 June 2007

❒ சும்மா அதிருதில்லே?!

டிக்கெட் வாங்கினவங்கெல்லாம் கையத் தூக்குங்கப்பா!

Image and video hosting by TinyPic

Image and video hosting by TinyPic


அடுத்த ஒரு மணிநேரம் உங்களுக்காக...

ரஜினி யின் சிவாஜி தமிழ் சினிமா புகைப்படத் தொகுப்பு...

(எச்சரிக்கை:
ஆணி பிடுங்கிற நேரத்தில் இதைப் பார்த்துக் கொண்டிருந்தால் அதன் பின்விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல...)



இதெல்லாம் கொஞ்சம் ஓவராத் தெரியலை?

Friday, 27 April 2007

❒ 10 ஆண்டுக்குப்பின் ரசிகர்கள் - ரஜினி சந்திப்பு

ரசிகர்கள் திரண்டனர்: ரஜினிகாந்த் அவசர ஆலோசனை

சென்னை, ஏப். 27-

சென்னை கோடம் பாக்கத்தில் ரஜினிக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இந்த சந்திப்பு நடந்தது.

தமிழ்நாடு முழுவதும் இருந்து வந்திருந்த ரசிகர்கள், மன்ற பொறுப்பாளர்கள் காலை 8 மணிக்கு திருமண மண்டபம் எதிரில் திரண்டனர். பெயர், உறுப்பினர் அட்டை விபரங்களை நுழைவாயில் நின்ற பாதுகாவலர்கள் சரி பார்த்து அவர்களை உள்ளே அனுப்பினார்கள்.

ரஜினி ரசிகர்கள் அனை வருக்கும் அங்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது. பூரிக்கிழங்கு, இனிப்பு, மாம்பழ ஜுஸ், மினரல் வாட்டர் பாட்டில் பரிமாறப்பட்டன. ரஜினி 11 மணிக்கு மண்டபத்துக்கு காரில் வந்து இறங்கினார். வெள்ளை நிற வேட்டி-சட்டை அணிந்திருந்தார். அவரைப் பார்த்ததும் ரசிகர்கள் வாழ்த்து கோஷமிட்டனர். ஒரு மணி நேரம் ரசிகர்களை சந்தித்தார். பின்னர் ஒவ்வொருவராக ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

அப்பொழுது ரசிகர்கள் பலர் காலில் விழுந்தனர். அவர்களைத்தடுத்து தூக்கி நிறுத்தினார். பின்னர் கை குலுக்கினார்கள்.அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த முரளி, இருதயராஜ், பழனி, சுகுமார், வேங்கடபதி ரஜினி டில்லி ஆகியோர் ரஜினி உருவம் பொறித்த 1 1/2 பவுன் மோதிரங் களை கொண்டு வந்திருந்தனர். அவற்றை ரஜினி கையால் தங்கள் விரல்களில் போட வைத்து படம் எடுத்தார்கள்.

சைதாப்பேட்டை ரஜினி ரசிகர் கோபி, தனது 4 1/2 வயது இரட்டை குழந்தைகள் அஸ்வின், அஜய் ஆகியோருடன் வந்தார். குழந்தைகளை ரஜினி தனது அருகில் நிறுத்தி போட்டோ எடுத்தார். ஒரு மணி நேரம் ரசிகர்களுடன் இருந்து விட்டு பகல் 12 மணிக்கு புறப்பட்டுச் சென்றார்.

ரசிகர்களை ரஜினி பல ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இன்று சந்தித்தது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

ரசிகர் மன்ற பொறுப்பாளர் ஒருவர் கூறும்போது, "1996-ல் ரசிகர்களை ரஜினி கடைசியாக சந்தித்தார். அப்போது அருணாச்சலம் படம் ரிலீஸ் ஆகி இருந்தது. அதன் பிறகு இப் போதுதான் ரசிகர்களை சந்தித்ததோடு தனித்தனியாக போட்டோவும் எடுத்துக் கொண்டார். இது எங்களுக்கு மகிழ்ச்சி அளித்தது என்றார்''.

ரஜினி அரசியலுக்கு வருவார் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு பரபரப்பாக செய்திகள் வெளி யானது. ஏற்கனவே தனது ஆதரவை அரசியல் கட்சி களுக்கு வெளிப்படையாகத் தெரிவித்தார்.

தி.மு.க-த.மா.கா. கூட் டணி உருவானபோது அக்கூட்டணியை ஆதரித்து அறிக்கை விட்டு ஆட்சி மாற்றத்துக்கு காரணமாக அமைந்தார். பாராளுமன்ற தேர்தலின் போது பாரதீய ஜனதாவை ஆதரித்தார். சில தேர்தல்களில் யாரையும் ஆதரிக்காமல் அமைதியாக இருந்தார். பா.ம.க. மற்றும் ரஜினி ரசிகர்கள் மோதல் உருவான போது ரஜினியின் அரசியல் பிரவேசம் உறுதி என நம்பப்பட்டது.

அப்போதும் அரசியலுக்கு வருவதை தவிர்த்து ஒதுங்கினார். அதன் பிறகு ரசிகர்களை யும் சந்திக்காமல் இருந்தார்.

இப்போது அவசரமாக ரசிகர் மன்ற பொறுப்பாளர் களை சென்னைக்கு அழைத்து சந்தித்ததும் ஒவ்வொருவருடனும் புகைப்படம் எடுத்துக் கொண்டதும் பல்வேறு எதிர் பார்ப்புகளை கிளப்பி விட்டுள்ளது.

`சிவாஜி' படம் அடுத்த மாதம் ரிலீசாக உள்ளது. அதை விழாக்கோலமாக கொண்டாட ரசிகர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். ரஜினியுடனான இந்த சந்திப்பு ரசிகர்களை மேலும் ஊக்க மூட்டி இருப்பதாக ரசிகர் ஒருவர் தெரிவித்தார். தொடர்ந்து ரசிகர்களை ரஜினி சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினியின் திடீர் மாற்றம் எதிர்காலத்தில் பல்வேறு புதிய முடிவுகளை எடுக்க வைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ரஜினி சந்திப்பு குறித்து அகில இந்திய ரஜினி ரசிகர் மன்ற தலைவர் சத்திய நாராயணனிடம் கேட்டபோது, ரசிகர்களை ரஜினி சந்தித்து 10 வருடங்களுக்கு மேலாகி விட்டது. ரசிகர்கள் நேரில் சந்திக்க கோரிக்கை வைத்தனர். எனவேதான் அவர்களை ரஜினி சந்தித்தார்

என்றார்.அப்போது சென்னை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற தலைவர் ஓம்சேகர் உடன் இருந்தார்.

=மாலைமலர்

Monday, 02 April 2007

❒ ஒண்ணும் ஒண்ணும் நாலு

சிவாஜி படத்தோட சிடி வெளியாவதற்கு முன்னமே இணையத்தில் வெளியாகி இயக்குநருக்கு தலையிடியும் ரசிகர்களுக்கு கொண்டாட்டமும் தீவிர ரஜினி ரசிகர்களுக்கு வருத்தத்தையும் தந்திருக்கு. என்றாலும் பாடலை அவர்களும் பதிவிறக்கி ரசித்திருப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

நமக்குத்தான் பதிவிறக்குவதில் பயங்கர பிரச்சினை. இணையத்தில் கேட்கமுடிகிற பாட்டை எப்படியோ ஓட்டி ஓட்டி கேட்டாச்சு. முதல்ல வெளியான பாட்டுங்க மட்டும் தான் ஓரளவு தேறும். முதல் பார்வையில் எனக்கு பெரிய அளவு சிறப்பானதாக தோன்றவில்லை. ஆனாலும் ரஹ்மான் பாட்டுகள் கேட்க கேட்கத்தான் ருசிக்கும் என்ற அளவில் 'கொஞ்சநாள் பொறு தலைவா...'

-oOo-

கிரிக்கெட்டு மேல பயித்தியமா இருந்தவங்க பல பேர். கிரிக்கெட் என்றாலே ஆவலாக இருந்தவங்க இப்போ அதை சீண்டறதில்ல போல... இருக்கட்டும் விடைதேடும் வினாவுல ஒரு கிரிக்கெட் வசன போட்டி இருக்குங்க... நீங்க திட்டறதுக்கான போட்டி தான். அதனால் தவறாமல் கலந்து கொள்ளுங்க...

அதிரடிப்போட்டி: கிரிக்கெட் சந்திப்பு.

-oOo-

அப்புறம் வலைமொழி இணையச்சிற்றேடு வாசித்து விட்டீர்களா?

தல பாலபாரதி கலக்கல் பேட்டி,
தமிழ்நதி, சுப்பையா சிறுகதைகள்
நவீன்பிரகாஷ், விஷி, செந்தில் கவிதைகள்
பொன்ஸ், வெற்றிவளவன் கட்டுரைகள்.

http://valaimozhi.in

-oOo-

இரவல் சிந்தனை ஒன்று

உன்னிடம் ஒரு ஆப்பிள் என்னிடம் ஒரு ஆப்பிள் இருக்கிறது. என்னிடமுள்ள ஆப்பிளை நான் உனக்கும் உன்னிடமுள்ள ஆப்பிளை நீ எனக்கும் தந்தால் மறுபடியும் உன்னிடம் ஒன்று என்னிடம் ஒன்று தான் இருக்கும்.

உன்னிடம் ஒரு கருத்து, என்னிடம் ஒரு கருத்து இருக்கிறது. என்னிடமுள்ள கருத்தை நான் உனக்கும் உன்னிடமுள்ள கருத்தை நீ எனக்கும் தந்தால் உன்னிடம் இரண்டு கருத்தும் என்னிடம் இரண்டு கருத்தும் இருக்கும்.

ஒரு புதிர்:

கிட்டத்தட்ட இதே கருத்துள்ள திருக்குறள் ஒன்றும் உண்டு. அது எது சொல்லுங்க பார்க்கலாம்.

Sunday, 01 April 2007

❒ சிவாஜியின் 7 பாடல்களும் ரிலீஸ்

`சிவாஜி'யின் 7 பாடல்களும் இண்டர்நெட்டில் `ரிலீஸ்'

சேலம், ஏப். 1-

நடிகர் ரஜினிகாந்தின் மெகா பட்ஜெட் படமான "சிவாஜி'' மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

`சிவாஜி' பட பாடல்கள் அதிகாரப்பூர்வமாக நாளை (2-ந் தேதி) உலகமெங்கும் வெளியிடப்படுகிறது. இந்த மாத இறுதி அல்லது மே மாத தொடக்கத்தில் படம் ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவாஜி படத்தின் 3 பாடல்களை மர்ம நபர்கள் திருட்டுத்தனமாக இண்டர்நெட்டில் வெளியிட்டு விட்டனர்.

இது ரஜினிகாந்துக்கும், இயக்குனர் சங்கருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இண்டர்நெட்டில் வெளியிட்ட நபர் யார்? என்று விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில் சிவாஜி படத்தின் அனைத்து பாடல்களும் சி.டி.கவர் படத்துடன் இண்டர்நெட்டில் வெளியாகி உள்ளது.

இந்த பாடல்கள் அனைத்தும் www hood.music net works.com என்ற வெப்சைட்டில் நேற்று மாலை வெளியாகி உள்ளது.

* சூரியனோ, சந்திரனோ யார் இவனோ,
* காவிரி ஆறும் கைகுத்து அரிசியும் மறந்து போகுமோ,
* பூபோ வாய் ஆம்பல் ஆம்பல்,
* சகானா சாரல் தூவுதோ,
* தீதீ ஜெகஜோதி,
* ஸ்டைல் ஸ்டைல்,
* சகாராவில் பூக்கள் பூத்ததோ

ஆகிய 7 பாடல்கள் வெளியாகி உள்ளன.

இதில் `வாஜி, வாஜி, சிவாஜி' என்ற பாடல் டைட்டில் பாடலாக ஒலிக்கிறது. `ஆம்பல், ஆம்பல்' என்ற பாடல் கருத்து செறிவுடன் இளைஞர்களை உற்சாகப்படுத்துகிறது. `சகாராவின் பூக்கள் பூத்ததோ' என்ற பாடலும், `ஸ்டைல், ஸ்டைல்' என்ற பாடலும் ரசிகர்களை ஜனரஞ்சகப் படுத்துகிறது.

பாடல் கேசட் வெளியீட்டு விழா நடப்பதற்கு முன் பாகவே சிவாஜியின் அனைத்து பாடல்களும் இண்டர் நெட்டில் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

=மாலைமலர்

Thursday, 29 March 2007

❒ 50 ரூபாய்க்கு சிவாஜி டிவிடி

50 கோடி முதலீட்டில் அரும்பாடு பட்டு தயாரிக்கப்பட்ட சிவாஜி படத்தின் திருட்டு டிவிடி 50 ரூபாய்க்கு சென்னை நகர பிளாட்பாரங்களில் கூவிக் கூவி விற்கப்படுகிறது.

[தொடர்ச்சி...]

Thursday, 22 March 2007

❒ சிவாஜி பட பாடல்கள்

வலையில் உலவும் சிவாஜி படத்தின் மூன்று பாடல்கள் என்று பதிவு போட்டு ரொம்ப வருத்தப் பட்டிருக்கார் கார்த்திகேயன். இதில வருத்தம் என்ன வேண்டிக் கிடக்குன்னு எனக்கு புரியலை.

பாட்டு ஒரிஜினல் இல்லேங்கிறீங்க. அப்புறம் எதுக்கு வருத்தம். இந்த பாட்டை கேட்டு வச்சிருந்தா ஒரிஜினல் வந்ததுக்கப்புறம் ஒப்பிட்டு பார்க்கலாமில்ல. எது நல்லா இருக்குன்னு...ஒரிஜினல் இதை விட கேவலமா இருந்துடப் போகுது ;(

உண்மையிலேயே ஒரிஜினல்னு வைங்க... அப்பவும் இதைக் கேட்கிறதுல எந்த பாவமும் இல்லை. எப்ரல் 4 ரிலீஸ்னு சொல்லிட்டு 3 பாட்டை மட்டும் ரிலீஸ் செஞ்சிருந்தாக்க அவங்க ரசிகர்களை ஏமாத்தறாங்கன்னு தான் சொல்லணும். அப்ப அவங்களை ஏமாத்தறதில எந்த தப்பும் இல்லை.;)

Friday, 16 March 2007

❒ சாதனையை நோக்கி சந்திரமுகி

Image and video hosting by TinyPic

'ஹரிதாஸ்' சாதனையை 'சந்திரமுகி' முறியடிக்குமா?

700 நாட்களை தாண்டி ஓடுகிறது


ரஜினிகாந்த் நடித்த 'சந்திரமுகி' படம், 700 நாட்களைத்தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. 'ஹரிதாஸ்' படத்தின் சாதனையை, 'சந்திரமுகி' நெருங்கிக்கொண்டிருக்கிறது.

'ஹரிதாஸ்'

தமிழ் பட வரலாற்றிலேயே மிக அதிக நாட்கள் ஓடி சாதனை புரிந்த படம், 'ஹரிதாஸ்.' இந்த படம், ஒரே தியேட்டரில் 784 நாட்கள் ஓடி வரலாற்று சாதனை படைத்தது.

இது, தியாகராஜ பாகவதர் கதாநாயகனாக நடித்த படம். அவருக்கு ஜோடியாக பிரபல பாடகி என்.சி.வசந்த கோகிலம் நடித்து இருந்தார். டி.ஆர்.ராஜகுமாரி, 'ரம்பா' என்ற தாசியாக வில்லியாக நடித்து இருந்தார். இவருடைய அழகில் மயங்கி, பாகவதர் தனது சொத்துக்களை எல்லாம் இழப்பது போல் கதை அமைக்கப்பட்டு இருந்தது.

1944-ம் வருடம் தீபாவளி பண்டிகை அன்று 'ஹரிதாஸ்' திரைக்கு வந்தது. சென்னை பிராட்வே தியேட்டரில், தினசரி 2 காட்சிகளாகவும், சனி, ஞாயிறில் 3 காட்சிகளாகவும் 112 வாரங்கள் ஓடி சாதனை படைத்தது.

'சந்திரமுகி'

பாகவதர் நடித்த 'ஹரிதாஸ்' படத்தின் சாதனையை, ரஜினிகாந்த் நடித்த 'சந்திரமுகி' படம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. கடந்த 2005-ம் வருடம் ஏப்ரல் மாதம் 14-ந் தேதி, இந்த படம் திரைக்கு வந்தது. சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரித்து, பி.வாசு டைரக்டு செய்திருந்தார்.

ரஜினிகாந்த் ஜோடியாக நயன்தாராவும், பிரபு ஜோடியாக ஜோதிகாவும் நடித்து இருந்தார்கள். தமிழ் பட வரலாற்றில், மிக அதிக நாட்கள் ஓடி சாதனை புரிந்த பட வரிசையில், 'சந்திரமுகி' யும் இடம்பெற்று இருக்கிறது.

700 நாட்கள்

சென்னை சாந்தி தியேட்டரில் திரையிடப்பட்ட 'சந்திரமுகி,' தொடர்ந்து 700 நாட்களை தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. தொடர்ந்து 800 நாட்கள் வரை 'சந்திரமுகி' படம் ஓடி, 'ஹரிதாஸ்' படத்தின் சாதனையை முறியடிக்கும் என்று சிவாஜி புரொடக்ஷன்ஸ் ராம்குமார் தெரிவித்தார்.

செய்தி: தினத்தந்தி

All the posts