Saturday, 01 March 2008
❒ ஸ்டெல்லா புரூஸ்
தமிழில் குமுதம் விகடன் உள்ளிட்ட பிரபல இதழ்களில் அது ஒரு மழைக்காலம், எல்லா சாலைகளும் குற்றங்களை நோக்கி, அது ஒரு நிலாக்காலம் போன்ற கதைகளின் மூலம் 90களில் பிரபலமாக இருந்த எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸ்.
விருதுநகரில், செல்வமும் செல்வாக்கும் உள்ள குடும்ப பின்னணியில் பிறந்து வளர்ந்து டி.வி.எஸ் ஏஜென்சியை நடத்திக் கொண்டிருந்த இவர் எழுத்தார்வம் காரணமாக தொழிலை கவனிக்காமல் இழப்புகளைச் சந்தித்தவர்.
உரியவயதில் திருமணமும் செய்துகொள்ளாமல் நடுத்தர வயதில் காதல் வயப்பட்டு ஹேமா என்பவரை மணந்தார். குழந்தைகள் இல்லாத நிலையில் காதல் மனைவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மேலும் வறுமையின் பிடியில் சிக்கினார்.
சிறுநீரகக்கோளாறு காரணமாக நீண்டநாள் சிகிட்சையும் பலனளிக்காமல் மனைவி இறந்துவிட தனிமை, வறுமை துரத்த கற்பனைகளில் வாழ்ந்த அந்த கதாசிரியன் தற்கொலை செய்து கொண்டு விட்டார்.
ஸ்டெல்லாபுரூஸ் என்ற பெயரில் எழுதிய அவரது இயற்பெயர் ராம்மோகன்.
11:00 Posted in இலக்கியம் | Permalink | Comments (21) | Email this | Tags: Stellia Bruce, ஸ்டெல்லா புரூஸ்
Wednesday, 27 February 2008
❒ சுஜாதா - சில குறிப்புகள்
கடந்த மாதம் முதல் உடல்நலக்குறைவு காரணமாக அப்பலோ மருத்துவமனையில் சிகிட்சை பெற்று வந்த எழுத்தாளர் சுஜாதா இன்று இரவு 9.30 மணியளவில் காலமானார்.
சுஜாதா சில குறிப்புகள்
பிறப்பு: மே 3, 1935
இயற்பெயர்: ரங்கராஜன்
இவரது மனைவியின் பெயரான சுஜாதா என்ற பெயரில் படைப்புகளை எழுதி வந்தார்.
சுஜாதாவின் முதல் கதை 1953 ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது. அவர் கடைசியாக வசனம் எழுதிய திரைப்படம் சிவாஜி.
தொடர்கதையாக வெளிவந்த இவரது நாவல்கள் காயத்ரி, கரையெல்லாம் செண்பகப்பூ, ப்ரியா, விக்ரம், வானம் வசப்படும் போன்ற பின்னர் திரைப்படமாக்கப் பட்டன.
ரோஜா, இந்தியன், முதல்வன், பாய்ஸ், விசில், கன்னத்தில் முத்தமிட்டால், ஆய்தஎழுத்து, அந்நியன், சிவாஜி போன்ற படங்களில் இவரே கதை வசனம் எழுதி பணியாற்றி இருக்கிறார்.
கணையாழியின் கடைசிப் பக்கங்கள், விகடனில் கற்றதும் பெற்றதும் என தமிழில் பத்தி எழுத்துக்களில் ஒரு முன்மாதிரியை உருவாக்கியவர்.
சிறுகதை, நாவல், நாடகம், அறிவியல் கதைகள், அறிவியல் கட்டுரைகள். கவிதைகள், பொதுக் கட்டுரைகள், திரைப்பட கதை வசனம், தொலைக்காட்சி நாடகங்கள் என பல துறைகளில் முத்திரை பதித்தவர். சுஜாதாவின் படைப்புகளைப் படித்து அந்த ஆர்வத்தாலேயே எழுத்துலகிற்கு வந்தவர்கள் பலர். இந்த வகையில் மிகப்பெரிய எழுத்துலக சீடர்களைப் பெற்ற முன்னோடி எழுத்தாளர்.
தமிழ் எழுத்து நடையில் பல பரிசோதனை முயற்சிகளையும் செய்தவர். அந்தச் சோதனைகளில் உருவான வசீகரமான எழுத்துநடைதான் வாசகர்களை கட்டிப் போட்டிருந்தது. தீவிரமான இலக்கியப் படைப்பாளியாக இல்லாமலே ஜனரஞ்சகமான எழுத்துக்களாலேயே தமிழ் இலக்கியச் சூழலில் அசைக்க முடியாத ஆளுமையாக நிலைபெற்றிருந்தார்.
பெங்களூர் பாரத மின்னணு நிறுவனத்தில் பணியாற்றிய போது தற்போதைய மின்னணு வாக்குப் பதிவு இயந்திர உற்பத்தியில் இவரது ஆலோசனைகளும் இருந்ததாக கூறப்படுவதுண்டு. அறிவியல் தமிழை சாதாரண மக்களிடையே எடுத்துச் சென்றதில் இவரது பங்களிப்பு முக்கியமானது. 80 களுக்குப் பின் உருவான தமிழ் படைப்பாளிகள் இவரது பாதிப்பு இல்லாமல் இருக்க முடியாது என்ற அளவுக்கு தமிழ்ச்சூழலில் இவரது ஆதிக்கம் நிலைபெற்றிருந்தது.
பிப்ரவரி 27 இரவு 9.30 மணியளவில் ஒரு எழுத்துலக சகாப்தம் முடிவடைந்தது.
*
குறிப்பு: சுஜாதா அஞ்சலியாக வரும் பதிவுகள் தமிழ்.கணிமை திரட்டியில் பதிவுகள் முகப்பில் தனியாக திரட்டப் படுகின்றன.
19:25 Posted in இலக்கியம் | Permalink | Comments (12) | Email this | Tags: sujatha, சுஜாதா, ரங்கராஜன்
Friday, 08 February 2008
❒ நிர்வாண உலகம்
ஆசை?

ஆடை துறத்தல் நிர்வாணமல்ல. ஆசை துறத்தலே நிர்வாணம்.
புத்தர் உடல் மீதான பற்றை விடுத்து நிர்வாண நிலையடைந்த நாளை பிப்ரவரி 8ம் தேதி பவுத்தர்கள் கொண்டாடுகின்றனர். சில பகுதிகளில் பிப்ரவரி 15ம் தேதியும் அனுசரிக்கப் படுகிறது...
கி.மு ஐந்தாம் நூற்றாண்டில் ஒரு மே மாத பவுர்ணமி தினத்தில் இன்றைய நேபாளத்திலுள்ள, லும்பினி என்னுமிடத்தில் பிறந்த சித்தார்த்தன் பின்னாளில் கவுதம புத்தராக பரிணமித்த்து எப்படி?
வெளியுலகத் தொடர்புகளின்றி அரண்மனையின் சுகபோகங்களை மட்டுமே கண்டு வளர்ந்து, தனது 16வது வயதில் யசோதரையை மணந்த சித்தார்த்தன் புற உலக வாழ்க்கையின் துன்பங்களை உணராமலே வாழ்ந்து வந்தார்.
மனைவியோடும் மகன் ராகுலனோடும் சுகபோக வாழ்க்கை வாழ்ந்த சித்தார்த்தன் தனது 29ம் வயதில் முதன் முதலாக ஒரு புறப்பயணம் மேற்கொண்டபோது ஒரு பிச்சைக்கார வயோதிகரையும், துன்புறும் ஒரு நோயாளியையும், ஒரு பிண ஊர்வலத்தையும், துறவி ஒருவரையும் காண நேரிட்டது. வாழ்க்கையின் நிலையாமை பற்றிய பல புரிதல்களை இவர்களில் கண்டு கொண்ட சித்தார்த்தன் உலக வாழ்க்கையில் வெறுப்புக் கொண்டான்..
சித்தார்த்தன் பிறந்த போது வருகை தந்த ஞானி ஒருவர் அவன் துறவியாக வருவான் என்று கூறியதால் துன்புறும் மக்களைக் காண அனுமதிக்காமல் மகிழ்ச்சியான மனநிலையிலேயே வைத்து சுகபோகங்களில் ஈடுபடுத்தியதாக கூறப்படுகிறது...அது எதிர்மறை விளைவையே ஏற்படுத்தி இருக்க வேண்டும். அளவுக்கு மீறிய சுகபோகங்கள் திகட்டி விட்ட சித்தார்த்தன் வாழ்க்கையில் வெறுப்புற்றான். சுகபோகங்கள் இல்லாத மக்கள் இருப்பதையும் அவர்களின் துன்பம், மூப்பு, நோய், வறுமை, மரணம், வாழ்க்கையின் நிலையாமை போன்றவற்றை உணர்ந்து கொண்டான்.
மனைவி, மகன், அரண்மனை சுகபோகங்களை உதறி வெளியேறிய சித்தார்த்தன் தனது 35ம் வயதில் கயா என்னுமிடத்தில் போதிமரத்தடியில் கடும் தவம் மேற்கொண்டார். அங்கே ஞானநிலை பெற்று சித்தார்த்தன் புத்தரானார்.
ஆசையே துன்பத்தின் அடிப்படை என்பது அவரது போதனைகளின் அடிப்படையாக இருந்தது. ஒவ்வொரு மனிதனும் ஆசைகளைத் துறந்து புத்த நிலையை அடைய முடியும் என்பது அவரது அறிவுரை...
புத்தரின் காலத்துக்குப் பின் அவரது அறிவுரைகள் பவுத்த மதமாக பரிணமித்தது.
கலிங்கப் போருக்குப் பின் பவுத்தத்தை தழுவிய அசோகன் தனது மகளையும் மகனையும் புத்த துறவிகளுடன் அனுப்பி வைத்தான். அவர்களே இலங்கை, இந்தோனேஷியா முதலிய தென்கிழக்காசிய நாடுகளின் பவுத்தம் பரவக் காரணமானவர்கள்.
புத்தரின் சீடர்களால் பரப்பப் பட்ட பவுத்த மதம் பின்னாளில் இந்தியாவில் தனது செல்வாக்கை பெருமளவு இழந்த போதிலும் தென்கிழக்கு ஆசியா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் மிகுந்த செல்வாக்கைப் பெற்றுள்ளது.
தாழ்த்தப் பட்டவர்களின் தலைவராக கொண்டாடப் படும் அம்பேத்கர் தாழ்த்தப் பட்ட மக்களுக்கு உயர்சாதி மக்களால் மதசமத்துவம் தரப்படாத நிலை கண்டு தனது மக்களோடு பவுத்த மததுக்கு மதம் மாறினார்.
(குட்டீஸ்க்காக முன்பொருமுறை எழுதியது.)
*
இன்று புத்த நிர்வாணா தினம்.
05:55 Posted in இலக்கியம் , வாழ்வியல் | Permalink | Comments (5) | Email this | Tags: buddha, nirvana, புத்தர், நிர்வாணம்
Wednesday, 30 January 2008
❒ தமிழச்சிக்கு செய்யப்பட்ட துரோகம்
தமிழச்சி பேரச் சொல்லி பதிவுகளெல்லாம் அதகளப்படுது... அதுக்குள்ள மூக்கை நுழைக்க இப்போதைக்கு நமக்கு எண்ணமில்லாவிட்டாலும் இது கூட பெண்ணியம் சார்ந்த விசயம் என்பதால்...
சமீபத்தில் திருநெல்வேலியில் நடைபெற்ற திமுக இளைஞர் அணி மாநாட்டில் ஏதோ ஒரு புதுமுகத்தை அரசியல் அரங்கில் அறிமுகப் படுத்த இருப்பதாக வதந்தி இருந்து வந்தது. அது போலவே தமிழச்சி தங்கபாண்டியன் என்று ஒருபுதுமுகத்தை அரசியல் அரங்கில் அறிமுகம் செய்தார்கள்... இப்போது கனிமொழி கலந்து கொள்ளும் கூட்டங்கள் பலவற்றில் தமிழச்சியும் கலந்துகொள்கிறார்...
பல விழா மேடைகளில் கலர்புல்லாக காட்சியளிக்கும் இவரை யார் இவர் என்று எல்லோரும் வியப்போடு பார்ப்பது உண்மைதான்.
இவர் திமுகவின் துவக்ககால தலைவர்களில் ஒருவரான தங்கபாண்டியனின் மகள். இவரது கணவர் ஒரு காவல்துறை அதிகாரி. இவருக்கு கல்லூரியில் படிக்கும் ஒரு மகள் உட்பட இரண்டு மகள்கள் இருக்கிறார்களாம்.
இந்த அரசியல் அறிமுகத்துக்கு முன்பே ஒரு கவிஞராக அறியப் பட்டவர்தான் இந்த தமிழச்சி.
எஞ்சோட்டுப்பெண் என்னும் இவரது முதல் கவிதைநூல் கவிஞர் தமிழச்சியாக இவரை அரங்கேற்றியது.
'எனக்கான வார்த்தைகளை
நீ முடிவு செய்கையில்
நான் தேர்கிற மௌனம்
மிக வலிமையானது
ஒரு வயோதிகப் பிச்சைக்காரனைப்
புறந்தள்ளிய அலட்சியத்துடன்
நீ நடக்கும்பொழுது
அவனுக்கு நிழல் தரும் மரத்தின்
திடத்துடன் உன்னைச் சந்திக்கும்
உரத்த குரலெழுப்பும்
மல்யுத்த வீரனின் சவாலுடன்
நீ திமிர்த்திருக்கையில்
நடுங்கும் கைகளுடன் உணவிடும்
தாயின் கனிவுடன் உன்னை நேரிடும்
தன் இரவிற்கான போர்வையினை
ஒரு நாடோடியிடமிருந்து
இரவலாய்ப் பெற்றுக்கொண்டு
உன்னை உறுதியாய் எதிர்கொள்ளும்
தனித்து வரும்
ஒற்றை யானையின் கோபத்துடனும்
பிடிபடா வண்ணத்துப் பூச்சியின் சாதுரியத்துடனும்.
வனப்பேச்சி என்னும் இரண்டாவது நூல் அரசியல் அறிமுகத்துக்குப் பின் வந்திருக்கிறது.
வனப்பேச்சியிலிருந்து....
"சுடு சோறு கொதி கஞ்சி
வேப்பம் பழம்
பொசுக்கியதே இல்லை
ஊர் வெயில்.
குளிரூட்டப்பட்ட
நகரத்து அறைகளில் வசிக்கும்
என் மகள் கேட்கிறாள்"
.............
சுருண்டிருக்கும் சர்ப்பமென
அவசரம் புதைந்திருக்கும்
இந்நகரத்தின் எந்த வீட்டில்
குழந்தைக்கான ஒரு தூளிச்சேலையும்
வயது முதிர்ந்தவளுக்கான சுருக்குப்பையும் இருக்கிறதோ
அங்குதான் விருந்தினளாக வருவேன்
என்ற அடம் வனப்பேச்சிக்கு...
ஆஸ்திரேலியா வாழ் இலங்கைத் தமிழர்களின் ஆங்கிலப் படைப்புகள் என்னும் தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு செய்கிறார். இவரது முதல் தொகுப்பான எஞ்சோட்டுப்பெண் பாரதியார் விருது, சிற்பி இலக்கிய விருது போன்றவற்றைப் பெற்றுள்ளது. கவிஞர் மட்டுமல்லாமல் நடன, நாடகக் கலைஞராக மிளிர்ந்து இயல், இசை, நாடகத் தமிழ்க் கலைஞராக இருக்கும் இவர் சென்னை ராணி மேரிக்கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளராக பணியாற்றுகிறார்.
சுமதி என்ற இயற்பெயரை தனக்கான தனி அடையாளத்துக்காக தமிழச்சி என மாற்றிக் கொண்ட தனித்திறம் பெற்ற ஒரு பெண்மணியின் பெயரை தந்தையின் பெயரொட்டு இணைத்து தமிழச்சி தங்கபாண்டியனாக மாற்றியதன் மூலம் கலைஞர் ஒரு பெண்ணின் தனித்துவத்தை இல்லாமலாக்கி இருக்கிறார் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.
அவரது அரசியல் பின்னணியை பெயர் சூட்டித்தானா வெளிப்படுத்த வேண்டும்? இது தமிழச்சியின் தனித்துவ அடையாளத்துக்கு இழைக்கப் பட்ட துரோகமன்றி வேறென்ன?
12:55 Posted in அரசியல் , இலக்கியம் , விமர்சனம் | Permalink | Comments (9) | Email this | Tags: தமிழச்சி, கலைஞர், திமுக, கவிஞர்
Thursday, 24 January 2008
❒ தமிழ் புத்தகச் சந்தை
தமிழ்ப் புத்தக விற்பனையில் புத்தகக் கண்காட்சிகள் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி இருப்பதாக அறிய முடிகிறது. குறைந்த பட்சம் இத்தனை தமிழ் புத்தகங்கள் இருக்கின்றன என்பதை வழக்கமாக புத்தகக் கடைகளுக்குச் செல்லாத மக்கள் கூட திருவிழாக் கூட்டம் போல கண்காட்சிக்குச் சென்று காண்கிறார்கள்.
இன்னொரு புறம் இணையம் என்ற நவீன ஊடகம் வழியாகவும் மக்கள் இன்று புத்தகங்களை நேரடியாக வாங்க முடிகிறது... கிழக்கு போன்ற பதிப்பகங்கள் இணையத்தின் மூலமாக தமிழ் நூல்களை விற்பனை செய்கிறார்கள். எனி இந்தியன், காந்தளகம் போன்ற இணையப் புத்தகக் கடைகள் உள்ளன. விருபா தமிழ் புத்தக வெளியீடுகளை பட்டியலிட்டு இணையத்தில் தகவல் தருகிறது.
தமிழ்ப்புத்தகச் சந்தை என்னும் இணையதளம் இன்னொரு விதமாக புத்தக ஆர்வலர்களுக்காக செயல்பட ஆரம்பித்திருக்கிறது. குறிப்பிட்ட புத்தகத்தை வாங்க விரும்பும் வாசகர் அது எங்கே கிடைக்கும் என்று அறியாத நிலையில் இங்கே, தான் வாங்க விரும்பும் புத்தகத்தைப் பற்றி அறிவிக்கலாம். முன்பு வாங்கிய பழைய புத்தகங்களை விற்க விரும்பும் வாசகரும் கூட இங்கே அறிவிக்கலாம். பதிப்பாளர்கள், நேரடியாக புத்தகம் வெளியிடும் படைப்பாளிகள் போன்றவர்கள், தாங்கள் வெளியிட்டுள்ள குறிப்பிட்ட புத்தகம் பற்றிய தகவல்களை இங்கே விளம்பரப் படுத்தலாம்...இவை இலவச சேவைதான். வாசகர்- படைப்பாளிகள் - பதிப்பகத்தார் இடையே தொடர்புப் பாலமாக இந்த தளம் அமைந்துள்ளது.
நீங்களும் வாங்க விரும்பும் அல்லது விற்க விரும்பும் புத்தகம் பற்றி அறிவிக்கலாமே?
05:20 Posted in இணையம் , இலக்கியம் | Permalink | Comments (6) | Email this | Tags: book, books, tamil, புத்தகம், புத்தகங்கள், நூல், நூல்கள்
Thursday, 20 December 2007
❒ பூக்களில் உறங்கும் மவுனங்கள்

காதல் ஜோடிகள் முதல்
கடலை விற்பவர் வரை
வருவோர் போவாரெல்லாம்
பேசிக் கொள்ள
பேசிக் கொல்ல...
சந்தோஷங்கள் என்றாலும்
சங்கடங்கள் வந்தாலும்...
பகிர்ந்து கொள்ளப் பூங்காக்கள்...
அங்கே பேசாதிருப்பவை
பூக்கள்...
பூக்கள் மட்டுமே.
ஆசைகள், அவலங்களென
மக்கள் இறக்கி வைத்த
மனப் பாரங்களைச் சுமந்து
பூக்களில் உறங்கும் மவுனங்கள்!
...
12:15 Posted in இலக்கியம் | Permalink | Comments (6) | Email this | Tags: கவிதை
Wednesday, 19 December 2007
❒ நச்'a'ன்று ஒரு கதை
அதிகாலையில் ஒலித்த தொலைபேசி மணியோசை புரபசரை எழுப்பியது
"ஹலோ..புரபசர் நீங்க கேட்ட மாதிரி ஒரு விபத்து கேஸ் வந்திருக்கு... இதயம் நின்று விட்டது..செயற்கை சுவாசம் கொடுத்திருக்கிறோம். பிழைக்க ஒரு சதவீத வாய்ப்பு கூட இல்லை."
"மூளை எப்படி இருக்கு...உறவினர்கள் சம்மதிப்பார்களா?"
"கவலைப்பட வேண்டாம்..மூளையில் எந்த சேதமும் இல்லை....வயிற்றில் தான் சக்கரம் ஏறி சிதைந்து விட்டது...உறவினர்கள் யாரும் வரவில்லை...வழியில் பார்த்த யாரோ ஒருவர் நம்ம ஆம்புலன்சுக்கு போன் செஞ்சு சொன்னார்."
"போலீஸுக்கு தகவல் சொல்லி விட்டீர்களா?"
"இல்லை..சொன்னால் வீணாக போஸ்ட்மார்ட்டம் அது இதுவென்று பிரச்சினை வரும்..."
"சரி நான் ஆபரேசனுக்கு தயாராக இருக்கிறேன்..நீங்க கொண்டு வந்திடுங்க..."
"சரி"
புரபசர் மூளை மாற்று அறுவை சிகிட்சையில் ஆராய்ச்சி செய்கிறார். எலி, முயல், குரங்கு என்று மாறிமாறி சோதனை முடித்தாகி விட்டது... இனி மனித மூளை வேண்டும்...அரசாங்க தடை இருப்பதால் ரகசியமாக செய்ய வேண்டி இருக்கிறது.
டாக்டர் பரசுராமன் பிரபலமான தனியார் மருத்துவமனை ஒன்றை நடத்துகிறார்...புரபசரின் ஆராய்ச்சிக்கு உதவுபவர்.
இதயம் நின்று போனாலும் மனித உடலில் மூளை சில மணித்துளிகள் உயிருடன் இருக்கும். அந்த நிலையில்தான் மூளை மாற்றுக்கு பயன்படுத்த முடியும். எனவே பொருத்தமான மூளைக்காக காத்திருந்தார்கள். இப்போது சரியான ஒன்று கிடைத்திருக்கிறது.
பரசுராமன் அந்த இறந்து கொண்டிருக்கும் மனிதனுடன் புரபசரின் ஆராய்ச்சிசாலைக்கு வந்தார். புரபசர் அதற்குள் ஆராய்ச்சி சாலையின் பின்புறம் இருந்த குதிரை லாயத்தில் இருந்து ஒரு குதிரையை டிராலியில் ஏற்றி மயக்க ஊசியைப் போட்டார். டிராலியை ஆய்வுக்கூடத்துக்கு கொண்டு வந்தார். பரசுராமன் வந்ததும் இருவருமாக உடனே வேலையை ஆரம்பித்தனர்.
கிட்டத்தட்ட நான்கு மணிநேரம். மயிர்க்கற்றைகளாய் சிதறிக்கிடந்த இரத்தக் குழாய்களைப் பிரிப்பதும் இணைப்பதுமாய்...அனிச்சையாய் கடகடவென கைகளின் இயக்கம்...ஆர்வமும் படபடப்புமாய்...எல்லாம் முடிந்து பிளக்கப் பட்ட மண்டையோட்டை இணைத்துத் தைத்து முடித்த பிறகே நிகழ் உலகிற்குள் வந்தார்கள். இணைக்கப் பட்டிருந்த மானிட்டர்கள் சரியான துடிப்புகளை வரிசைப்படுத்த தொடங்கிய போதுதான் நிம்மதியானார்கள்.
வெற்றி..வெற்றி...
இருவரும் கைகுலுக்கிக் கொண்டார்கள்...இன்னும் உலகிற்கு அறிவிக்கும் காலம் வரவில்லை... பல சோதனைகள் பாக்கி இருக்கின்றன. எல்லாம் முடியும்போது மூளைமாற்று என்னும் மருத்துவ அற்புதம் மருத்துவ உலகை கலக்கப் போகிறது...
*
ஒருவாரம் ஆராய்ச்சி சாலையில் கிடந்த குதிரையை வெளியே காற்றாட அழைத்துப் போனார் புரபசர். மேலும் பத்து நாட்கள் கடந்த போது குதிரையை வெளியே கட்டி வைத்தார். சில சோதனைகள் செய்ய வேண்டி இருந்தது.
அப்போது செல்பேசி இசைத்தது. "ஹலோ...ஐயையோ...மறந்து விட்டேனே? ஸாரி டியர், விமானம் வந்து விட்டதா? இதோ வந்து விடுகிறேன். அங்கேயே இரு"
புரபசர் வெளிநாட்டிலிருந்து திரும்பும் மகளை அழைத்து வர அவசரமாக புறப்பட்டார்.
அவர் விமான நிலையத்தை அடைவதற்குள் மகளின் அழைப்பு மீண்டும் வர, காரைத் திருப்பினார்.
டாக்சியில் ஏறி வீட்டுக்கு வந்த ரம்யா அப்பாவின் ஆராய்ச்சி சாலை வாசலில் நின்றிருந்த கம்பீரமான குதிரையைக் கண்டதும் கையில் இருந்த பயணப்பைகளை தூக்கி எறிந்து விட்டு குதிரையை நோக்கித் தாவினாள்.
*
புரபசர் காரில் இருந்த டிவியை இயக்கினார்.
14 பெண்களை கொடூரமாகக் கொலை செய்த சைக்கோ கொலைகாரன் பற்றிய விவரங்கள் புகைப்படத்துடன் அறிவிப்பு ஓடிக் கொண்டிருந்தது....
கார் வீட்டை நெருங்கியபோது
புரபசர் மனதில் அவன் முகம் மின்னலடித்தது.
அதே வினாடியில் திவ்யாவின் அலறல் அங்கே எதிரொலித்தது...
(right click - select all)
09:55 Posted in இலக்கியம் | Permalink | Comments (8) | Email this | Tags: சிறுகதை
Tuesday, 30 October 2007
❒ சிந்தாநதி ஓய்ந்தது
அந்த படைப்பு தினமணிக்கதிரில் தொடராக வந்தபோது அவ்வப்போது படித்திருக்கிறேன். அதைப்புரிந்து கொள்ளும் வயது அப்போது இருந்ததா என்பது சந்தேகமே. ஆனாலும் மனதை வருடும் எழுத்து என்பதால் தொடர்ந்து படிக்கத் தூண்டிக் கொண்டிருந்தது.
அவரும் ஒரு எழுத்துலக ஆளுமை என்று அறிந்து கொண்டபிறகு அவரது படைப்புகள் பலவற்றைப் படித்திருக்கிறேன். என்றாலும் சிந்தாநதி என்ற பெயர் ஏனோ மறக்க இயலாததாக ஆகிவிட்டது.பதிவுக்குப் பெயர் வைக்கத் தேடியபோது மனதில் விழுந்த அந்த விதையால் தானோ என்னவோ அந்தப் பெயரையே வைக்கத்தூண்டியது.
அந்தச் சிந்தாநதி தன் ஓட்டத்தை நிறுத்தி விட்ட செய்தி அறிந்த பின் வந்து பார்த்தால் சில பதிவுகள் ஏற்கனவே எழுதப் பட்டிருந்தன. நமக்குப் பெயர் தந்தவர் அல்லவா? எழுதாமல் இருக்கலாமா?
1916 ல் பிறந்த லா.ச.ரா. என்ற லால்குடி சப்தரிஷி ராமாமிருதம் இன்று தனது 91 வயதில் மறைந்தார்.
பாற்டல், சிந்தாநதி ஆகியவை அவரது அனுபவப் பகிர்வுகள். தன்வரலாறு என்றும் சொல்லலாம். அபிதா, பிராயச்சித்தம் உள்ளிட்ட முக்கிய நாவல்கள், ஏராளமான சிறுகதைகள் எழுதிய படைப்பாளி. சிந்தாநதிக்கு 1989-ல் சாகித்ய அகாடமி விருது பெற்றார்..
லா.ச.ரா பற்றி மேலும் விரிவாக...
பாற்கடலின் ஆழத்திலிருந்து... - இரா. ஹரிஹரன்
'குமுதம் ஜங்ஷன்' நேர்காணல் - தளவாய்சுந்தரம்.
லா.ச.ரா. புத்தகங்கள் சில...
18:00 Posted in இலக்கியம் | Permalink | Comments (5) | Email this | Tags: லாசரா
Sunday, 23 September 2007
❒ அயோத்தி ராமனா? அயோக்கிய ராமனா?
இராமன் சீதையைக் கடிந்து உரைத்தல்
கணங்கு உறு துணை முலை முன்றில் தூங்கிய
அணங்கு உறு நெடுங் கணீர் ஆறு பாய்தர,
வணங்கு இயல் மயிலினை, கற்பின் வாழ்வினை,
பணம் கிளர் அரவு என எழுந்து, பார்ப்புறா, 48
'ஊண் திறம் உவந்தனை; ஒழுக்கம் பாழ்பட,
மாண்டிலை; முறை திறம்பு அரக்கன் மா நகர்
ஆண்டு உறைந்து அடங்கினை; அச்சம் தீர்ந்து, இவண்
மீண்டது என் நினைவு? "எனை விரும்பும்" என்பதோ? 49
'உன்னை மீட்பான்பொருட்டு, உவரி தூர்த்து, ஒளிர்
மின்னை மீட்டுறு படை அரக்கர் வேர் அற,
பின்னை மீட்டு, உறு பகை கடந்திலேன்; பிழை
என்னை மீட்பான்பொருட்டு, இலங்கை எய்தினேன். 50
'மருந்தினும் இனிய மன்னுயிரின் வான் தசை
அருந்தினையே; நறவு அமைய உண்டியே;
இருந்தனையே? இனி எமக்கும் ஏற்பன
விருந்து உளவோ? உரை-வெறுமை நீங்கினாய்! 51
'கலத்தினின் பிறந்த மா மணியின் காந்துறு
நலத்தின் நிற் பிறந்தன நடந்த; நன்மைசால்
குலத்தினில் பிறந்திலை; கோள் இல் கீடம்போல்
நிலத்தினில் பிறந்தமை நிரப்பினாய் அரோ. 52
'பெண்மையும், பெருமையும், பிறப்பும், கற்பு எனும்
திண்மையும், ஒழுக்கமும், தெளிவும், சீர்மையும்,
உண்மையும், நீ எனும் ஒருத்தி தோன்றலால்,
வண்மை இல் மன்னவன் புகழின், மாய்ந்தவால். 53
'அடைப்பர், ஐம் புலன்களை; ஒழுக்கம் ஆணியாச்
சடைப் பரம் புனைந்து, ஒளிர் தகையின் மா தவம்
படைப்பர்; வந்து இடை ஒரு பழி வந்தால், அது
துடைப்பர், தம் உயிரொடும்-குலத்தின் தோகைமார். 54
'யாது யான் இயம்புவது? உணர்வை ஈடு அறச்
சேதியாநின்றது, உன் ஒழுக்கச் செய்தியால்;
சாதியால்; அன்று எனின், தக்கது ஓர் நெறி
போதியால்' என்றனன்-புலவர் புந்தியான். 55
இராமனது உரை கேட்டு, முனிவர் முதலியோர் அரற்றுதல்
முனைவரும், அமரரும், மற்றும் முற்றிய
நினைவு அரு மகளிரும், நிருதர் என்று உளார்
எனைவரும், வானரத்து எவரும், வேறு உளார்
அனைவரும், வாய் திறந்து, அரற்றினார் அரோ. 56
இராமனின் கடுமொழி கேட்ட சீதையின் துயர நிலை
கண் இணை உதிரமும், புனலும் கான்று உக,
மண்ணினை நோக்கிய மலரின் வைகுவாள்,
புண்ணினைக் கோல் உறுத்தனைய பொம்மலால்
உள் நினைப்பு ஓவி நின்று, உயிர்ப்பு வீங்கினாள். 57
பருந்து அடர் சுரத்திடை, பருகு நீர் நசை
வருந்து அருந் துயரினால் மாளலுற்ற மான்,
இருந் தடம் கண்டு, அதின் எய்துறாவகைப்
பெருந் தடை உற்றெனப் பேதுற்றாள் அரோ. 58
உற்று நின்று, உலகினை நோக்கி, ஓடு அரி
முற்றுறு நெடுங் கண் நீர் ஆலி மொய்த்து உக,
'இற்றது போலும், யான் இருந்து பெற்ற பேறு;
உற்றதால் இன்று அவம்!' என்று என்று ஓதுவாள்; 59
'மாருதி வந்து, எனைக் கண்டு, "வள்ளல் நீ
சாருதி ஈண்டு" எனச் சமையச் சொல்லினான்;
யாரினும் மேன்மையான் இசைத்தது இல்லையோ,
சோரும் என் நிலை? அவன் தூதும் அல்லனோ? 60
'எத் தவம், எந் நலம், என்ன கற்பு, நான்
இத்தனை காலமும் உழந்த ஈது எலாம்
பித்து எனல் ஆய், அறம் பிழைத்ததாம் அன்றே,
உத்தம! நீ மனத்து உணர்ந்திலாமையால். 61
'பார்க்கு எலாம் பத்தினி; பதுமத்தானுக்கும்
பேர்க்கல் ஆம் சிந்தையள் அல்லள், பேதையேன்;
ஆர்க்கு எலாம் கண்ணவன், "அன்று" என்றால், அது
தீர்க்கல் ஆம் தகையது தெய்வம் தேறுமோ? 62
'பங்கயத்து ஒருவனும், விடையின் பாகனும்,
சங்கு கைத் தாங்கிய தருமமூர்த்தியும்,
அங்கையின் நெல்லிபோல் அனைத்தும் நோக்கினும்,
மங்கையர் மன நிலை உணர வல்லரோ? 63
'ஆதலின், புறத்து இனி யாருக்காக என்
கோது அறு தவத்தினைக் கூறிக் காட்டுகேன்?
சாதலின் சிறந்தது ஒன்று இல்லை; தக்கதே,
வேத! நின் பணி; அது விதியும்' என்றனள். 64
சீதை இலக்குவனை தீ அமைக்குமாறு வேண்டல்
இளையவன் தனை அழைத்து, 'இடுதி, தீ' என,
வளை ஒலி முன் கையாள் வாயின் கூறினாள்;
உளைவுறு மனத்தவன் உலகம் யாவுக்கும்
களைகணைத் தொழ, அவன் கண்ணின் கூறினான். 65
அக்கினியில் குதித்தும் கற்பின் மாண்பினால் அக்கினி தீண்டாது மீண்ட சீதையை கண்ட இராமன் தன் தவறுக்கு மன்னிப்பை வேண்டவில்லை. ஒரு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. மாறாக, கருணை உள்ளத்தோடு ஏற்றுக் கொண்டான் என்கிறார் கம்பர்.
சீதையை இராமன் ஏற்றுக்கொள்ளல்
பாடு உறு பல் மொழி இனைய பன்னி நின்று,
ஆடுறு தேவரோடு உலகம் ஆர்த்து எழ,
சூடு உறும் மேனிய அலரி, தோகையை
மாடு உறக் கொணர்ந்தனன்; வள்ளல் கூறுவான்: 83
'அழிப்பு இல சான்று நீ, உலகுக்கு; ஆதலால்,
இழிப்பு இல சொல்லி, நீ இவளை, "யாதும் ஓர்
பழிப்பு இலள்" என்றனை; பழியும் இன்று; இனிக்
கழிப்பிலள்' என்றனன்-கருணை உள்ளத்தான். 84
கம்பராமாயணம்-யுத்தகாண்டம்-பிராட்டி திருவடி தொழுத படலம்-(47-65, 83-84)
விளக்கவுரை இங்கே...
உண்மையான பக்தர்கள் மன்னிக்கவும். தவறான நோக்கத்தில் இங்கே இதைப் பதிவு செய்யவில்லை. ஆனால் என்னதான் வியாக்கியானம் தரப் பட்டாலும் பெண்ணடிமைத்தனத்திற்கு இதை விடச்சிறந்த சான்று இருக்க முடியாது என்பது வருந்தத் தக்க செய்தி.
பெண் பதிவர்கள் இதைப்பற்றி கருத்துச் சொல்லலாமே?
விளக்கவுரையைப் பதிவிட்ட ரத்னேஷுக்கு நன்றி.
05:30 Posted in இலக்கியம் | Permalink | Comments (5) | Email this | Tags: ram, ராமன்
Tuesday, 10 July 2007
❒ ஆரியம் எங்கே போனது?
ஜாலிஜம்பர் என்பவர் ஒரு பதிவு இட்டிருந்தார்.
==========================
தமிழ்த்தாய் வாழ்த்து-இடை உருவல்
தமிழ்த்தாய் வாழ்த்திலிருந்து ஒரு வரி நீக்கப்பட்டுள்ளது.
நீக்கப்பட்ட அந்த வரி,
ஆரியம் போல் உலகவழக்கு அழிந்து படாது இருக்கும்
உந்தன் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே!
இந்த நீக்கத்தின் பின்ணனி தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளுங்களேன்.
===========================
முதலில் இந்த தமிழ்த்தாய் வாழ்த்து எப்படி வந்தது என்று பார்ப்போம். இது தமிழ்நாட்டின் தமிழ்த்தாய் வாழ்த்தாகவே எழுதப் பட்டது அல்ல.
மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளை தனது மனோன்மணீயம் நாடகத்தின் பாயிரமாக கடவுள் வணக்கம் என ஒரு கடவுள் வாழ்த்தையும் கூடவே தமிழ்த் தெய்வ வணக்கம் என்ற தலைப்பில் இன்னொரு பாடலையும் எழுதி இருந்தார்.
அந்தப் பாடல் இது தான்.
-oOo-
தமிழ்த் தெய்வ வணக்கம்
(பஃறாழிசைக் கொச்சகக்கலிப்பா)
நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெருந் தமிழணங்கே.
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள் முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையா ளமுந்துளுவும்
உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடுனும்
ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாஉன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே
கடல்குடித்த குடமுனியுன் கரைகாணக் குருநாடில்
தொடுகடலை யுனக்குவமை சொல்லுவதும் புகழாமே.
ஒரு பிழைக்கா அரனார்முன் உரையிழந்து விழிப்பாரேல்
அரியதுன திலக்கணமென் றறைவதுமற் புதமாமே.
சதுமறையா ரியம்வருமுன் சகமுழுது நினதாயின்
முதுமொழிநீ அநாதியென மொழிகுவதும் வியப்பாமே.
வேகவதிக் கெதிரேற விட்டதொரு சிற்றேடு
காலநதி நினைக்கரவாக் காரணத்தி னறிகுறியே.
கடையூழி வருந்தனிமை கழிக்கவன்றோ அம்பலத்துள்
உடையாருன் வாசகத்தி லொருபிரதி கருதினதே.
தக்கவழி விரிந்திலகுஞ் சங்கத்தார் சிறுபலகை
மிக்கநலஞ் சிறந்தவுன்றன் மெய்ச்சரித வியஞ்சனமே.
வடமொழிதென் மொழியெனவே வந்தவிரு விழியவற்றுள்
கொடுவழக்குத் தொடர்பவரே கிழக்கொடுமேற் குணராரே.
வீறுடைய கலைமகட்கு விழியிரண்டு மொழியானால்
கூறுவட மொழிவலமாக் கொள்வர்குண திசையறியார்.
கலைமகடன் பூர்வதிசை காணுங்கா லவள் விழியுள்
வலதுவிழி தென்மொழியா மதியாரோ மதியுடையார்.
பத்துப்பாட் டாதிமனம் பற்றினார் பற்றுவரோ
எத்துணையும் பொருட்கிசையும் இலக்கணமில் கற்பனையே.
வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மநுவாதி யொருகுலத்துக் கொருநீதி
மனங்கரைத்து மலங்கெடுக்கும் வாசகத்தில் மாண்டோர்கள்
கனஞ்சடையென் றுருவேற்றிக் கண்மூடிக் கதறுவரோ.
எனவாங்கு
நிற்புகழ்ந் தேத்துநின் நெடுந்தகை மைந்தர்
பற்பலர் நின்பெரும் பழம்பணி புதுக்கியும்
பொற்புடை நாற்கவிப் புதுப்பணி குயிற்றியும்
நிற்பவர் நிற்க நீபெறும் புதல்வரில்
அடியேன் கடையேன் அறியாச் சிறியேன்
கொடுமலை யாளக் குடியிருப் புடையேன்
ஆயினும் நீயே தாயெனுந் தன்மையின்
மேயபே ராசையென் மீக்கொள ஓர்வழி
உழைத்தலே தகுதியென் றிழைத்தவிந் நாடகம்
வெள்ளிய தெனினும் விளங்குநின் கணைக்காற்கு
ஒள்ளிய சிறுவிர லணியாக்
கொள்மதி யன்பே குறியெனக் குறித்தே.
அவையஞ்சின நெஞ்சொடு கிளத்தல்.
(நேரிசை வெண்பா)
அமைய அருளனைத்தும் ஆட்டுமேல் நெஞ்சே
சுமைநீ பொறுப்பதெவன் சொல்வாய் - நமையுமிந்த
நாடகமே செய்ய நயத்தால் அதற்கிசைய
ஆடுவம்வா நாணம் அவம்.
பாயிரம் முற்றிற்று.
-oOo-
தமிழ்நாட்டின் தமிழ்த்தாய் வாழ்த்தை தேர்வு செய்ய பல பாடல்கள் பரிசீலிக்கப் பட்ட போது இந்தப் பாடலும் அந்தப் பரிந்துரையில் இருந்தது. இறுதியில் இந்தப் பாடலின் முதல் இரு பத்திகள் தேர்வு செய்யப் பட்டன. எனினும் இரண்டாம் பத்தியின் பொருள்
இடைவிடாது பல உயிர்கள், பல உலகம் படைத்தளித்துக்கொண்டே இருந்தாலும் பரம்பொருளாகிய இறைவன் முன் இருந்தபடியே (சோர்வின்றி) இருப்பது போல
கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு என பலமொழிகள் உன்னிடமிருந்து பிறந்தாலும் ஆரிய மொழியாகிய சமற்கிருதம் போல வழக்கொழிந்து போய்விடாமல் என்றும் இளமையுடன் புதுமை குன்றாமல் இருக்கும் உன் திறனை வாழ்த்துவோம்
என்பதாக வருகிறது.
எனவே 'பிறமொழிகளைப் பற்றிய ஒப்பீடு அவசியமில்லை, முதற்பத்தி மட்டுமே போதும்' எனக் கருதி கூடவே அதற்கு முத்தாய்ப்பாக 'இரண்டாம் பத்தியின் இறுதி வரி'யை மட்டும் தேர்வு செய்தார் அன்றைய முதல்வராக இருந்த இன்றைய முதல்வர் கருணாநிதி.
எனவே கிட்டத்தட்ட ஐம்பது வரிகள் இருந்த பாடலில் இருந்து மொத்தம் ஏழுவரிகள் மட்டுமே இறுதியாக தேர்வு செய்யப் பட்டன.
இடையில் (பரிந்துரை செய்யப் பட்ட இரு பத்திகளில்) என்று பார்த்தாலும் நீக்கப் பட்டது ஒருவரி அல்ல. இரண்டாம் பத்தியின் ஐந்து வரிகள் நீக்கப் பட்டு ஒரு வரி மட்டுமே தேர்வு செய்யப் பட்டது.
04:50 Posted in இலக்கியம் | Permalink | Comments (10) | Email this | Tags: tamil, தமிழ், வாழ்த்து
Friday, 11 May 2007
❒ வட்டாரத் தமிழில் நூல்கள் கூடாது-அன்பழகன்
சென்னை தமிழ், மதுரை தமிழ்,கோவைத் தமிழ், நெல்லைத் தமிழ் என தமிழை வட்டார வழக்கின் அடிப்படையில் பிரிக்கக் கூடாது. வட்டாரச் சொற்களைக் கொண்டு நூல்களை இயற்றவும் கூடாது என்று நிதியமைச்சர் அன்பழகன் கூறியுள்ளார்.
காஞ்சி மணிமொழியார் தமிழ்ப் பேரவை சார்பில் மணிமொழியார் 108வது பிறந்த நாள் விழாவும், பெரியாண்டவனின் சிந்தாமணித் திறன் நூல் வெளியீட்டு விழாவும் சென்னையில் நடந்தது.
எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம். வீரப்பன் தலைமை தாங்கினார். அன்பழகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிந்தாமணித் திறன் நூலை வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் அன்பழகன் பேசுகையில், எண்ணங்களை வெளியிட உரைநடை போல எதுவும் இல்லை. தற்போது மண்ணின் வாசனையுடன் தமிழில் நூல்கள் வருகின்றன. ஆனால் சமீப காலமாக வெளியிடப்படும் நூல்களில் வட்டாரச் சொற்கள் அதிகம் தலை தூக்குகின்றன.
இப்படி எழுதுவதால் தமிழ் பல தமிழாக பிரியும் நிலை ஏற்படும். பின்னர் எந்தத் தமிழ் சிறந்த தமிழ் என்ற தேவையில்லாத விவாதங்களும் ஏற்படலாம். கடைசியில் தவறான மொழி உச்சரிப்பு உடையதே நல்ல தமிழ் என்ற நிலையும் ஏற்படலாம்.
சென்னை தமிழ், மதுரை தமிழ்,கோவை தமிழ், நெல்லை தமிழ் என தமிழைப் பிரிக்கக் கூடாது. அந்த வட்டாரங்களில் புழங்கும் சொற்களைக் கொண்டு நூல் எழுதக் கூடாது. அதுபோன்ற வட்டாரச் சொற்கள் இடம் பெற ஊக்கம் தரக் கூடாது. தமிழைத் தமிழாக, பிழையில்லாமல் அச்சில் ஏற்ற வேண்டும்.
தமிழ் இனம் பண்பாட்டை வைத்துத்தான் மதிக்க வேண்டுமே தவிர பதவிகளை வைத்து மதிக்க்க கூடாது.
தமிழ் இலக்கியத்திலேயே கடினமான இலக்கியம் எது என்றால் அது சீவக சிந்தாமணிதான். அந்த நூலை தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதய்யர் ஆய்வு நடத்தி சொல் வண்ணங்களைக் கொண்டு அச்சுக்குக் கொண்டு வந்தார்.
அந்த நூலை அச்சுக்குக் கொண்டு வர அவர் எவ்வளவு பாடுபட்டு இருப்பார். சிலப்பதிகாரம், மணிமேகலையைக் காட்டிலும் மக்களை இந்த நூல் மிகவும் கவர்ந்தது. உலக வாழ்க்கையின் உண்மையை வெளிக் கொண்டு வருவதாக இந்த நூல் அமைந்துள்ளது என்றார் அன்பழகன்.
செய்தி: தட்ஸ்தமிழ்
-oOo-
தலையெழுத்த்து...!
05:35 Posted in இலக்கியம் | Permalink | Comments (7) | Email this | Tags: tamil, தமிழ், இலக்கியம்
Tuesday, 06 March 2007
❒ முலைகள் என்னும் கெட்டவார்த்தை
தமிழ்நதியின் குட்டி ரேவதி நேர்காணல் தந்த உணர்வலைகள்
சின்ன வயதில் அதிகமும் வெளியூர்களில் இருந்ததால் ஊர் பழக்க வழக்கங்கள் பற்றி அதிகம் தெரியாது. என் 23ம் வயதில் திரும்ப ஊருக்கு வந்த பிறகு கெட்டவார்த்தைகள் என்று சொல்லப் படுகிற வார்த்தைகள் சின்னக் குழந்தைகளின் வாய் வழிக் கூட புகுந்து புறப்படுவது ஒரு கலாச்சார அதிர்ச்சியாகவே எனக்குத் தென்பட்டது.
குமுதம் விகடன் கல்கி வழி கட்டமைக்கப் பட்டிருந்த என் வெளியுலக சிந்தனைகள் எனக்குத் தந்த அதிர்ச்சி அது. அதற்குள்ளாக தமிழின் ஏராளமான இலக்கியங்களை? வாசித்திருந்தாலும் அவையும் மணிப்பிரவாள, செந்தமிழ் நடையில் தந்திருந்த பிம்பங்களில் அந்தச் சொற்கள் இருக்கவில்லை. அந்தச் சொற்களின் பொருள் அதற்கு மேலான அருவ்வெறுப்பை அளித்தது. பல நாட்கள் அந்த அருவெறுப்பின் குமட்டலில் தவித்திருக்கிறேன்.
சில நாட்களிலேயே இன்னொரு உண்மை எனக்குப் புரிபட்டது. அப்படி அருவெறுப்பான வசை மழை பொழிந்த இரண்டு பேர் மூன்றாம் நாள் தோளில் கை போட்டபடி என்னைக் கடந்து சென்ற காட்சி தந்த அதிர்ச்சி விவரிக்க முடியாதது. அப்படியொரு வார்த்தையை பேசி விட்டு மறுபடி எப்படி இவர்களால் சகஜமாக இருக்க முடிகிறது?
பின்னரே கோபத்தை வெளிப்படுத்தும் வெற்று வசைகளாகத்தான் அவர்கள் அதைப் பயன் படுத்துகிறார்கள் என்பதும் எப்போது சொல் வெளியாகிறதோ அப்போதே ஆத்திரமும் வெளியேறி விடுகிறது என்பதையும் அறிந்து கொண்டேன். நாவினால் சுட்ட வடு... எல்லாம் ஏட்டுச் சுரைக்காய்! அது இங்கே உதவாது...
அந்த வெ...ளி.. , தா...ளி.. உள்ளிட்ட ஏராளமான வசைச் சொற்களில் எந்த உட்பொருளும் அவர்களிடையே இல்லை. குறிப்பாக தாயைப் புணர்ந்தவனே என்பது பல வசைச்சொற்களின் நிரந்தர கருப்பொருளாக இருந்த போதிலும் அந்த வசை அவர்களில் எந்த அருவெறுப்புக்கும் குறிப்பிட்ட பொருள் உணர்த்தும் வசைக்கும் காரணமாக இருக்கவில்லை. மாறாக ஒரு கோபக்குறிச் சொல்லாக மட்டும் பயன்படுத்தப் படுவதால் பொருளுரைக்கும் நமக்குத் தவிர பயன்படுத்தும் அவர்களுக்கு எந்த வெறுப்புணர்வும் அருவெறுப்பும் ஏற்படவில்லை எனக் காண முடிந்தது.
பின்னர் சிற்றிதழ்களோடு பரிச்சயமேற்பட்ட போது அவற்றில் இந்த வசைகள் பயன்படுத்தப் பட்டு வந்த போது படித்தவர்களும் இதை எழுதுகிறார்களே? அவர்கள் இதன் பொருளுணராமலா பயன்படுத்துகிறார்கள் என்ற கேள்வி என்னைக் குடைந்தது.
மக்களின் இயல்புச் சொற்களை வட்டார வழக்காக பயன்படுத்துவதும் அதே நோக்கத்தில் தான் என்பதையும் இலக்கியத்தின் மீறல் பண்பும் உணர ஆரம்பித்த போது தான் என்னால் இயல்பாக இவற்றை எதிர்கொள்ள முடிந்தது.
உண்மையில் இரண்டுக்கும் வேறுபாடு உண்டு. மக்கள் சரளமாக பயன்படுத்தும் சொற்களை வட்டார வழக்கில் இயல்பாக பயன்படுத்தும் வகையான இலக்கியம் தவிர இந்த பெண்ணியப் படைப்புகளில் கூறும் உடல் மொழி குறித்த இயல்பான படைப்புகள் மற்றவர்களுக்கு அதிர்ச்சியூட்டுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
இலக்கியத்தின் மீறல் என்பது வெற்று வார்த்தைகளல்ல. அவை கலாச்சார தளத்தில் நிச்சயம் அதிர்ச்சி அலைகளை தோற்றுவிக்கும். தோற்றுவிக்க வேண்டும். சிந்திக்கப் பட வேண்டும் அவை ஏன் சொல்லப் படுகின்றன என்பதன் காரணம் உணரப் பட வேண்டும்.
முலைகளை எழுதும் பெண்களை சுட்டுக் கொல்லத் துடிக்கிற பெருங்கவிகள் இடுப்பு துடிக்குது ரவிக்கை வெடிக்குதுன்னு பாட்டெழுத முடிகிற கவிப் பெருந்தகைகளை என்ன செய்யப் போகிறார்கள் என்று சொன்னால் தேவலாம். கல்யாணம் கட்டிக்காமல் பெத்துக்காலான்னு மூணு வயசு குழந்தை கூட பாடுதே இதுக்கு எந்த பெண்ணியக் கவி காரணம்? தாய்மையின் முலைகளை எழுதக்கூடாதென்னும் கவிஞர்கள் பெண்ணின் பருவச் சமைதலை ஆபாசப் பாட்டாக விற்கலாம். அவர்களுக்கு விருதுகளும் வழங்கிச் சிற்பிக்கலாம். வாழ்க்கையை எழுதுகிற பெண்களை துரத்தித் துரத்தி கல்லாலடிக்கலாம்.
என்ன செய்ய எனக்கு 23 வயதில் கிடைத்த ஞானம் இவர்களுக்கு இன்னும் வரவில்லை என்று தோன்றுகிறது.
-oOo-
...சில சமயம் கழிச்சல் துடைப்பதற்கு உதவலாம் என்ற போதிலும் ஏடுகள் எல்லாவற்றுக்கும் உதவாது...சமூகத்தின் அனுபவ பாடங்கள் ஏடுகளில் கிடைக்காது. அனுபவ அறிவே கிடைக்காமல் பீடங்களில் இருந்து கொண்டு பீற்றிக் கொள்ளுகிறவர்களை படைப்பாளிகளாக ஏற்பது தமிழின் சாபக்கேடு. வாழ்க்கையை படித்து எழுதப் படும் எழுத்தின் வீரியம் அவற்றில் இல்லை.
குறிப்பு: நான் படித்த புத்தகங்களில் இருந்த தாய்ப்பால் கிராமங்களில் இல்லை. அங்கே இருப்பதெல்லாம் முலைப்பால் மட்டுமே!
06:05 Posted in இலக்கியம் | Permalink | Comments (16) | Email this | Tags: kavitai, கவிதை, தமிழ்ப்பதிவுகள்
Sunday, 11 February 2007
❒ நூல்கள் நாட்டுடமை
சென்னை, பிப். 11-
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழுக்கு பெருந்தொண்டாற்றிச் சிறப்புமிக்க நூல்களைப் படைத்துள்ள தமிழ்ச் சான்றோர்களின் நினைவைப் போற்றும் வகையிலும் அவர்களின் படைப்புகள் பெருமளவில் மக்களைச் சென்றடையும் நோக்கிலும் அவர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்தம் மரபுரிமையினருக்குப் பரிவுத் தொகைகள் அரசால் அளிக்கப்பட்டு வருகின்றன.
அவ்வகையில்
1. மயூரம் வேதநாயகம் பிள்ளை.
2. சக்தி வை.கோவிந்தன்.
3. தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்.
4. த.நா.குமாரசாமி.
5. கா.சு.பிள்ளை.
6. புலவர் குலாம் காதிறு நாவலர்.
7. வை.சதாசிவப் பண்டாரத்தார்.
8. டாக்டர் சி.இலக்குவனார்.
9. மகாவித்வான் தண்டபாணி தேசிகர்.
10. தி.ஜ.ரங்கநாதன் (தி.ஜ.ர.)
11. நாரண துரைக்கண்ணன்
12. டாக்டர் மா.இராசமாணிக் கனார்.
13. டாக்டர் வ.சுப.மாணிக்கம்.
14. புலவர் கா.கோவிந்தன்
ஆகிய பதினான்கு தமிழ்ச் சான்றோர்களின் நூல்களை அரசுடைமையாக்கி அவர்கள் ஒவ்வொருவர் குடும்பத்தாருக்கும் தலா ரூ. 6 லட்சம் வீதம் பரிவுத் தொகை வழங்கிட அனுமதித்து முதல்- அமைச்சர் கருணாநிதி இன்று அறிவித்துள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-oOo-
செய்தி : மாலைமலர்
17:45 Posted in இலக்கியம் | Permalink | Comments (3) | Email this | Tags: books, தமிழ்ப்பதிவுகள்
Wednesday, 07 February 2007
❒ ஜெயகாந்தனும் கலைஞர் விருதும்
சமீபத்தில் ஜெயகாந்தனுக்கு முரசொலி அறக்கட்டளையின் கலைஞர் விருதை கருணாநிதி வழங்கினார். ஜெயகாந்தனைப் போன்ற சிறந்த எழுத்தாளர் ஒருவர் அந்த விருதைப் பெற்றதில் எந்த ஆச்சரியமும் இல்லை தான்.
ஆச்சரியங்கள் ஜெயகாந்தனிடம் தான் இருக்கிறது.
சாகித்ய அகாடமி விருது அவருக்குக் கிடைத்த போது அவர் சொன்னது "எனக்கு விருது கொடுத்ததன் மூலம் சாகித்ய அகாடமி தன்னைப் பெருமைப் படுத்திக் கொண்டது"
ஞானபீடம் வழங்கப் பட்டபோது "ஞானபீடத்திற்கே ஞானபீடமா?" என்று கேட்டவர் அவர்.
மேடை தோறும் திமுகவை எதிர்த்து முழங்கியவர் ஜெயகாந்தன். அவர் சார்ந்திருந்த கம்யூனிஸ்ட் கட்சி திமுகவுடன் கூட்டணி கண்டபோது அப்போது எதிர் அணியில் இருந்த காங்கிரஸ் மேடையில் ஏறி திமுகவை கிழித்தார்.
"பதவி, பட்டம், வெகுமதி செல்வம் இவை தேடாமலும் வரும். வருவதையெல்லாம் நான் அங்கீகரிக்க மாட்டேன். எனது எல்லைகளை கறாராக தீர்மானித்தே ஏற்பேன்" என்று ஒருமுறை எழுதியிருக்கிறார்.
கருணாநிதியிடம் கலைஞர் விருது பெற்ற போது ஜெயகாந்தன் கூறினார்.
"நிறைய விருதுகளை நான் பெற்றிருக்கிறேன். நான் அறிந்தவரை இதுதான் மிகவும் சிறப்பான விருது என்று நான் கருதுகிறேன்."
கம்பீரமாக உலாவந்த எழுத்துலக சிங்கம் தன் எழுத்தை சில காலம் நிறுத்தி வைத்திருந்தது. அது மீண்டும் எழுதத் தொடங்கிய போது அது கிழச்சிங்கம் என்பதை உலகுக்கு உணர்த்தியது.
இப்போது மீண்டும் தன் சொல்லாலும் செயலாலும் சிங்கம் சிறிது சிறிதாக உருமாறி சிறுநரியாகி வருவதை உணர்த்தி விட்டார்.
09:20 Posted in இலக்கியம் | Permalink | Comments (22) | Email this | Tags: jayakanthan, kalaignar, தமிழ்ப்பதிவுகள், tamilblogs
Friday, 02 February 2007
நமக்கெதுக்கு வம்பு
உலகத்தில் உள்ள அத்தனை கார் மெக்கானிக்குகளும் ஏமாற்று வேலைக் காரர்கள் என்றால் நான் ஒப்புக் கொள்ள மாட்டேன்.இரண்டு மூன்று பேர் நல்லவர்களும் இருக்கிறார்கள். எனக்கு வாய்த்த மெக்கானிக் துரதிர்ஷ்ட வசமாக, முன் பட்டியலைச் சார்ந்தவர்.'தேமேனு' சென்று கொண்டிருநத என் காரின் உட்பகுதியில் சில வினோத சப்தங்கள் திடீரென்று ஜனிக்க, மெக்கானிக்கிடம் அழைத்துச் சென்றேன். அவர் ஒரு முறை ஓட்டிப் பார்த்து 'ஸஸ்பென்ஷன் புடுங்கிக்கிச்சு' என்று சொன்னார்.
என்னதான் நான் இன்ஜினியாரக இருந்தாலும் என் திணை துறை எல்லாம் வேறு. மோட்டாரின் உள் அவஸ்தைகளைப் பற்றிய என் அறிவை ஒரு பஸ் டிக்கெட்டின் பின் பக்கத்தில் எழுதிவிடலாம் உதாரணமாக ஸஸ்பென்ஷன் எங்கிருக்கிறது என்று சுத்தமாகத் தெரியாது எனக்கு இருந்தும் என் அறியாமையை மெக்கானிக்கிடம் காட்டிக் கொள்ள விழையாமல்"அப்படியா? மாத்திட்டாப் போச்சு" என்றேன்
அந்த ஆள் உடனே ஒரு பழைய சாக்கை விரித்து காரின் அடியில் மறைந்தார். அங்கிருந்து பேசினார் "கிட்டு நீங்க வாங்கிட்டு வரீங்களா! நான் வாங்கிட்டு வரவா"
"அது எங்க கிடைக்கும்?"
"ஜே,ஸ’, ரோடு போகணும்"
சரிதான் நீங்க ஒண்ணு செய்யுங்க மொத்தமா ரிப்பேருக்கு எவ்வளவு ஆகும்னு எஸ்டிமேட் போட்டு சொல்லிடுங்க"
"அதெப்படிஙக முளுக்க பார்க்காம சொல்லிட முடியாதே"
"முளுக்கப் பாருங்களேன்"
அவர் பார்க்கும் நேரத்தில் நான் அந்தப் பட்டறையை விட்டு வெளியே வந்தேன்.திரும்பிப் பார்த்தால் என் கார் ஜாக்கி போடப்பட்டு பரபரவென்று முன் சக்கரங்கள் நீக்கப் பட்டு எண்ணைக் கசிவுடன் வெவ்வேறு வடிவங்களில் உதிரிப் பாகங்களை இழந்து கொண்டிருந்தது. என் வயிற்றில் கவலை கவ்விப் பிடித்தது. கழற்றிக் கழற்றி இதற்கு நு‘று அதற்கு ஐம்பது என்று ஏற்றிக் கொண்டே செல்லப் போகிறார்.கார் உள்ளே சத்தம் வந்தால் என்ன குறைந்து போய்விடும் ? வெட்டி வம்பில் மாட்டிக் கொண்டேன் என்று சுயமாகச் சபித்துக்கொண்டே வெளியே வந்தேன்.
அந்தப் பட்டறை தெரு முனையில் இருந்தது.மில்கார்னர் சென்ட்ரலுடன் ஒட்டிக் கொள்ளும் இடம். காலை பத்து. போக்கு வரத்து கணிசமாக இருந்தது.எத்தனையோ கார்கள் ஆரோக்கியமான சஸ்பென்ஷனுடன் சென்று கொண்டிருந்தன.அருகே ஒரு ஓட்டலில் காப்பி சாப்பிட்டு விட்டு என் பலிபீடத்துக்குத் திரும்புகையில் அந்த விபத்தைப் பார்த்தேன்.
ஒரு கிழவன் சென்ட்ரல் தியேட்டர் பக்கத்திலிருந்து சைக்கிளில் 'லொடக்கா லொடக்கா'என்று சப்தமிட்டுக் கொண்டு வந்து கொண்டிருந்தான். மெயின் ரோடில் காவி நிறத்தில் ஒரு 'மெட்டடார்' வேன் வந்து கொண்டிருந்தது. கிழவன் யோசிக்காமல், பார்க்காமல், நிறுத்தாமல், முட்டாள்தனமாக சரேல் என்று திரும்பி வேனின் குறுக்கே சென்று விட்டான்.அதன் டிரைவருக்கு ப்ரேக் போட சந்தர்ப்பமே கிட்டவில்லை . டம் என்று சப்தம் கேட்டது அப்புறம் நான் கிழவனைப் பார்க்கவில்லை. என் வயிற்றில் பந்து சுருண்டு கொண்டது.
பரபரவென்று கூட்டம் கூடிவிட்டது. எனக்கு என்ன ஆயிற்று என்று அறிந்து கொள்ளும் ஆவல் பற்றிக் கொண்டது. ஆனால் அங்கே செல்லத் தயக்கமாக இருந்தது . இருந்தும் மெல்ல நெருங்கினேன். வேன் நின்றிருந்தது.கிழவன் மேல் சுத்தமாக ஏறிவிட்டது. சைக்கிள் காய்ச்சிய அப்பளம் போலக் கிடந்தது.
கிழவன் கீழே ஒருக்களித்துப் படுத்தவாறு இருந்தான்.அவன் மண்டையில் அடிபட்டு பக்கவாட்டில் ரத்தம் கசிந்து கொண்டிருந்தது வாய் திறந்திருந்தது.உடல் ஒரு வித நடுக்கம் போல் ஆடிக் கொண்டிருந்தது அவன் உயிர் விரைவில் பிரிந்து கொண்டிருந்தது. அவனைச் சுற்றியிருந்த நாங்கள் அதாவது பங்களூர் நகரத்தின் பொறுப்புள்ள பிரஜைகள் எப்படி நடந்துகொண்டோம்? சொல்கிறேன்.
"டிரைவர் எங்கய்யா?"
"அதோ உக்காந்துக்கிட்டிருக்காரு"
"நான் இல்லிங்க டிரைவர்"
"ஆசாமி இறந்துக்கிட்டிருக்கான் து‘க்குங்க"
"தூக்காதிங்க! போலிஸ் வரட்டும்"
"அந்த ஆட்டோவை நிறுத்துய்யா"
நிறுத்தப் பட்ட ஆட்டோ கூட்ட வளையத்தை முத்தமிட்டுவிட்டு உடனே வேகம் பிடித்துப் பறந்தது அருகே கடந்த பி.டி.எஸ் பஸ்ஸ’ன் ஜன்னல் பூரா முகங்கள்!"பிரசன்னா žக்கிரம் வந்து பாரு!" என்று பஸ்ஸ’ன் உள் ஒரு அழைப்புக் கேட்டது.
"போலிஸ் வரட்டும் அது வரைக்கும் ஒண்ணும் செய்யக் கூடாது"
"டெலிபோன் செய்யுங்களேன்"
"ஸார் நீங்கதான் போய் செய்யுங்களேன்"
"எனக்கு அர்ஜண்டா வேலை இருக்கு.போலிஸ் வந்துருவாங்க"
இப்போது கிழவனின் நடுக்கம் நின்றிருந்தது. வாயால் பெரிசாக மூச்சு விட்டதால் வழிந்த ரத்தத்தில் காற்றுக் கொப்புளங்கள் வெடித்தன.
"ஆள் யாருஙக"
"யாருக்குத் தெரியும்"
"கூட ஒருத்தரும் வரலியா"
"நீங்க என்ன பண்றிங்க எதிர்த்தாப்பல ஓட்டலுக்குப் போய் போன் பண்ணிடுங்க" என்று என்னை ஒருவர் தேர்ந்தெடுத்தார். நான் மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் ஓட்டலுக்குச் சென்றேன்.அங்கே உற்சாகமாக எல்லோரும் டிபன் பண்ணிக் கொண்டிருந்தார்கள் "டெலிபோன் செய்யணும்"
"எழுபத்தஞ்சு பைசா"
"தர்றேன்"
"முதல்ல கொடுத்துடுங்க எஸ்.டி டி கூடாது" "இல்லை . போலிசுக்கு போன் செய்யணும். ஒரு ஆக்ஸ’டெண்ட்"
"பண்ணிக்கங்க"
"டைரக்டரி வேணும். அவசர போலிஸ் உதவிக்கு என்ன நம்பர் செய்யணும்?"
"தெரியாது"
"டைரக்டரி இல்லையா?"
"இல்லை!"
"அந்தாளு இறந்துகிட்டு இருக்கான்"
"ஸார் நான் உங்களுக்கு ஒரு விஷயம் சொல்லட்டுமா-"
"என்ன?"
"இதில மட்டும் மாட்டிக்காதிங்க"
"எதில?"
"ஆக்ஸ’டெண்ட் கேஸ’ல நான் ஒரு முறை ,இந்த மாதிரி ஆகஸ’டெண்ட் கேஸ்தான், வழில கிடக்கான்.கார்ல எடுத்திட்டு ஆஸபத்திரிக்குப் போனேன்.'அங்க ஏன் கொண்டு வந்தே மெடிக்கோ லீகல் கேஸ். விக்டோரியா ஆஸ்பத்திரிக்கு எடுத்துப் 'போ'ன்னாங்க. விக்டோரியா எவ்வளவு து‘ரம்?- அங்கே போனேன் ."அங்க போனா 'போலிஸ்காரங்க இல்லாம எப்படி நீ பாடிய மட்டும கொண்டு வரலாம்'னு ஒரு ஓரத்தில் ஒன்றரை மணி நேரம் காக்க வெச்சாங்க அதுக்கப்புறம் அங்க போன் பண்ணி இங்க போன் பண்ணி போலிஸ் வந்தாங்க
முதல்லயே என்மேல ஏறினாங்க'எப்படிய்யா எங்களுக்கு சொல்லாம இங்க கொண்டுட்டு வரலாம்னுட்டு என்னைத் திட்டினாங்க அவங்க ஆஸபத்திரில கேஸ் எடுத்துக்கிட்ட போது ஆள் போய்ட்டான்' டெட் ஆன் அரைவல்'னு முடிச்சுட்டு கையெழுத்துப் போட்டு கிடங்குங்குக்கு அனுப்பிச்சுட்டாங்க."கேஸ் அத்தோட நின்னுச்சா? இல்லை நான்தான் ஸார் சாட்சி ஆறு மாசம் இழுத்து அடிச்சாங்க கோர்ட்டுககு .சம்மன்ஸ் வரும் அங்கே போவேன் இன்ஸபெக்டர் வந்தா கவர்மெண்ட் வக்கீல் வரமாட்டாரு ரெண்டு பேருமே வந்தா டிரைவரோட வக்கீல் ஒத்திப் போட்டுருவாரு "அன்னிக்கு ஒரு சின்ன கணக்குக்காக மொத்தம் எனக்கு ஆன செலவை கணக்குப் பண்ணிப் பார்த்தேன். கிட்டத் தட்ட ஆயிரம் ரூபா அதோட நின்னுச்சா கேஸ் ? என்ன ஆச்சு கேளுங்க ஏறக்குறைய அந்த விபத்துக்கு நானே காரணம்ங்கற மாதிரி குறுக்கு கேள்வி போட்டு கண்ல விரலை விட்டு ஆட்டிட்டான் வக்கீல். விட்டாப் போதும்னு ஆயிருச்சு எல்லாம் எதுக்காக? ஒரு குடிமகன்ங்கற முறையில் என் பொறுப்பை என் கடமையை செஞ்சதுக்கு"
"நான் பிரமிப்புடன்கேட்டுக் கொண்டிருந்துவிட்டு "யாராவது போலிசுக்கு போன் செய்ய வேண்டாமா" என்றேன்
"நீங்க தாராளமா போன் பண்ணுங்க கூப்பிட்டா கூட போய்ட்டு வாங்க .எனக்கு நடந்ததெல்லாம் சொல்லிட்டேன்"
"நம்பர் தெரியலையே"
"நு‘று பண்ணுங்க"
நான் போலிஸ•க்கு டெலிபோன் செய்துவிட்டு திரும்ப அங்கே சென்றேன் ஏற்கெனவே இரண்டு டிராஃபிக் போலிஸ் ஆசாமிகள் நின்று சாக்கட்டியில் கோடு போட்டுக் கொண்டிருந்தாரகள் நான் சென்றதும்
"இவர்தாங்க " என்றார் ஒருவர் என்னை சுட்டிக்காட்டி
"போலிசுக்கு சொல்லிட்டேன்" என்றேன்
"போலிஸ் வந்தாச்சு .பக்கத்தில்தானே சேஷாத்ரிபுரம் போலிஸ் ஸ்டேஷன். அங்கே போய் கூட்டி வந்துட்டார் டிரைவரு"
போலிஸ் இன்ஸபெக்டர என்னைப் பார்தது "கொஞ்சம் வாங்க" என்றார் நான் தயக்கத்துடன் சென்றேன்.
"நீங்க இந்த ஆக்ஸ’டெண்ட்டை பார்த்திங்களா?"
" ம்.. பார்த்தேன்"
"உங்க பேரு?" அவர் பையிலிருந்து ஒரு டயரி புறப்பட்டது.என்னுள் எச்சரிக்கை சக்திகள் உயிர் பெற்றன .
"எதுக்கு?"
" எதுக்கா?..விட்ன்ஸ் ஸார்! சாட்சி. நீங்க பார்க்கலை?"
"அது வந்து ...
