Monday, 16 July 2007

❒ பதிவர்களுக்கு கொண்டாட்டம்!

தமிழ்ப்பதிவர்களுக்கு கொண்டாட்டம் தான். வலைப்பதிவர் சந்திப்புகள் என்று யார் தொடங்கினார்கள் என்று தெரியவில்லை. இதிலும் ஆதி எது என்று ஆராயப் புகுந்து வாங்கிக் கட்டிக் கொள்ள நான் தயாரில்லை ;)

இருந்தாலும் சென்னை, மதுரை, டெல்லி என உள்ளூரிலும் அமெரிக்கா ஆஸ்திரேலியா அமீரகம், சிங்கை என உலகின் பல பாகங்களிலும் இருந்து பதிவர் சந்திப்பு பற்றிய பதிவுகள் வரும்போது வாசிக்க ஏற்படும் ஆர்வமும் நாமும் வாசிப்பின் ஊடாக அந்த நிகழ்வுகளில் பங்களிப்பதும் முகம் தெரியாத மனிதர்களை முகாமுகம் காண்பதில் உள்ள ஆர்வமும் எல்லாமே சுவையானவை.

இப்படி வலைப்பதிவர் சந்திப்பாக மட்டுமே இருந்ததை சற்று பயனுள்ளதாக மாற்றி குறிப்பிட்ட நிகழ்வுகளைத் திட்டமிட்டு ஒருங்கிணைத்து பாலபாரதி சென்னை வலைப்பதிவர் சந்திப்புகளில் இன்னொரு மாற்றத்தை உருவாக்கினார். முன்னதாக அமெரிக்க துணைக்கண்டத்திலும் தொழில்நுட்ப அறிமுகங்கள் சார்ந்து ஒரு சந்திப்பு நடந்தது. ஏப்ரல் 22ல் நடைபெற்ற சென்னை பதிவர் சந்திப்பில் சாகரன் நினைவு மலர் வெளியீடு உட்பட நிகழ்ச்சி நிரல்களை திட்டமிட்டு செயல்படுத்தினார்.

அதைத் தொடர்ந்து கோவையில் செல்லா ஏற்பாடு செய்து பாலபாரதியால் மே 20 அன்று நடத்தப் பட்ட நிகழ்வு தொழில் நுட்பரீதியாக பதிவர் சந்திப்பை பதிவர் பட்டறையாக முன்னேற்றியது. டெலிகான்பரன்சிங் உட்பட இந்த பட்டறையில் நுட்ப வசதிகளுடன் பதிவுநுட்ப அறிமுகங்கள் கொடுக்கப் பட்டன.

இதன்மூலம் பதிவர் சந்திப்பு பதிவர் பட்டறையாக மாறி இதோ ஆகஸ்ட் 5 அன்று மாபெரும் பதிவர் திருவிழா நடக்க இருக்கிறது. இது பதிவர்களுக்கும் பதிவராக விரும்புகிறவர்களுக்கும் தொழில் நுட்ப ரீதியாக தமிழ் வலைப்பதிவுகளைப் பற்றி அறிய உதவ இருக்கிறது. வலைப்பதிவர்களுக்கு நுட்ப ரீதியாக ஏற்படும் சந்தேகங்களை தீர்க்கவும் புதியவர்களுக்கு தமிழில் எழுதும் முறைகளை புரிய வைக்கவும் இந்தப் பட்டறை திட்டமிட்டிருக்கிறது.

சென்னைப் பல்கலைக் கழக தமிழ்த் துறையின் மெரினா வளாக அரங்கில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. 2007 ஆகஸ்ட் 5 காலை ஒன்பதரை மணி முதல் மாலை ஐந்து மணி வரை இந்த பட்டறை ஒழுங்கு செய்யப் பட்டுள்ளது.

கட்டணம் ஏதும் இல்லை. குறிப்புகள் எடுக்க ஏடு, பேனா முதல் தேநீர், நன்பகல் உணவு வரை அனைத்தும் நிகழ்ச்சி அரங்கிலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. வெளியூர் நண்பர்கள் சென்னையில் தங்கும் வசதியும் செய்யப் படுகிறது.

தமிழ் வலைப்பதிவர்களுக்கு நுட்பம் சார்ந்த விசயங்களை அறிமுகம் செய்யவும் புதிதாக வலைப்பதிய விரும்புகிறவர்களுக்கு தமிழில் எழுதுவது முதல் வலைப்பதிவு துவங்குவது வரை செயல்முறைப் பயிற்சி வழங்கவும் திட்டமிடப் பட்டுள்ளது.

இதற்கென tamilbloggers.org என்னும் வலைத்தளம் தொடங்கப் பட்டுள்ளது. தொடர் அறிவிப்புகள் http://www.tamilbloggers.org/blog என்னும் வலைப்பதிவில் வெளியிடப் படுகின்றன. பட்டறையில் பங்கேற்க விரும்பும் நண்பர்கள் தங்கள் பெயர்களை இந்த தளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

மேலும் தமிழில் எழுதவும் இணையத்தில் ஆர்வமும் உள்ள வலைப்பதிவர் அல்லாத நண்பர்கள், மாணவர்களை இந்த பட்டறையில் கலந்து கொள்ள தூண்டலாம். இது தமிழ் வலைப்பதிவர்கள், தமிழில் எழுதக்கூடியவர்கள் பலரை உருவாக்க உங்கள் பங்களிப்பாக இருக்கும்.