Saturday, 22 March 2008
❒ தமிழ்நாயக ஆராதனையும் ஜெயமோகனும்
எம்.ஜி.ஆர். சிவாஜி என்னும் இரு தமிழ் சினிமா ஆளுமைகள் பற்றிய கட்டுரை ஒன்றை ஜெயமோகன் எழுதப்போக, அதை வைத்து பரபரப்பு விளம்பரம் தேடிக் கொண்டது ஆனந்த விகடன். இப்போது அந்த விவகாரம் பற்றிக் கொண்டு எரிகிறது.
தனது அனுபவத்தில் இந்த நடிகர்கள் குறித்து சினிமா ரசிகர்கள் பேசிக்கொள்ளும் விதம் குறித்தே ஜெயமோகன் எழுதியிருந்தார். சொல்லப்போனால் இதைவிட கீழ்த்தரமாகவே ரசிகர்கள் சினிமாக்காரர்கள் குறித்து பேசிக்கொள்வதை நானே கேட்டிருக்கிறேன். இப்போதைய மகாநாயகர்களைப் பற்றியும் இன்றளவும் இது போன்ற பேச்சுக்கள் ரசிகர்கள் மத்தியில் உண்டு. அப்படி ரசிர்கள் கருத்தாகவே அவரும் எழுதி இருந்தார். ஆனால் இதை எழுதி விட்டார் என்பதற்காக ஜெயமோகனை சினிமா உலகம் புறக்கணிக்க வேண்டும் என்றும் ஆனந்த விகடனுக்கு சினிமா சம்பந்தப்பட்ட செய்திகள் பேட்டிகள் கொடுக்க கூடாது என்றும் சினிமாக்காரர்கள் தீர்மானம் இயற்றி இருக்கிறார்களாம். வலைப்பதிவுகளுக்குத் தணிக்கை வேண்டும் என்பதும் அவர்களின் கோரிக்கை.
காவல்துறை அதிகாரிகளை, டாக்டர்களை, அமைச்சர்களை, வில்லன்களாக சித்தரித்து படம் எடுக்கும் இதே சினிமாக்காரர்களை சம்பந்தப் பட்டவர்கள் புறக்கணித்தால் என்ன ஆகும். சினிமாக்காரார்களுக்கு மருத்துவம் பார்க்க மாட்டோம் என்று மருத்துவர்களோ சினிமாக்காரர்களின் புகார்களை விசாரிக்க மாட்டோம் என்று காவல்துறையோ சொல்வது எத்தனை அபத்தமோ அது போன்ற நிலைதான் இவர்களின் முட்டாள்தனமும்.
படைப்புகள் குறித்து விமர்சனங்கள் இருந்தாலும் படைப்பிலக்கியவாதியாக தமிழ் இலக்கியச்சூழலில் தவிர்க்க முடியாதவர் ஜெயமோகன். அதே சமயம் ஜெயமோகன் எழுதும் பொதுவிமர்சனக் கருத்துகள் பல சமயங்களில் பொருட்படுத்தக்கூடியதாக இருப்பதில்லை.
இந்தக் குறிப்பிட்ட கட்டுரையைப் பொறுத்தவரை பெரிய முக்கியத்துவம் ஏதும் இல்லாவிட்டாலும் கூட அதில்பிழையான கருத்து எதையும் ஜெயமோகன் சொல்லி இருக்கவில்லை. ஆனால் ஆனந்த விகடனின் தேவையற்ற திரிபு அந்தக் கட்டுரைக்கு முக்கியத்துவத்தை உருவாக்கி விட்டது.
சினிமா நாயகர்களை ஆதர்ச நாயகர்களாக வரித்துள்ள தமிழ்சினிமா ரசிகனை வெறியேற்ற இவை போதுமானவை. உலக சினிமா சரித்திரத்தில் நடிகைக்கு கோயில் கட்டிய தமிழ்ப்பரம்பரை அல்லவா? வீட்டில் குடும்பமே பட்டினி கிடந்தாலும் ஆதர்சநாயகனின் கட்டவுட்டுக்கு பாலாபிசேகம் செய்யும் ரசிகப் பட்டாளம் இங்குண்டு.
ஆனாலும் ரசிகர்கள் போதுமான அளவில் இதை கண்டுகொள்ளாதது சினிமாக் காரார்களை வெறி கொள்ளச் செய்தது. இதன் விளைவுகளாகவே அவர்களின் மேற்கண்ட தீர்மானங்கள். 80 சதவீதம் ஆபாசக் குப்பைகளை உருவாக்கித் தள்ளும் தமிழ்சினிமா ஒரு எழுத்தாளனின் பேனாவுக்கு கடிவாளம் போட நினைக்கிறதாம். பத்திரிகைக்கு தடையாம். இணையத்துக்கு தணிக்கையாம்.
இருக்கும் தணிக்கையையே ஒழுங்காக பின்பற்றாத சினிமா மேதாவிகள் படைப்பிலக்கிய சிந்தனைக்கு தடைப்போடுவார்களாம். தங்களைத் தாங்களே புகழ்ந்து பாட்டெழுதிப் பூத்தூவிக் கொள்ளும் சினிமா நாயக அவதாரங்கள் இணைந்து இணையத்துக்கும் எழுத்தாளனுக்கும் எச்சரிக்கை விடுப்பார்களாம்.
வலைப்பதிவாளர் என்ற முறையில் ஜெயமோகன் மீது விடுக்கப் பட்டுள்ள இந்த கருத்தியல் வன்முறையை கண்டிக்கிறேன். வலைப்பதிவாளர்களை வம்புக்கிழுத்து கட்டற்ற இணையவெளியை கட்டுப் படுத்த நினைக்கும் கோமாளிக்கூட்டத்தை எச்சரிக்கிறேன்.
18:00 Posted in சினிமா | Permalink | Comments (12) | Email this
| Tags: jeyamohan, ஜெயமோகன் |
del.icio.us
|
|
Digg

