Tuesday, 01 July 2008
❒ அகரவரிசைக்கு ஒரு மென்பொருள்
தமிழ் எழுதுகருவியான NHM Writer மற்றும் NHM Convertor ஆகியவற்றைத் தந்த நியூ ஹொரைசான் மீடியாவின் தொழில் நுட்பக் கலைஞர் திரு நாகராஜனின் புதிய படைப்பு NHM Lister
இது ஒரு ஆன்லைன் கருவி.
இதன் பயன்கள்.
யூனிகோடில் எழுதப் பட்ட தமிழ் பட்டியல்களை உருவாக்க, ஒரே சொடுக்கில் அகர வரிசைப் படுத்த உதவுகிறது. ஆங்கிலச்சொற்கள், எண்கள், சின்னங்களை நிராகரித்தோ இணைத்தோ பட்டியலை வரிசைப் படுத்த முடியும்.
தனிச் சொற்களின் எண்ணிக்கை, மொத்தச் சொற்களின் எண்ணிக்கை ஆகியவற்றை கணக்கிட்டுத் தருகிறது. அகர வரிசைப் படுத்தப் பட்ட பட்டியலை சொற்களின் எண்ணிக்கையுடனோ தனிச் சொற்களின் பட்டியலாகவோ copy செய்து கொள்ளலாம்.
பட்டியல்களை உருவாக்க, வரிசைப்படுத்த, சொற்களைக் கணக்கிட என பல்வேறு தேவைகளின் அடிப்படையில் நம்மில் பலருக்கும் இது போன்ற ஒரு கருவி அவசியமாக இருக்கும். இதன் பயன்கள், நிறைகுறைகள் பயனாளிகளின் தேவையின், பயன்பாட்டின் அடிப்படையில் இருக்கும்.
குறையாடுகள் ஏதேனும் இருந்தாலோ, இன்னும் தேவையான வசதிகள் பற்றியோ தெரிவித்தால் நண்பர் நாகராஜன் இக்கருவியை மேம்படுத்த உதவும்
http://software.nhm.in/Services/NHMLister/tabid/72/Defaul...
05:55 Posted in internet , இணையம் , கணித்தமிழ் | Permalink | Comments (1) | Email this | Tags: மென்பொருள், இணையம்
Wednesday, 09 January 2008
❒ பயர்பாக்ஸ் பிரச்சினை தீர்ந்தது
இண்டர்நெட் எக்ஸ்புளோரருக்கு அடுத்தபடியாக வேகமாக முன்னேறி வந்த பயர்பாக்ஸ் உலவி தமிழ் வலைப்பதிவுகளைப் படிப்பதில் மட்டும் சில பிரச்சினைகளை சந்தித்தது. அலைன் செய்யப் பட்ட பத்திகளை கொண்ட வலைப்பதிவுகள், இணையப் பக்கங்கள் இழைபிரிந்து தமிழ் குதறப்பட்டு காட்சியளித்தது.
அலைன் ஜஸ்டிபை, லைன்-ஸ்பேசிங் போன்றவை தமிழைப் பொறுத்தவரை பயர்பாக்சுக்கு ஒவ்வாத விதிமுறைகள். இதைத் தவிர்க்க கிரீஸ் மங்கி, பத்மா நீட்சி போன்றவற்றை வாசிப்பவர் பயன்படுத்த வேண்டி இருந்தது.
வலைத்தளம், வலைப்பதிவாளர்கள் லைன்-ஸ்பேசிங் நீக்கியும் அலைன் ஜஸ்டிபை செய்யாமலும் இருக்க வேண்டிய அவசியம் இருந்தது.
இந்தப் பிரச்சினை அடுத்த பதிப்பிலாவது நீங்காதா என்ற நப்பாசையில் அடுத்தடுத்த பதிப்புகளுக்காக காத்திருப்பது வழக்கமாகி விட்டது.
கிரான் பாரடைசோ என்ற புனைப்பெயரில் பயர்பாக்ஸ் உலவியின் மூன்றாவது பதிப்பு வெளியானதும் அதைப் பதிவிறக்கி பயன்படுத்தி வந்தேன். அதில் தமிழ் குதறப் படுவது சற்றே குறைந்திருந்தாலும் எழுத்து இடைவெளி அதிகரித்து எழுத்துக்கள் ஒழுங்கற்ற பார்வைக்குரியதாகவே இருந்து வந்தது.
நேற்று முன்தினம் உலவியைத் திறந்தபோது பயர்பாக்ஸ் 3 பீட்டா 2 அப்டேட் இருப்பதாக சொல்லி, நிறுவ செய்தி வந்தது. சரி என்று சொல்லி விட்டேன். சிறிது நேரத்தில் கிரான் பாரடைசோ மறைந்து பழையபடி பயர்பாக்ஸ் உலவி வந்தது.
தமிழ்மணத்தை மேய்ந்து ஏதோ ஒரு தளத்தைப் பார்வையிட்ட போது சட்டென்று என் கவனம் சிதறியது. தவறாக ஐஈயைத் தான் திறந்து விட்டோமோ? என்று தோன்றி விட்டது. மேலே பார்த்தால் அது பயர்பாக்ஸ் தான். இன்னும் சில தளங்களை சோதித்த போது விஷயம் உறுதியாகி விட்டது.
பயர்பாக்சில் அலைன் ஜஸ்டிபை செய்யப்பட்ட தமிழ்த் தளங்களை ஜஸ்டிபை ஆகவே ஒழுங்காக பார்க்க முடிகிறது.
ஆகா... அலைன் ஜஸ்டிபை வேலை செய்கிறது! பயர்பாக்சில் வேலை செய்கிறது!! தமிழ்த்தளங்களில் ஒழுங்காக வேலை செய்கிறது!!!
விண்டோஸ் பயனர்களுக்கான ஆங்கில இடைமுகப்பு பயர்பாக்ஸ் 3 பீட்டா 2 பதிவிறக்க...
மேக், லினக்ஸ், மற்றும் பல மொழிகளுக்கான பயர்பாக்ஸ் இடைமுகப்பு இங்கே.
இடைமுகப்பு இந்திய மொழிகளில் இந்தியோ, தமிழோ இல்லை. மாறாக குஜராத்தி, பஞ்சாபி மொழிகளில் வெளியாகி இருக்கிறது.
08:55 Posted in internet , இணையம் , வலைப்பதிவு | Permalink | Comments (9) | Email this | Tags: firefox, பயர்பாக்ஸ், பயர் பாக்ஸ், ஃபயர்பாக்ஸ்
Monday, 31 December 2007
❒ கணித்தமிழுக்கு ஒரு கலக்கல் மென்பொருள்
தமிழ்ச்செயலிகள் என்ற அளவில் பல மென்பொருள்கள் உள்ளன. அவற்றின் செயல்பாடுகள் தன்னளவில் நிறைவுள்ளதாகவும் இருக்கின்றன. ஆனால் எந்தச் செயலியும் இதுவரை செய்யாத சாதனையைகளைச் செய்து கொண்டு ஒரு புதிய மென்பொருள் வந்திருக்கிறது.
விண்டோஸ் இயங்குதளத்தில் எந்த மென்பொருளை பயன்படுத்தினாலும் யூனிகோடில் தமிழ் போன்ற மொழிகளுக்கான வெளிப்பாட்டுக்கு பிராந்திய மொழிகளை (Regional Language Support) எனேபிள் செய்ய வேண்டும். விண்டோஸ் சிடி மூலம் சில செட்டிங்குகள் செய்ய வேண்டி இருக்கிறது... இது தவிர ஆபீஸ் செயலியிலும் தமிழ் தெரிய சில பிரச்சினைகள் இருந்து வருகின்றன. அதற்கும் சில மாற்றங்களை நாமாக செய்ய வேண்டி இருந்தது
இதற்கான தேவை இன்றி தானாகவே இந்திய மொழிகளை எனேபிள் செய்து தமிழை எழுதவும் வாசிக்கவும் வகை செய்கிறது இந்த மென்பொருள்... எழுதுகருவி!
நியூ ஹொரைசான் மீடியா நிறுவனம் வெளியிட்டுள்ள NHM Writer என்ற எழுதுகருவி தான் இந்த புதிய மென்பொருள்.
இதை நிறுவியதும் தமிழ்ரெடி! (தமிழ்ரெடி பிராஜக்டில் நண்பர்கள் இதையும் இணைத்துக் கொள்ளலாம்.)
பிற மென்பொருள்களைப் போல அல்லாமல் எகலப்பை போன்று எழுதுகருவியாகவே அனைத்துச் செயலிகளிலும் தமிழை எழுத வகை செய்கிறது....
யூனிகோடு மட்டுமல்லாமல் தமிழில் மேலும் பல எழுத்துருக்களையும் இந்த கருவி மூலம் எழுத முடியும். யூனிகோடு தவிர மேலும் முக்கியமான எட்டு எழுத்துருக்களில் எழுத இதில் வகை செய்யப் பட்டிருக்கிறது... கூடுதல் தேவைக்காக வேறு எந்த எழுத்துரு பயன்படுத்தவும் நாமாகவே XML வடிவத்தில் கோப்பை உருவாக்கி இணைக்க வகை செய்யப்பட்டுள்ளது.
தமிழ்99, அஞ்சல்(பொனடிக்), தமிழ் தட்டச்சு, பாமினி ஆகிய தட்டச்சு முறைகளில் யூனிகோடு தவிர மேலும் எட்டு எழுத்துருக்களை (Bamini, Diacritic, Shreelipi, Softview, Tab, Tam, TSCII, Vanavil and Unicode) தட்டச்சு செய்ய முடியும். இந்த வகையில் மொத்தம் 36 விதமாக (4 type layouts x 9 font encoding) இதில் தட்டச்சு செய்ய முடிகிறது.
Key Preview என்னும் வசதி மூலம் உயிர்மெய் எழுத்துக்களை எழுதுவதற்கு அடுத்து எந்த விசையை அழுத்த வேண்டும் என்பது சொல்லித் தருகிறது. பலருக்கும் இந்த வசதி மிகவும் அவசியமானது. விசைப்பலகை ஆன்ஸ்கிரீன் திரைவடிவமும் எழுத்துக்களை உணர்ந்து கொள்ள வசதியாக அமைக்கப் பட்டிருக்கிறது.
இந்த மென்பொருளை நிறுவியதும் யூனிகோடு முறையில் தட்டச்சு செய்யும் படி அமைக்கப் பட்டிருக்கிறது... alt+1 தமிழ்99, alt+2 பொனடிக், alt+3 தட்டச்சு, alt+4 பாமினி.
பிற என்கோடிங்களை எளிதாக shortcut key அமைத்துக் கொள்ளலாம்.
விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா, 2003 போன்ற பதிப்புகளில் செயல்படக் கூடியது.
சிறப்பாக வடிவமைக்கப் பட்ட ஆன்லைன் உதவிக்குறிப்பு இங்கே...
விரைவில் இதை தமிழிலும் தருவார்கள் என நம்புகிறேன்.
இத்தனை வசதிகளையும் வெறும் 850 kb அளவுக்குள்ளான சிறிய மென்பொருள் தருவது வியப்பான விஷயம்தான்.
இந்த மென்பொருள் இங்கே இலவசமாக பதிவிறக்க கிடைக்கிறது. சென்னை புத்தகக் கண்காட்சியில் வேறு சில மென்பொருட்களுடன் இது சிடியாக கிடைக்கும் என்று தெரிகிறது.
நண்பர்கள் பத்ரி, நாகராஜன் என் வாழ்த்துக்களும் நன்றியும்.
*
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
04:25 Posted in internet , இணையம் , கணித்தமிழ் | Permalink | Comments (20) | Email this | Tags: nhm writer, tamil99
Tuesday, 11 September 2007
❒ ஜிமெயில் ஒரு ஆரம்பம்
வலைப்பதிவர்கள் அதிகம் பயன்படுத்திக் கொண்டிருப்பது blogger.com தரும் வலைப்பதிவு சேவையைத்தான். இதற்குக் காரணம் இதைவிட அதிக வசதிகள் பிற சேவைகளில் இருந்தாலும் இணையப்பக்கம் குறித்து அதிகம் அறியாதவர்களுக்கும், நிறைய அறிந்தவர்களுக்கும் தேவையான வசதிகள் இதில் தான் இருக்கின்றன.
உதாரணமாக இணையப்பக்க வடிவமைப்பு, HTML நிரல் குறித்து அறிந்திராதவர்கள் கூட பிளாக்கர் தரும் ரெடிமேட் அடைப்பலகை (template) களைப் பயன்படுத்திக் கொண்டு தங்கள் படைப்புக்களை வலைப்பதிவில் காட்சிப்படுத்தலாம். ஒரு வேர்ட்பாட் (word pad) போன்ற வசதி கொண்ட எழுதும் பக்கத்தில் சென்று எழுதி பதிந்து விட்டால் அது தானாக பதிவில் தேதி நேரத்துடன் பதிவாகி வந்து விடும்.
அதே சமயம் நிரல்களில் பரிச்சயம் உள்ளவர்கள் முழுநிரலையும் தலைகீழாக மாற்றிப் போட்டு சொந்தமாக அடைப்பலகைகளை எளிதாக வடிவமைக்கவும் தேவையான ஜாவாஸ்க்ரிப்ட் அலங்காரங்களையும் அதிலேயே செய்து கொள்ளவும் சுதந்திரம் கொடுத்தது பிளாக்கர்.
இதில் பதிவு தொடங்க நேரடியாக பிளாகர் வலைப்பக்கம் சென்று எளிதாக தொடங்கி விட முடியும்.
கூகுள் நிறுவனம் பிளாக்கரை வாங்கி நிறைய மேம்படுத்தல்கள் செய்து பீட்டா பிளாக்கரை அறிமுகம் செய்தது. இதன்பிறகு ஜிமெயில் கணக்கு இருந்தால் தான் பிளாக்கரில் பதிவு தொடங்க முடியும்.
ஜிமெயில் கணக்கில் இருந்து நேரடியாக பிளாக்கரில் நுழைய முடியும். பிளாக்கர் தளத்தில் ஜிமெயில் பயனர் பெயரில் தான் உள் நுழைய முடியும்.
ஆகவே முதலில் ஜிமெயில் கணக்கு தொடங்க வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்?
அடிப்படையில் இருந்தே ஆரம்பிப்போம்.
கூகுள் தான் இன்று தேடுபொறிகளில் முன்னிலை வகிக்கிறது. அதன் ஜிமெயிலும் பிளாக்கரும் அது போலவே நமக்கு முதன்மையான சேவைகளாக இருக்கின்றன.
எனவே கூகுளில் இருந்து தொடங்குவோம்.
முதலில் google.com தளத்துக்கு செல்வோம்.

எல்லா இணையதளங்களின் முகவரியையும் நினைவில் வைத்திருப்பது எளிதல்ல. அதிலும் அவற்றின் விரிவான முழு முகவரி நினைவில் வைப்பது மற்றும் அவற்றை தட்டச்சு செய்வது சிரமம். எனவே ஒரு தளப்பெயரின் முக்கிய பாகம் ஒரு சொல் சரியாக நினைவிருந்தால் அந்தச் சொல்லை கூகுள் தேடுபொறியில் கொடுத்து விட்டால் தேடுதல் முடிவுகளில் அந்தச் சரியான தளத்துக்கான சுட்டி பெரும்பாலும் கிடைத்து விடும்.

இப்போது நமக்கு gmail தேவை எனவே gmail என்று கூகுள் தேடுபொறியில் தட்டச்சு செய்து தேடுதல் கட்டளை கொடுத்தால் gmail பக்கத்துக்கான சரியான சுட்டி நமக்குக் கிடைத்து விடும்.
இது தான் gmail கணக்கு தொடங்க, செல்ல வேண்டிய தளம்.
mail.google.com/
இந்தப் பக்கத்தில் கீழ்வலது பக்கம் Sign up for Gmail என்று இருக்கும் சுட்டி வழியாக
http://mail.google.com/mail/signup
என்னும் பக்கத்துக்கு செல்ல வேண்டும்.
இங்கே இருக்கும் படிவத்தில் விவரங்களை நிரப்பி ஒரு Gmail கண்க்கை உருவாக்கிக் கொள்ளவும்.
(ஜிமெயில் உருவாக்க சமீப காலம் வரை இன்னொரு ஜிமெயில் பயனர் அழைப்பு அனுப்ப வேண்டி இருந்தது. இப்போது நேரடியாகவே ஜிமெயில் கணக்கு தொடங்க முடியும்.)

யாகூ போன்ற பல தளங்களில் மின்னஞ்சல் தொடங்க பிறந்த தேதி, முகவரி உள்ளிட்ட பல சொந்த விவரங்கள் தர வேண்டி இருக்கும். ஆனால் ஜிமெயில் கணக்கு தொடங்க சொந்த விவரங்களாக பெயர் மற்றும் நாடு மட்டுமே பதிய வேண்டும். வேறு எந்த விவரமும் அதிக படிவ விவரங்களும் தேவை இல்லை.
கடவுச்சொல் (பாஸ்வேர்ட்) மறந்துவிடாமல் இருக்க...மறந்து விட்டால் மீண்டெடுக்க ஒரு ரகசிய கேள்வி பதில் அதில் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
நாம் விரும்பும் மின்னஞ்சல் பெயர் கிடைக்குமா? இருக்கிறதா? என்பதை check availability என்ற சுட்டியைப் பயன்படுத்தி பரிசோதித்துக் கொண்டு ஒரு முகவரியை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
அவ்வளவு தான் இப்போது நீங்கள் ஜிமெயில் கணக்கு உருவாக்கி விட்டீர்கள்.
ஜிமெயிலில் நுழைந்து சோதித்துக் கொள்ளுங்கள்.
(ஜிமெயிலைப் பயன்படுத்தி பிளாக்கர் கணக்கு, தமிழ் வலைப்பதிவு தொடங்குவது எப்படி - தொடரும்)
-oOo-
குறிப்பு: இந்த இடுகையை படித்து வரும் பலருக்கு சிறுபிள்ளைத் தனமாகக்கூட தோன்றலாம். கணினியில் புழங்குகிறவர்களுக்கோ, ஏற்கனவே வலைப்பதிவர்களாக இருப்பவர்களுக்கோ இவை பெரிதாக பயன்படப் போவதில்லை. மேலும் ஓரளவு இணையப் பரிச்சயம் உள்ளவர்களுக்கு இந்த நீட்டி முழக்கல் எரிச்சலாகக் கூட இருக்கலாம். ஆனால் ஒரளவு கணினிப் பயிற்சி இருந்தாலும் இணையப் பரிச்சயம் குறைவாக உள்ளவர்கள் இன்னமும் இருக்கிறார்கள்.
உதாரணமாக எனக்குத் தெரிந்த இருவரைச் சொல்லலாம். ஒருவர் கணினியில் DTP பயிற்சி முடித்து ஆப்செட் அச்சகம் ஒன்றில் பணி செய்பவர். இன்னொருவர் MS ஆபீஸ் பயின்று ஒரு நிறுவனத்தில் கணக்காளராக இருப்பவர். இவர்கள் இருவருமே இணைய இணைப்பு இல்லாத சூழலில் கணினிப் பயிற்சி பெற்றவர்கள்.
இவர்களைப் போன்றவர்களுக்கும் மாணவர்களுக்கும் இத்தனை விரிவான விளக்கம் அவசியம் என்று கருதுகிறேன். நீங்க என்ன நினைக்கிறீங்க?
03:55 Posted in internet | Permalink | Comments (8) | Email this | Tags: internet, gmail, blogger, வலைப்பதிவு, ஜிமெயில்
Sunday, 19 August 2007
❒ வலைப்பதிவு அறிமுகம் பெறுவது எப்படி?
இப்போதெலாம் கூகுள் தேடுதலில் தமிழில் தேடினால் இணையப் பக்கங்கள் மட்டுமல்ல வலைப்பதிவுகளும் வந்து விடுகின்றன. எனவே வலைப்பதிவு அறிமுகம் கிடைப்பது இன்று இணையப் பரிச்சயம் உள்ளவர்களுக்கு மிக எளிதாகவே இருக்கிறது.
இன்னும் கணினியில் தமிழில் எழுதும் பரிச்சயம் வராதவர்கள் கூட திரட்டிகள் வாயிலாக முதலில் வலைப்பதிவுகளை படிக்கலாம்.
தமிழின் பிரதான வலைப்பதிவுத் திரட்டிகள்.
தமிழ்மணம் (http://www.thamizmanam.com)
தேன்கூடு (http://www.thenkoodu.com)
தமிழ்ப்பதிவுகள் (http://www.tamilblogs.com)
தமிழ்வெளி (http://www.tamilveli.com)
இவற்றில் தாங்களாக இணைந்து கொள்ளும் பதிவர்களின் பதிவுகள் திரட்டப் படுகின்றன.
சில நண்பர்களால் நல்ல வலைப்பதிவுகள் அடையாளம் காட்டப்பட்டு தொகுக்கப்படும் தமிழ் வலைப்பதிவுத் திரட்டி மாற்று (http://www.maatru.net).
இதே போன்று கில்லி (http://gilli.in) என்ற தளமும் தமிழ், ஆங்கிலப் பதிவுகளை தேர்ந்தெடுத்துத் தொகுக்கிறது.
வாரம் ஒரு ஆசிரியர் தன்னைக் கவர்ந்த வலைப்பதிவுப் பக்கங்களை அறிமுகம் செய்து தொகுப்பது வலைச்சரம் (http://blogintamil.blogspot.com)
தனியொருவராக தினந்தோறும் தான் படிக்கும் பதிவுகளில் தேவையற்றதை விலக்கி மற்றதைத் தொகுத்துத் தருகிறார் ஸ்னாப்ஜட்ஜ் (http://snapjudge.blogspot.com)
இவை போன்ற திரட்டிகள், திரட்டுகள் வாயிலாக சில நாட்கள் தமிழ் வலைப்பதிவுகளை வாசித்து வந்தாலே வலைப்பதிவுகள் என்பது என்ன? அதன் வீச்சு என்ன? அதன் சாதக பாதகங்கள் போன்றவை ஓரளவு புரிந்து விடும்.
இப்போது நீங்கள் வலைப்பதிவு வாசகராகி விட்டீர்கள். சில கருத்துக்களைப் படிக்கும் போது நீங்களும் பதில் சொல்ல விரும்பு கிறீர்கள். ஆனால் தமிழில் எழுதுவது எப்படி என்று உங்களுக்குத் தெரியவில்லை... என்ன செய்யலாம்?
நமது கணினிகளின் இயல்பான தட்டச்சு முறையாக ஆங்கிலம் தான் இருக்கிறது. எனவே கணினியைத் தமிழ் தட்டச்சுக்கு தயார் படுத்த தட்டச்சு இயக்கி தேவை. அவற்றை இணையத்திலிருந்து பதிவிறக்கி நிறுவிக் கொள்ள வேண்டும். அல்லது தமிழ்ச் செயலிகளில் உள்ள தமிழ் தட்டச்சு இயக்கிகளைப் பயன்படுத்த வேண்டும். முரசு, அழகி, குறள் போன்ற பல தமிழ்ச் செயலிகளில் தமிழ் தட்டச்சு செய்ய ரோமன், தமிழ்99, பாமினி போன்ற தமிழ் தட்டச்சு முறைகள் இருக்கின்றன. அவற்றில் நமக்குத் தேவையான முறையை தேர்ந்தெடுத்து தட்டச்சு செய்யலாம்
ஏற்கனவே தமிழ்தட்டச்சுப் பயிற்சி மேற்கொண்டவர்கள் கணினியிலும் பாமினி போன்ற யளனகப தட்டச்சு முறையில் தட்டச்சு செய்யலாம். இதுவரை தமிழ் தட்டச்சோ, கணினி எழுதுமுறையோ அறியாதவர்கள் அந்த முறையில் தட்டச்சு செய்வது மிகவும் சிரமம்
தமிழின் ஆரம்பகாலப் பதிவர்கள் செய்தது போல ரோமன் முறையில் தமிழில் எழுதும் முறை சட்டென்று புரிந்து விடும். உதாரணமாக ஆங்கிலத்தில் ammaa என்று எழுதினால் தமிழில் அம்மா என்று வரும். ஆங்கிலத்தில் எழுதினால் தமிழில் வரும் transliteration முறையில் ரோமன் தட்டச்சு முறை இருக்கிறது. இதை தமிங்கிலீஷ் தட்டச்சு என்று (கேலியாக) சொல்கிறோம். அஞ்சல் முறை என்பது பொதுப் பெயர்.
ஆரம்பப் புரிதல் எளிதாக இருந்தாலும் வழக்கப் படுத்திக் கொள்ளும் போது இதில் சில சிக்கல்கள் உள்ளன. முதலாவதாக இம்முறையில் தட்டச்சு செய்து பழகும்போது நம் மனம் தமிழை ஆங்கில எழுத்து வழியாகவே நினைக்கப் பழகுகிறது. கூ என்ற எழுத்தை தமிங்கில அஞ்சல் முறையில் எழுத kuu என்று (k-u-u மனதில் எழுத்துக் கூட்டி) எழுத வேண்டும்.
கூ என்பது க'கர மெய்யுடன் ஊ'காரம் இணைந்து வருவது. எனவே க+ஊ என்று தட்டச்சு செய்தாலே கூ என்று தட்டெழுதக் கூடிய எளிய தட்டச்சு முறையான தமிழ்99 முறையை ஆரம்பத்திலேயே பழகிக் கொள்வதால் குறைந்த விசையழுத்தங்களில் விஞ்ஞானப் பூர்வமாக தட்டெழுதப் பயிலலாம். இது 1999 ம் ஆண்டு நடைபெற்ற தமிழ் இணைய மாநாட்டில் அறிமுகம் செய்யப்பட்டு தமிழக அரசால் தரப்படுத்தப் பட்ட விசைப்பலகை முறையாக அங்கீகரிக்கப் பட்டது. இலங்கை, மலேசிய அரசாங்கங்களும் இந்த முறையை அங்கீகரித்துள்ளன.
எனவே தமிழுக்கான இந்த தட்டச்சு முறையில் தமிழ் எழுதக் கற்பது எளியதும் பயனுள்ளதுமாக இருக்கும். ஏற்கனவே தமிங்கில தட்டச்சு முறையில் வலைப்பதிவுப் பயிற்சி பழகிய மூத்த வலைப்பதிவர்கள் பலரும் கூட இன்று தமிழ்99 முறையின் சிறப்பையும் அவசியத்தையும் உணர்ந்து இப்போது இந்த முறையில் தட்டச்சு செய்கிறார்கள். இன்னும் சிலருக்கு இதில் ஆர்வம் இருந்தாலும் ஏற்கனவே பழகிய முறையை பழக்கம் காரணமாக கைவிட இயலாமல் இருக்கிறார்கள். எனவே ஆரம்பத்திலேயே தமிழ்99 முறையில் தமிழ் தட்டச்சு செய்ய பழகிக் கொள்வது நல்லது.
தமிழ் வலைப்பதிவுகளின் ஆரம்பக் காலத்தில் தமிழ் எழுது கருவிகளை தயாரித்து வழங்கிய சுரதா யாழ்வாணனும் தற்போது தனது புதுவை யூனிகோட் எழுதியில் (http://www.suratha.com/unicode.htm) தமிழ்99 தட்டச்சு (tam) முறையையும் இணைத்துள்ளார். இது இண்டர்நெட் எக்ஸ்புளோரரில் இயங்கும்.
பயர்பாக்ஸ் இணைய உலாவியைப் பயன்படுத்துபவர்கள் எழுதுவதற்கு தமிழா தமிழ்கீ ஆன்லைன் (http://developer.thamizha.com/tamilkey.html) பயன்படுத்தலாம். (தமிழ்க்கீ பயர்பாக்ஸ் எக்ஸ்டென்சனாகவும் வருகிறது. அதை நிறுவிக் கொண்டால் பயர்பாக்ஸ் மூலமாக இணையப் பயன்பாடுகளுக்கு பயன்படுத்தலாம்.)
தமிழ்99 முறையில் திரைவிசைப்பலகையுடன் கூடிய ஆன்லைன் எழுதுகருவி w3 தமிழ் இணைய விசைப்பலகை (http://wk.w3tamil.com)
இது போன்ற இணைய எழுதுகருவிகளே ஆரம்ப மறுமொழி இடுதலுக்கு போதுமானவை. இந்த கருவிகளின் திரையில் தமிழில் எழுத வேண்டியதை தட்டச்சு செய்து பின் அவற்றை தேர்வு செய்து வெட்டி தேவையான மறுமொழிப் பெட்டியில் ஒட்ட வேண்டும். (cut & paste). இவை இணையத்தில் இருப்பதால் எந்தக் கணினியில் இருந்தும் எங்கிருந்தும் இவற்றைப் பயன்படுத்தி எழுத முடியும்...
உங்களிடம் சொந்தமாக கணினி இருந்தால் அல்லது உங்கள் கட்டுப் பாட்டில் அலுவலகக் கணினி இருந்தால் தமிழா.காம் (http://thamizha.com) தளத்தில் இருந்து எகலப்பை - தமிழ்99 (http://thamizha.com/modules/mydownloads/singlefile.php?cid=3&lid=5) என்ற விசைப்பலகை இயக்கியை பதிவிறக்கி நிறுவிக் கொள்வது நல்லது.
இதன்மூலம் இணையத்தில் தமிழ் எழுத மட்டுமல்லாமல் நேரடியாகவே நோட்பேடு, வேர்ட்பேடு போன்ற விண்டோஸ் செயலிகளிலும் விண்டோசில் இயங்கும் எம் எஸ் ஆபீஸ் போட்டோஷாப் உள்ளிட்ட பிற செயலிகளிலும் கூட எப்போதும் நேரடியாக தமிழில் எழுத முடியும். மேலும் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் தந்துள்ள தமிழ்99 சிறப்பு வசதிகள், விதிகள் (http://www.tamilvu.org/Tamilnet99/keystand.htm) போன்றவற்றை இதில் தான் முழுமையாக பயன்படுத்த முடியும்.
-oOo-
இப்போது நீங்கள் வலைப்பதிவுகள் படிக்கவும் மறுமொழி விமர்சனங்கள் எழுதவும் ஆரம்பித்து விட்டீர்கள். அடுத்தது என்ன?
நீங்களும் ஒரு வலைப்பதிவை ஆரம்பித்து விட வேண்டியது தானே?
வலைப்பதிவு தொடங்குவது எப்படி?
அதற்கு முன்னால் ஒரு விஷயம்...
தமிழில் எழுதலாம் வாருங்கள், வலையில் பரப்பலாம் வாருங்கள் (http://kasilingam.com/wiki/doku.php?id=e-sangamam_1) என்று தமிழ்மணம் நிறுவனர் காசி மிகச்சிறந்த ஒரு தொடரை ஏற்கனவே எழுதியிருக்கிறார். அதில் அவர் பழைய பிளாக்கரில் வலைப்பதிய ஆரம்பிப்பது வரை சிறப்பான விளக்கமும் தந்திருக்கிறார்.
அதை நீங்கள் அவசியம் வாசிக்க வேண்டும்.
அடுத்து புதிய பிளாக்கர், வேர்ட்பிரஸ் உள்ளிட்ட சேவைகளில் பதிவு தொடங்குவது பற்றிய விளக்கங்களுடன் நான் தொடர்கிறேன்.
06:10 Posted in internet , இணையம் , வலைப்பதிவு | Permalink | Comments (5) | Email this | Tags: internet, blogs, வலைப்பதிவு, இணையம்
Friday, 17 August 2007
❒ வலைப்பதிவு என்றால் என்ன?
கணினி மற்றும் இணையத்தில் ஆங்கிலம் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில் கணினியில் தமிழ் எழுத முடியும்; அதை இணையத்தில் ஏற்ற முடியும் என்று அறிந்த உடன் பலவேறு எழுத்துருக்களால் அமைந்த இணையதளங்கள் தமிழிலும் உருவாக்கப் பட்டன. பொதுவாக தமிழ் ஆர்வலர் குழுக்கள், செய்தி நிறுவனங்கள் போன்றவையே அத்தகைய தளங்களை உருவாக்கி இருந்தனர். இந்நிலையில் யாகூ நிறுவனத்தின் geocities சேவையும் அது போன்ற சில சேவைகளும் இலவசமாகவே தளங்களை உருவாக்க வாய்ப்பு அளித்தன. எனவே ஏராளமான தனிநபர்களும் தங்களுக்கான இணைய தளங்களை உருவாக்கி தங்களைப் பற்றிய தகவல்களைப் பதிந்து வைத்தனர்.
தொடர்ந்து blogs எனப்படும் இணைய டைரிக் குறிப்புகள் புழக்கத்துக்கு வந்தன. ஆரம்பத்தில் blogdrive, livejournal போன்ற சேவைகள் பிரபலமாக இருந்தன. ஆங்கிலத்தில் blog எழுதிக் கொண்டிருந்த தமிழர்களில் சிலர் 2002 ஆண்டு வாக்கில் தமிழிலும் எழுத முற்பட்டனர். தொடர்ந்து தமிழில் நிறைய பிளாக்குகள் உருவாக தொடங்கின. blogger.com நிறுவன சேவை எளிமையாக கையாளக் கூடியதாகவும் இருந்ததால் பெரும்பாலானாவர்கள் அதையே விரும்பி செயல்படுத்தினர்.
அந்த காலகட்டத்தில் தமிழ் ஆர்வலர்களிடையே பிரபலமாக இருந்த யாகூ குழுமங்களில் திஸ்கி எழுத்துருவே பயன்படுத்தப் பட்டிருந்தது. ஆனால் நேரடியாக ஆங்கிலத்தில் இருந்து தமிழில் எழுத வந்ததாலோ என்னவோ பிளாக்கர்கள் யூனிகோடு குறிமுறையை பயன்படுத்தினர்.
ஆரம்ப பதிவர்கள் பிளாக்குகளை தமிழில் வலைப்பூ என்றும் வலைப்பதிவு என்றும் கூற ஆரம்பித்தனர். பின்னர் பெரும்பாலானவர்கள் வலைப்பதிவு என்ற பெயரையே பயன்படுத்தியதால் இன்று பிளாக் என்பது வலைப்பதிவு என்ற பெயராலேயே அறியப் படுகிறது.
பாமினி முதலான தட்டச்சு முறைகளைப் பயன்படுத்திய குழும மடல்களைப் போலன்றி இங்கே (அதே ஆங்கிலத்தில் இருந்து வந்த காரணமாக இருக்கலாம்) ரோமன் தட்டச்சு முறையே பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப் பட்டது.
சுரதா யாழ்வாணன் நேரடியாக தமிழை ரோமன் முறையில் எழுத ஆன்லைன் எழுதிகளை உருவாக்கினார். கூடவே
வலைப்பதிவு உருவாக்கும்போதே மறுமொழி எழுத அந்த நிரலிலேயே தமிழ் எழுதுகருவியை இணைத்துக் கொள்ளும் விதத்திலான அமைப்பையும் உருவாக்கி அளித்தார்.
இப்படியாக வலைப்பதிவு மூலம் தமிழ் எழுவது எளிமையாக இருப்பதை வாசகர்களாக வந்தவர்கள் உணர்ந்து தாங்களும் எளிதாக வலைப்பதிவுகளை ஆரம்பித்துக் கொண்டனர்.
பிளாக்கர் சேவையைத் தொடர்ந்து வேர்ட்பிரஸ் செயலியில் இயங்கும் weblogs.us என்னும் தளம் வலைப்பதிவு சேவையை அளிப்பது அறிந்து சிலர் அந்த சேவையைப் பயன்படுத்தி வலைப்பதிய ஆரம்பித்தனர். பின்னர் wordpress நிறுவனமே இலவச வலைப்பதிவு சேவையை ஆரம்பித்தது. பலரால் அந்த சேவையும் பயன்படுத்தப் படுகிறது. இவை தவிர yarl.net, yahoo 360, blogsome, blogneo, adada உட்பட இன்னும் நிறைய வலைப்பதிவுச் சேவைகள் இருக்கின்றன. அவற்றையும் பலர் பயன்படுத்துகின்றனர்.
movable type, neucleus, blog cms போன்று பலவித வலைப்பதிவு செயலிகள் பயன்படுத்தப் படுகின்றன. இப்போதைய பல வலைப்பதிவு சேவைகளும் wordpress கொண்டு இயங்குபவையாக உள்ளன. சொந்த தளத்தில் வலைப்பதிவு செய்பவர்களும் இப்போது பெரும்பாலும் வேர்ட்பிரஸ் வலைப்பதிவாகவே அவற்றை இயக்குகின்றனர்.
வலைப்பதிவில் என்ன எழுதப் படுகிறது?
பணிநிமித்தம் அயல் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் தங்கள் தமிழ் ஆர்வத்திற்கு ஒரு வடிகாலாகவே வலைப்பதிவுகளை பயன்படுத்த ஆரம்பித்தனர் என்று சொல்லலாம். இது தவிர வலைப்பதிவு என்பது ஒரு மாற்று ஊடகமாகவும் வளர்ந்து வருவதன் காரணமாக தமிழர்களிடையே வலைப்பதிவு ஆர்வமும் வளர ஆரம்பித்தது.
வலைப்பதிவு என்பது தனி இணையதளத்தைப் போலன்றி நேரடியாக வாசகரையும் எழுதுபவரையும் உடனுக்குடன் தொடர்புறுத்தும் ஒரு ஊடகம். வலைப்பதிவில் டைரிக்குறிப்பு போல அன்றாட அனுபவங்களையும் எழுதலாம். கதை, கவிதை,கட்டுரை என படைப்பாக்கமும் செய்யலாம். நிகழ்வுச் செய்திகளை பகிரலாம். திரைப்பட விமர்சனங்கள் செய்யலாம். எழுத்தில் எழுதக் கூடிய எதையும் வலைப்பதிவுகளிலும் எழுதலாம்.
அச்சு ஊடகம் போலன்றி வலைப்பதிவில் என்ன எழுதுகிறோமோ அதை வாசிப்பவர் அந்த நொடியிலேயே படைப்புக்கான விமர்சனத்தை மறுமொழியாகத் தந்து விட முடியும். எனவே வாசகரும் வலைப்பதிவரும் நேரடித் தொடர்பில் இருப்பவர்களாக இருக்கின்றனர். விரைவிலேயே வாசகரும் வலைப்பதிவராக மாறிவிடுவார். இவ்வாறு வலைப்பதிவர்களே வாசகர்களாகவும் வாசகர்களே வலைப்பதிவர்களாகவும் இருக்கும் நிலையே பெரும்பாலும் இருக்கிறது. வலைப்பதிவு பற்றி அறிந்து புதிதாக வாசகராகும் ஆர்வலர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இதன்மூலம் தமிழில் எழுதும் ஆர்வமும் திறமையும் வளர்கிறது. இது தவிர web.2.0 போன்ற இணைய வளர்ச்சியால் வலைப்பதிவுகளில் ஒலி, ஒளிக் காட்சிகளையும் காட்சிப் படுத்த முடிகிறது. இது வலைப்பதிவையும் ஒரு முழுமையான பல்லூடகமாக மாற வகை செய்தது.
இதனால் எழுத்துப் படைப்புகள் தவிர புகைப்படப் பதிவுகள், குரல் பதிவுகள், திரைப்பதிவுகள் என வலைப்பதிவுகளில் பன்முகத் திறமைகளுக்கு வாய்ப்பு இருக்கிறது.
தமிழில் வலைப்பதிவு தொடங்க என்ன செய்ய வேண்டும்?
1. முதலில் இணைய வசதியுடன் ஒரு கணினி சொந்தமாக இருப்பது நல்லது.
அல்லது
அலுவலகத்தில் உங்கள் பொறுப்பில் ஒரு கணினி இருந்தாலும் போதும். ;)
அதுவும் இல்லையா?
பரவாயில்லை...! கணினி மையம் ஒன்றில் சிறிது நேரம் செலவிட முடிந்தால் அதுவே போதுமானது.
(தொடரும் பகுதிகளில் நுட்பம் சார்ந்த தகவல்களும் செயல்முறை விளக்கங்களும் வரவிருக்கின்றன.)
03:55 Posted in internet , இணையம் , வலைப்பதிவு | Permalink | Comments (10) | Email this | Tags: blogs, பதிவுகள், தமிழ்
Thursday, 16 August 2007
❒ பட்டறையும் பதிவர் சந்திப்புகளும்
தமிழ்ப் பதிவுலகை உலுக்கிப் போட்ட பதிவர் பட்டறை சென்னையில் நடந்து முடிந்திருக்கிறது. பட்டறையில் நடைபெற்ற ஆக்கப் பூர்வமான செயல்களால் உலுக்கிப் போடாமல் பயனற்ற விவாதங்களால் உலுக்கி குலுங்கி உருண்டு புரண்டு ஒரு ரவுண்டு முடிந்து விட்டது. இப்போதைக்கு முடிந்ததாக கொள்ளலாம் என்றாலும் யார் எப்போது மறுபடி ஆரம்பிப்பார் என்று சொல்ல முடியாத ரகத்தைச் சேர்ந்த விவாதங்கள் அவை.
அது கிடக்கட்டும்.
2002 ல் ஆரம்பமான தமிழ் வலைப்பதிவுலகின் இணையப் பயணம் மிக நீண்ண்ண்டது அல்ல. ஐந்து வருடம் கடந்திருக்கிறது அவ்வளவு தான்.
பதிவுகள் சில நூறு கடந்த நிலையிலேயே பதிவர் சந்திப்புகளும் ஆரம்பமாகி விட்டன. யார் முதலில் ஆரம்பித்தார்கள் என்று சரியாக சொல்ல முடியாவிட்டாலும் காசி, பெயரிலி. கார்த்திக், நவன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்ட அமெரிக்க வாழ் தமிழ்ப்பதிவர்களின் சந்திப்பு, பின்னர் மதி, டிசே போன்றவர்கள் கலந்து கொண்ட கனடாவாழ் பதிவர்களின் சந்திப்பு போன்றவை பற்றி பதிவுகளில் படித்தது என் நினைவில் இருக்கிறது.
இப்படிப் பெரும்பாலும் வெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களாலேயே ஆரம்பிக்கப் பட்ட பதிவர் சந்திப்புகள் விடுமுறையில் நாடு திருப்பும் பதிவர்களோடு சந்திப்பாக சென்னையிலும் நடைபெற ஆரம்பமானதாக நினைவு.
தமிழ்நாட்டிலும் உலகின் தமிழ்வலைப் பதிவர்கள் வாழும் பிற நாடுகளிலும் பதிவர் சந்திப்புகள் ஆங்காங்கே நிகழ்ந்தன.
பின்னர் சென்னை வாழ் பதிவர்கள் அவ்வப்போது சந்திப்புகளை நடத்த ஆரம்பித்தனர். பூங்கா சந்திப்புகள், போண்டா சந்திப்புகள் என்று இருந்ததை பாலபாரதி உள்ளரங்க சந்திப்பாகவும் பொருளடக்கத்துடன் கூடியதாகவும் மாற்றினார்.
அடுத்த சந்திப்பு பூங்காவில் நடைபெற்றாலும் சாகரன நினைவு மலருடன் தெளிவான நிகழ்ச்சி நிரலுடன் மீடியா கவரேஜும் தந்த சிறப்பான சந்திப்பாக ஏற்பாடு செய்யப் பட்டது.
இதைத்தொடர்ந்து கோவையில் ஓசைசெல்லா முதலாவது பதிவர் பட்டறைக்கு ஏற்பாடு செய்தார். எதிர்பாராமல் அவரால் நேரில் கலந்து கொள்ள முடியாத சூழலில் அந்த பட்டறையையும் பாலபாரதியே நடத்தி முடித்தார். எனினும் பயிலரங்கை விட இலக்கியம் கலைகள் குறித்த சுவையரங்காகவே அந்த நிகழ்வு அமைந்து விட்டது.
பதிவுலகை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியே தீருவேன் என்று முயற்சி மேற்கொண்டிருந்த பாலபாரதி, ஆங்கிலப் பதிவுகளின் பட்டறைப் பொறுப்புகளில் பெற்ற அனுபவத்தால் தமிழிலும் நடத்த ஆர்வம் கொண்டிருந்த விக்கி ஆகியோரின் ஆர்வத்துடன் தமிழ் இணையச் செயல்பாடுகள் பலவற்றில் ஏற்கனவே பங்காற்றி இருந்த மா.சிவகுமார், நிகழ்காலப் பதிவுலக சுறுசுறுப்புத் தேனீ பொன்ஸ் ஆகியோர் இணைந்து சென்னைப் பட்டறைக்கான முதல் வடிவம் கொடுத்தனர். பட்டறைக்கான தள அமைப்பில் தொடங்கி ரவிசங்கரும் பொருளாதார ஆலோசனைகளுடன் பிரகாஷும் பட்டறை ஆலோசனைக்குழுவில் இணைந்து பட்டறைக்கான செயல்வடிவம் உருப்பெறத் துவங்கியது. பட்டறைக்கான சின்னம் உருவாக்க விக்கியால் அழைக்கப் பட்டு நானும், விளம்பர வடிவமைப்புகளில் தொடங்கி லக்கியும் பின்னர் இணைந்து கொண்டோம். பொதுக்குழுமம் ஒன்று அமைக்கப் பட்டு எங்களைத்தவிர பங்கேற்பாளர்களின் ஆலோசனைகளும் பெறப்பட்டன.
பட்டறையில் திறவூற்று தமிழ் மென்பொருள்கள் அடங்கிய சிடி மற்றும் தட்டச்சுக்கான கையேடு ஆகியவை பங்கேற்பாளர்களுக்கு வழங்க வேண்டும் என்ற ஆலோசனையை முன்வைத்த பாலபாரதி, கையேட்டை பத்ரி அச்சாக்கம் செய்து தர ஏற்றதும் அதை எழுதும் பொறுப்பை எனக்களித்தார். கணிச்சுவடி என்று மா.சிவகுமார் பெயர் தந்தார்.
பட்டறை ஏற்பாடுகள் செயலாக்கம் பெற்று ஆகஸ்ட் 5ம் தேதி சென்னைப் பதிவர் பட்டறையாக நடைபெற்று மேலே கண்ட கலவையான உணர்வலைகளை தமிழ் வலைப்பதிவர்களிடையே எற்படுத்தி வைத்திருக்கிறது.
பதிவர் பட்டறை குறித்து இன்று இங்கே எழுதக் காரணம்....
பட்டறைக்காக கணிச்சுவடி என்ற கணித்தமிழ் வழிகாட்டியை எழுதி வந்த வேளை அதற்காக எழுத ஆரம்பித்த பல குறிப்புகள் சுவடியில் சேர்க்க தேவை இல்லாமல் இருந்தது. எனினும் புதியவர்களுக்கு பயன்படும் பல குறிப்புகள் அவை என்பதாலும் குறிப்பிட்ட தலைப்பில் இதுவரை முழுமையான வழிகாட்டி இல்லை என்று சொல்லப் பட்டதாலும் வலைப்பதிவுகள் என்றால் என்ன என்பது தொடங்கி ஒரு தொடராக எழுத இருக்கிறேன்....
உங்கள் ஒத்துழைப்பும் அவ்வப்போது ஆலோசனைகளும் எதிர்பார்க்கிறேன்...
07:45 Posted in internet , இணையம் , வலைப்பதிவு | Permalink | Comments (12) | Email this | Tags: blog


