Thursday, 15 March 2007

❒ பத்து பைசா பாக்கிகள்!

"ஐயா காசு கொடுங்க..."

"ஏன்யா பிச்சக்காரங்கல்லாம் பஸ்ல ஏறி உயிர வாங்கறிங்க..."

"நான் பிச்சை கேக்கலை மீதி சில்லரை தானே கேட்டேன்."

"சில்லரையோட வர்றதுமில்ல. சும்மா தொணதொணங்கிறானுவ..."

கடைசி வரை அந்த பயணிக்கு கண்டக்டர் மீதி சில்லரை தரவுமில்லை.

ஒரு மாதம் கழித்து அந்த கண்டக்டரும் பேருந்து நிலைய மேலாளரும் நுகர்வோர் நீதிமன்றத்தில் அந்த கிராமவாசிக்கு வழங்க வேண்டிய மீதி சில்லரையை அபராதத்துடன் வழங்கினார்கள்.

கிராமவாசி தன் வீட்டருகே வசித்த பள்ளிக்கூட வாத்தியாரின் உதவியுடன் ஒரு மனுவை மட்டுமே நுகர்வோர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.

முக்கியமாக சாதாரண வழக்குகள் போல ஈட்டுத் தொகைக்கேற்ற நீதிமன்றக் கட்டணம் கட்ட வேண்டியதில்லை. வாதாட வழக்கறிஞர் தேவையில்லை.

(மீதி சில்லரைக்கு அந்த கண்டக்டர் டிக்கெட்டின் பின்புறம் எழுதியிருந்த குறிப்பு மட்டுமே ஆதாரம்,சாட்சி எல்லாம்.)

நுகர்வோர் உரிமைகள்

அமெரிக்க அதிபர் ஜான் எப். கென்னடி 15 மார்ச், 1962 அன்று அமெரிக்கப் பாராளுமன்றத்தில் நுகர்வோர் உரிமைக்காக குரல் கொடுத்தார்.

அந்த நாளின் நினைவாக 15 மார்ச் 1983 அன்று முதல் 'சர்வதேச நுகர்வோர் உரிமை தினம்' கடைப்பிடிக்கப்பட்டது. இரண்டு வருடங்கள் கழித்து ஐக்கிய நாடுகள் சபை ஏப்ரல்- 4, 1985 அன்று நுகர்வோர் பாதுகாப்பிற்கு சர்வதேச வழிமுறைகளை அமல்படுத்தியது.

*நுகர்வோருக்குப் பாதுகாப்பு உரிமை
* தகவல் அறிவதற்கான உரிமை
* தேர்ந்தெடுப்பதற்கான உரிமை
* தங்கள் கருத்தை வெளியிடுவதற்கான உரிமை
* அடிப்படைத் தேவைகளின் திருப்தி பற்றிய உரிமை
* இழப்பை ஈடுசெய்ய கோரும் உரிமை
* கல்வி கற்பதற்கான உரிமை
* சுகாதாரமான சுற்றுசூழலுக்கான உரிமை

என்னும் அடிப்படை விதிமுறைகளின் அடிப்படையில் நுகர்வோர் சட்டங்கள் பல்வேறு நாடுகளில் இயற்றப் பட்டு அமல் படுத்தப் படுகிறது.

காலாவதியான பொருட்களை விற்பது, அதிக விலைக்கு விற்பது, எடை, அளவு குறைவாக விற்பது, போலியான பொருளை விற்பது ஆகியவை நுகர்வோருக்கு எதிரான குற்றங்களாகும்.

பற்றுச்சீட்டு வாங்காமல் பொருட்களை வாங்குவதில்லை என்ற உறுதி மொழியை அனைவரும் மேற்கொள்ள வேண்டும் என்பதே நுகர்வோர் விழிப்புணர்வின் அடிப்படை.

-oOo-

பாக்கி பத்துப் பைசாவானாலும் கேட்டு வாங்கணும்.