Thursday, 19 June 2008

❒ ரஜினியின் 20 அவதாரங்கள்

கமல் தசாவாதாரம் எடுத்தால் சும்மா விடுவார்களா ரஜினி பட இயக்குநர்கள்? குசேலன் படத்தில் நடிகராகவே நடிக்கும் ரஜினியை 20 விதமான வேடங்களில் ஒரே பாடல் காட்சியில் நடிக்க வைத்துள்ளாராம் பி.வாசு.

இந்தப் படத்தில் அஜித், விஜய், விக்ரம் கூட சில காட்சிகளில் நடிக்கப் போகிறார்களாம்.

மலையாளத்தில் மம்முட்டி-சீனிவாசன் இணைந்து நடித்த கதபறயும்போள் என்ற திரைப்படத்தின் ரீமேக்காக உருவாகும் இந்த திரைப்படம் தமிழில் ரஜினி-பசுபதி நடிக்க 'குசேலன்' ஆகவும், தெலுங்கில் ரஜினி-ஜெகபதிபாபு நடிக்க 'கதாநாயகடு'வாகவும் வெளிவருகிறது.

மலையாளத்தில் சீனிவாசன் ஜோடியாக நடித்த மீனா தமிழில் பசுபதிக்கு ஜோடி சேருகிறார். நயன்தாரா, சினேகா உடபட பல நாயகிகள் ரஜினியுடன் நடித்திருக்கிறார்கள்

ஜூலை இறுதியில் குசேலன் வெளிவர இருக்கிறது.

Image and video hosting by TinyPic

Saturday, 14 June 2008

❒ தசாவதாரம் விமர்சனம் + விமர்சனங்கள்

தசாவதாரம்

Image and video hosting by TinyPicசோழர் காலத்து ரெளத்திரம் மிகுந்த வைணவ இளைஞன் முதல் ஜார்ஜ் புஷ் வரை 10 அவதாரங்களில் கம்பீரமாக வலம் வருகிறார் கமலஹாசன்!

இரண்டரை ஆண்டு கால எதிர்பார்ப்புடன் செல்லும் கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்ல; அனைத்து சினிமா ரசிகர்களையும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆட்கொண்டு விடும் அளவுக்கு 'தசாவதாரம்' படத்தின் துவக்கமே, சீட்டின் நுனிக்குச் செல்ல வைக்கிறது.

பனிரெண்டாம் நூற்றாண்டில் துவங்குகிறது கதை..! "சிவம் மட்டுமே கடவுள்; கோவிந்த பெருமாள் சிலையை அகற்றுங்கள்" என்று உத்தரவிடுகிறார், குலோத்துங்க சோழன். இது நடப்பது சிதம்பரத்தில்.

அப்போது, வெகுண்டெழும் ரெளத்திரம் கொண்ட வைணவ இளைஞன் ரங்கராஜன் நம்பி (கமல் நெ.1), சோழப் படை வீரர்களை பந்தாடுகிறான். அவனிடம், " 'ஓம் நமசிவாய' என்று சொன்னால் உயிர் பிச்சை; இல்லையேல் சிலையுடன் கட்டிக் கடலில் வீசப்படுவாய்" என்று சோழ மன்னன் சொல்ல, நம்பியும் "ஓம்" என்று ஆரம்பிக்கிறான். ஆனால், "நமோ நாராயணாய" என்று முடித்து, வீரச்சாவுக்கு ஒப்புக்கொள்கிறான்...

இப்போது 2004... அமெரிக்காவில் ஆராய்ச்சித்துறையில் முக்கிய விஞ்ஞானிகளுள் ஒருவராக பணிபுரிகிறார் கோவிந்த் (வேறு யார், கமல்தான்). அவர் வகிக்கும் ஆராய்ச்சிக் குழு, உலகை அழிக்கும் வைரஸ் கிருமி ஒன்றைக் கண்டுபிடிக்கிறது. அந்தக் கிருமியை நாச வேலைக்குப் பயன்படுத்துவதற்கு அக்குழுவின் தலைவர் முற்படுகிறார்.

இதையறிந்த கோவிந்த், வைரஸ் குப்பியை எடுத்துக் கொண்டு ஓடுகிறார்... ஓடுகிறார்.... அவரை அதிபர் புஷ்சின் உத்தரவுடன் எஃப்பிஐ ஒருபுறமும், கூலிப்படைகள் மறுபுறமும் துரத்துகின்றன. அந்தக் குப்பி, சிதம்பரத்துக்கு வந்து சேருகிறது...

இதற்கு இடையே, நிகழ்பவைதான் சுவாரஸ்யாமான திரைக்கதையும் கமலஹாசன்களின் அணிவகுப்பும்!

சோழர் காலத்து ரெளத்திர வைணவ இளைஞன், அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், மனநிலை பாதித்த பாட்டி, ஜப்பானிய கராத்தே மாஸ்டர், பஞ்சாபி பாடகர், நியாயம் கோரும் தலித் இளைஞன், அமெரிக்க கொலை வெறியன்,

அப்பாவியாய் வார்த்தைகளை உதிர்க்கும் முஸ்லிம் இளைஞன், அசராத விஞ்ஞானி, தெலுங்குகார உளவுத்துறை அதிகாரி...

யப்பா... இவர்களில் எங்கே கமல் இருக்கிறார் என தேட வேண்டியிருக்கிறது. 'தத்ரூபம்' என்பதற்கு கமல் என்று பொருள் போலும்! ஃபேன்ஸி ட்ரெஸ் காம்பட்டிஷன் போல் ஆகிவிடாத ஒப்பனை மற்றும் வேறுபடுத்திக் காட்டுவதற்கான சிரத்தைக்காகவே, பத்து அவதாரங்களை தரிசிக்கலாம்.

வெவ்வேறு கதாப்பாத்திரத்துக்கும் அவற்றுக்கு உரிய பாவனை, சைகை மொழி, பேச்சு என ஒவ்வொன்றிலும் தனித்துவத்தைக் காட்டியிருப்பது மகத்துவம்.

பத்து கமலில், வைணவ இளைஞனும், தலித் இளைஞனும், பல்ராம் நாயுடும் நூற்றுக்கு நூறு மார்க் வாங்கிவிடுகின்றனர். கமலஹாசனின் கலையுலக வாழ்க்கையில், 'தசாவதாரம்' ஒரு மைல்கல்!

கமலஹாசனின் திரைக்கதை, அவரது அனுபவத்தையும், சினிமா அறிவையும் வெகுவாக வெளிப்படுத்துகிறது.

அடுத்து சபாஷ் பெறுபவர், இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார். பத்து கதாப்பாத்திரங்களைக் குழப்பாமல், படத்தை நகர்த்தியதிலேயே அவரது முழு திறமையும் பளிச்சிடுகிறது.

கமலுக்கு உகந்த நாயகியாக, நடிப்பிலும் சளைக்காதவராக வரும் அசின், ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துவிடுகிறார்; வழக்கம்போல், ஊறுகாயாக காட்டப்பட்டுள்ளார், மல்லிகா ஷெராவத்.

நெப்போலியன், நாகேஷ், பி.வாசு, ரகுராம், சந்தான பாரதி, எம்.எஸ்.பாஸ்கர் என பலரும் தங்களது பங்களிப்பை சிறப்பாக பதிவு செய்துள்ளனர்.

பத்து அவதாரங்களுக்கு தனித்துவம் ஏற்படுத்தித் தந்த ஒப்பனையை பாராட்டியே ஆகவேண்டும். ரவி வர்மனின் ஒளிப்பதிவில் உலகத் தரம் மிளிருகிறது. படத்தின் கலை இயக்கம், படத்தொகுப்பு, நடனம், பாடல்கள், சவுண்ட் என அனைத்துப் பிரிவுகளிலும் முத்திரைப் பதிக்கப்பட்டுள்ளது.

கிராஃபிக்ஸை உருப்படியாக பயன்படுத்திய தமிழ்த் திரைப்படங்களில், தசாவதாரம் முன்னிலை வகிக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இதற்கு 'சுனாமி' காட்சிகள் சான்று. ஹிமேஷ் ரேஷமையாவின் இசையில் 'முகுந்தா', 'கல்லை மட்டும் கண்டால்' ஆகியவை நச். தேவிஸ்ரீ பிரசாத்தின் ரீரெக்கார்டிங், ஸ்ட்ராங்க்!

கதைப்படி, பத்து கதாப்பாத்திரத்துக்கும் ஒரு நடிகர் மட்டுமே நடித்திருக்க வேண்டிய அவசியமில்லைதான். ஆனால், பத்து கதாப்பாத்திரத்திலும் ஒருவர் தான் நடித்தார் என்பது தெரியாத அளவுக்கு படமாக்கப்பட்டிருப்பதால், அந்தக் குறையைப் பெரிதுபடுத்த வேண்டியதில்லை.

தொழில்நுட்பத்துக்கு இணையாக, கதைக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தால், படம் முழுமையாக சோபித்திருக்குமோ என்று தோன்றுவதைத் தவிர்க்க முடியாது.

ஒட்டுமொத்தமாக பார்ப்போமோனால், எதிர்பார்த்தோருக்கு ஏமாற்றாமல் அளிக்கப்பட்ட தரிசனமே 'தசாவதாரம்'!

- எஸ்.சரவணன்
(மூலம் - வெப்துனியா)
யாகூ-தமிழ்

***

சமீபத்தில் தசாவதாரத்தை பார்த்து விமர்சிக்க வாய்ப்பு இல்லை ;)
அதனால் பிட் அடிச்சாச்சு.

தசாவதார விமர்சனங்களே சூடாக இருப்பதால் நிறைய பதிவுகள் வந்து கொண்டே இருக்கின்றன. அவை அனைத்தையும் உடனுக்குடன் படிக்க இங்கே

*

13:20 Posted in சினிமா | Permalink | Comments (4) | Email this | Tags: கமல், தசாவதாரம் |  del.icio.us | | Digg! Digg