Monday, 03 March 2008
❒ ஆட்டு மந்தையில் சில கறுப்பாடுகள்
எழுத்தாளர் சுஜாதா இறப்பையொட்டி தமிழ் வலைப்பதிவுகளில் பல 'பொதுப்புத்தி'யால் கட்டமைக்கப் பட்டிருந்த போதிலும் சில 'நல்லவர்கள்' விமர்சனங்களை வைத்திருந்தார்கள். அவை அவர்களின் உரிமை என்பதாலும் அவ்விமர்சனங்களில் சில உண்மைகள் இருப்பதாலும் அவை பற்றி எந்த மறுப்பும் எனக்கு கிடையாது. இந்த சமயத்தில் தான் இவை எழுதப் பட வேண்டுமா என்ற கேள்வியும் கூட அனாவசியமானது தான். காரணம் சுந்தரராமசாமி, ஜெயகாந்தன், அசோகமித்திரன், சுஜாதா என வாசகப் பரப்பில் மாறுபட்ட ரசனைகளை உருவாக்கிய ஆளுமைகள் எதிர்பாராத தருணங்களில் சறுக்கியதை அவர்களின் ரசிகர்களே கூட ஜீரணிக்க சிரமப் பட்டார்கள். எனவே பொதுப்புத்திக்கு எதிரான கட்டறுப்பை அவர்கள் பொதுவரங்கில் கவனிக்கப் பட வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதியதில் பெரிய தவறேதும் இருக்க முடியாது.
ஆனாலும் இந்த பொதுப்புத்தி சுஜாதா விஷயத்தில் ஏன் நிகழ்ந்தது என்பது குறித்து எனக்கு மாறுபட்ட கருத்து உண்டு. சுஜாதாவின் எழுத்துக்கள் படிக்கப் பட்ட அளவுக்கு ஆர்வமாக ஆரவாரமாக வேறெந்த எழுத்தாளனின் படைப்பும் இந்த தமிழுலகில் படிக்கப் பட்டதில்லை. தமிழ் வாசகனை பல்வேறு தளங்களில் தனித்துவமான நடையில் இழுத்துச் சென்ற அந்த ஆளுமையின் படைப்புலகம் அதிக வாசகப் பரப்பை உழுதுமறித்தது.
சிறுகதைகள் தவிர பிற படைப்புகளில் ஆழமான கருத்துகள் இருந்ததில்லை என்ற விமர்சனங்கள் உண்டு. ஆனால் எல்லா வாசகனும் ஆழமான விஷயங்களை வாசிக்க விரும்புவதில்லை என்ற உண்மை அவருக்குத் தெரியும். அதே சமயம் கவனப்படாத ஆழமான நல்ல படைப்புகளை அவர் பல்வேறு தளங்களில் அவ்வப்போது அறிமுகம் செய்து வந்தார். அவரது எழுத்து நடையின் வசீகரம் தமிழில் புதுக்கவிதை விளைவித்த அதே தாக்கத்தை உருவாக்கியது. (அதில் விமர்சனங்கள் இருந்தாலும் கூட) அவரைப்போல எழுத விரும்பி எழுத்துலகிற்கு வந்தவர்கள் ஏராளமானவர்கள்.
எழுத்தை இன்று கணினி வழி வலைப்பதிவுகளாக வடிக்கும் வலைப்பதிவர்கள் பெரும்பாலானவரும் அவரது வாசகர்களாக இருந்தவர்கள். அதனால் தான் இத்தனைப் பதிவுகள் அவருக்காக எழுந்தன.
அத்தனை பேரையும் அற்பவாதிகள் அது இது என்று பொத்தாம் பொதுவில் விமர்சித்த நண்பர்களும் அவர்களை கண்டபடி விமர்சித்த நண்பர்களும் இது பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டார்கள்.
*
விமர்சனங்களில் சிலவற்றில் அதீத உணர்ச்சி வசப்படல்கள் இருந்தன. அவை பற்றிய என் விமர்சனங்கள்.
1. சுரதா சுஜாதா ஒப்பீடு.
சுரதா வாழும்போதே அவருக்கான சரியான அங்கீகாரம் கிடைக்காமல் இருந்தவர். மிகச்சிறந்த கவிஞர் என்பதில் எந்த சந்தேகமில்லை. அவருக்கு அஞ்சலிப் பதிவு எழுதிய நண்பர்கள் மிகமிக பாராட்டுக்குரியவர்கள்.
ஆனால் அவரது எழுத்து எத்தனை பேரை உருவாக்கியது, பின்பற்ற வைத்தது என்பதில் தான் வேறுபாடு.
2. தமிழ்ச்செல்வன் மறைவை கொண்டாடியவர்கள், கலைஞரின் அஞ்சலிக் கவிதையை எதிர்த்தவர்கள் குறித்த கேள்வி நியாயமானது.
ஆனால் பதிவர்கள் ஏன் அதை விமர்சிக்கவில்லை என்பது அர்த்தமற்றது. கேள்வி கேட்டவரே கூட விமர்சித்தாரா என்பது கேள்விக்குறி.
3. மனுஷ்யபுத்திரனை கேவலமாக விமர்சித்திருக்கிறார் ஒருவர். மனுஷ்ய புத்திரனை விபீஷணன் என்கிறார். (ராவணன் யாரென்று சொல்லவில்லை). அதற்கும் மேலாக சில வார்த்தைகளைப் பயன்படுத்தி இருக்கிறார்.
மனுஷ்ய புத்திரன் பற்றி இவருக்கு ஏதாவது தெரியுமா என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது. காரிருளில் இருந்து கைப்பிடித்து அழைத்து வந்தவர்களுக்கு நன்றி பாராட்டுவது குற்றமா என்ன?
அந்தக் கொடுமையை உங்களால் உணரவே முடியாது ஐயா :(
4. சுஜாதாவை புனிதபிம்பமாக்கி விடுவதாக பாய்ந்திருக்கிறார். இந்த விமர்சனங்களுக்கெல்லாம் அடிப்படையே இதுதான்.
யாரும் புனிதனுமில்லை. யாரும் மிருகமும் இல்லை. எல்லாருமே இரண்டும் செய்த கலவைதான். எந்த சதவீதம் அதிகமாகிறது என்பதில் தான் இருக்கிறது. சிலருக்கு கிராப் ஒரே சீராக இருக்கும் மற்றவருக்கு ஏறி இறங்கும்.
ஒவ்வொருவர் பார்வையை பொறுத்தது சில விஷயங்கள் மாறுபடும்.
13:55 Posted in விமர்சனம் | Permalink | Comments (3) | Email this
| Tags: சுஜாதா, மனுஷ்யபுத்திரன் |
del.icio.us
|
|
Digg
Wednesday, 27 February 2008
❒ சுஜாதா - சில குறிப்புகள்
கடந்த மாதம் முதல் உடல்நலக்குறைவு காரணமாக அப்பலோ மருத்துவமனையில் சிகிட்சை பெற்று வந்த எழுத்தாளர் சுஜாதா இன்று இரவு 9.30 மணியளவில் காலமானார்.
சுஜாதா சில குறிப்புகள்
பிறப்பு: மே 3, 1935
இயற்பெயர்: ரங்கராஜன்
இவரது மனைவியின் பெயரான சுஜாதா என்ற பெயரில் படைப்புகளை எழுதி வந்தார்.
சுஜாதாவின் முதல் கதை 1953 ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது. அவர் கடைசியாக வசனம் எழுதிய திரைப்படம் சிவாஜி.
தொடர்கதையாக வெளிவந்த இவரது நாவல்கள் காயத்ரி, கரையெல்லாம் செண்பகப்பூ, ப்ரியா, விக்ரம், வானம் வசப்படும் போன்ற பின்னர் திரைப்படமாக்கப் பட்டன.
ரோஜா, இந்தியன், முதல்வன், பாய்ஸ், விசில், கன்னத்தில் முத்தமிட்டால், ஆய்தஎழுத்து, அந்நியன், சிவாஜி போன்ற படங்களில் இவரே கதை வசனம் எழுதி பணியாற்றி இருக்கிறார்.
கணையாழியின் கடைசிப் பக்கங்கள், விகடனில் கற்றதும் பெற்றதும் என தமிழில் பத்தி எழுத்துக்களில் ஒரு முன்மாதிரியை உருவாக்கியவர்.
சிறுகதை, நாவல், நாடகம், அறிவியல் கதைகள், அறிவியல் கட்டுரைகள். கவிதைகள், பொதுக் கட்டுரைகள், திரைப்பட கதை வசனம், தொலைக்காட்சி நாடகங்கள் என பல துறைகளில் முத்திரை பதித்தவர். சுஜாதாவின் படைப்புகளைப் படித்து அந்த ஆர்வத்தாலேயே எழுத்துலகிற்கு வந்தவர்கள் பலர். இந்த வகையில் மிகப்பெரிய எழுத்துலக சீடர்களைப் பெற்ற முன்னோடி எழுத்தாளர்.
தமிழ் எழுத்து நடையில் பல பரிசோதனை முயற்சிகளையும் செய்தவர். அந்தச் சோதனைகளில் உருவான வசீகரமான எழுத்துநடைதான் வாசகர்களை கட்டிப் போட்டிருந்தது. தீவிரமான இலக்கியப் படைப்பாளியாக இல்லாமலே ஜனரஞ்சகமான எழுத்துக்களாலேயே தமிழ் இலக்கியச் சூழலில் அசைக்க முடியாத ஆளுமையாக நிலைபெற்றிருந்தார்.
பெங்களூர் பாரத மின்னணு நிறுவனத்தில் பணியாற்றிய போது தற்போதைய மின்னணு வாக்குப் பதிவு இயந்திர உற்பத்தியில் இவரது ஆலோசனைகளும் இருந்ததாக கூறப்படுவதுண்டு. அறிவியல் தமிழை சாதாரண மக்களிடையே எடுத்துச் சென்றதில் இவரது பங்களிப்பு முக்கியமானது. 80 களுக்குப் பின் உருவான தமிழ் படைப்பாளிகள் இவரது பாதிப்பு இல்லாமல் இருக்க முடியாது என்ற அளவுக்கு தமிழ்ச்சூழலில் இவரது ஆதிக்கம் நிலைபெற்றிருந்தது.
பிப்ரவரி 27 இரவு 9.30 மணியளவில் ஒரு எழுத்துலக சகாப்தம் முடிவடைந்தது.
*
குறிப்பு: சுஜாதா அஞ்சலியாக வரும் பதிவுகள் தமிழ்.கணிமை திரட்டியில் பதிவுகள் முகப்பில் தனியாக திரட்டப் படுகின்றன.
21:25 Posted in இலக்கியம் | Permalink | Comments (14) | Email this
| Tags: sujatha, சுஜாதா, ரங்கராஜன் |
del.icio.us
|
|
Digg

